under review

தண்ணீர் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 15:51, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
தண்ணீர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தண்ணீர் (பெயர் பட்டியல்)
தண்ணீர்

தண்ணீர் (1971-1973 ) அசோகமித்திரன் எழுதிய நாவல். சென்னையின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டது. தண்ணீர் தட்டுப்பாட்டை வெவ்வேறு வகையில் குறியீடாக ஆக்கிக்கொண்டு அகவறுமையை விவாதிக்கிறது.

எழுத்து,வெளியீடு

தண்ணீர் அசோகமித்திரன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய கணையாழி சிற்றிதழில் 1971 முதல் தொடராக வெளிவந்தது. 1973-ல் நர்மதா பதிப்பகம் அதை நூல்வடிவாக்கியது. "யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என அசோகமித்திரன் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இந்நாவலின் முதல்பதிப்புக்கு சி.முத்துசாமி முன்னுரை எழுதியிருந்தார்.

தண்ணீர் நூலில் அசோகமித்திரன் கையெழுத்து

கதைச்சுருக்கம்

ஜமுனா சினிமாவில் துணைநடிகையாக இருக்கிறாள். அவளை பாஸ்கர் ராவ் ஏமாற்றிச் சுரண்டி வருகிறான். அவள் தங்கை சாயா ராணுவ வீரனின் மனைவி. அவர்களின் மகன் அவள் மாமாவில் வீட்டில் இருக்கிறான். இருவரும் தங்கள் அம்மாவை மாமா வீட்டில் விட்டு விட்டு தனியே ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக தண்ணீர்ப் பஞ்சத்தால் அலைக்கழிகிறது. அவர்களின் உறவுகளிலுள்ள ஈரமின்மையையும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் நாவல் இணையாகச் சொல்லிச் செல்கிறது.

பாஸ்கர் ராவுடன் ஜமுனாவுக்கு இருக்கும் உறவை ஏற்காத சாயா ஹாஸ்டலுக்குப் போய்விடுகிறாள். ஜமுனா தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதையறிந்த அவள் குடியிருக்கும் வீட்டுக்காரி அவளைக் காலி செய்யச் சொல்லுகிறாள். அநாதரவான நிலையில் - குழாயடியில் பரிச்சயமான டீச்சர் ஒருத்தி, அவளைத் தேற்றி ஆதரவாய்ப் பேசி வாழ்வுக்கான பார்வையை அளிக்கிறாள். ஜமுனா கருவுறும்போது அப்பொறுப்பை ஏற்க பாஸ்கர ராவ் மறுக்கிறான். அவனை சாயா வசைபாடுகிறாள். குடிநீருக்காக குழாய் போடும்போது சாக்கடை வெளிவருகிறது.

இலக்கிய இடம்

தண்ணீர் தமிழின் முதல் குறியீட்டுநாவலாக கருதப்படுகிறது. பெருநகர் நடுத்தரவர்க்கப் பின்னணியில் பெண்களின் வாழ்க்கையை முதன்மைப்பேசுபொருளாகக் கொண்டது இது. அவர்கள் மீதான சுரண்டல், அவர்கள் அடையும் உறவுச்சிக்கல்கள் ஆகியவற்றை தண்ணீர்ப்பஞ்சத்தை குறியீடாக்கி விவரிக்கிறது. முற்றிலும் ஈரமற்றுப்போன உறவுகளிலும் அடிப்படையான ஒரு கனிவை தக்கவைத்துக்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதைப் பற்றிப் பேசி நிலைகொள்கிறது. தண்ணீருக்காக குழாய் போடும்போது சாக்கடை வருகிறது. ‘தண்ணி முதல்ல சாக்கடை மாதிரி வந்தது. ஆனா அதெல்லாம் சரியாயிடும். தண்ணி வந்துடுத்து. அதுதான் முக்கியம்' என்று நாவல் மையம் கொள்கிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Oct-2022, 08:57:34 IST