under review

தில்லைக் கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 18:25, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கலம்பகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலம்பகம் (பெயர் பட்டியல்)
udumalai.com

தில்லைக் கலம்பகம் சிதம்பரத்தில் தில்லை அம்பலத்தில் கோயில் கொண்ட நடராசப் பெருமானின் பெருமையையும், தில்லைஅம்பலத்தின் சிறப்பையும் கூறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகை நூலாகும். தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர் இரட்டைப் புலவர்கள்.

ஆசிரியர்

தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயருடைய இரட்டைப்புலவர்கள். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களில் ஒருவர் பார்வை இழந்தவர், மற்றவர் நடக்க முடியாதவர். பாடல்களின் ஒரு பாதியை ஒருவர் எழுத மற்றொரு பகுதியை மற்றவர் எழுதி பாடலை முடித்தனர்.

நூல் அமைப்பு

தில்லைக் கலம்பகம் காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் கொண்டது. வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா, ஆசிரியப்பா ஆகிய பாவைகளால் ஆனது. சிவபெருமானின் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலங்கள், சிவபெருமான் தாண்டவமாடிய சபைகள், தில்லை அம்பலத்தின் நான்கு கோபுரங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகள், மண்டபங்கள் மற்றும் காமிகாகமம் (தில்லையில் பின்பற்றப்பட்ட ஆகமம்) முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

வழிவழியாய் நடராசப் பெருமானுக்கு பூசை செய்யும் உரிமை பெற்றவர்கள் என்று மூவாயிரவரைப் பற்றி ( 'தில்லை மூவாயிரம் பூசை புரிபாதம்' ) குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் நடை

சீர்கொண்ட மன்றம் என்றும் திருச்சிற்றம்பலம் என்றும்
ஏர்கொண்ட பொழில் தில்லை எழில் பொன்னம்பலம் என்றும்
வார்கொண்ட முலை உமையாள்வாழ் பேரம்பலம் என்றும்
பேர்கொண்ட கனகசபை பெரும்பற்றப் புலியூரோய்
காதில் இரண்டு பேர், கண்டோர் இரண்டு பேர்,
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்,
பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்,
ஓங்கு புலியூரர்க்குபெண்ணான பேர் இரண்டு பேர்

சிறப்புகள்

கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்
காஞ்சிமா நகருறை லிங்கம்;
காவிரி வடபால் வருதிரு ஆனைக்
காவினில் அப்புலிங் கமதாம்
வடதிசை அண்ணா மலையினில் லிங்கம்
வன்னியின் வடிவு; காளத்தி
வாயுலிங் கமதாம்; சிதம்பர லிங்கம்
மாசில்ஆ காயலிங் கமதாம்.

என்று காஞ்சீபுரம் – நிலம் (ப்ருத்வீ), திருவானைக்கா – நீர் (அப்பு),திருவண்ணாமலை – தீ (தேயு, வன்னி-அக்னி) , திருக்காளத்தி — காற்று (வாயு), சிதம்பரம் – வானம் (ஆகாயம்) ஆகிய பஞ்சபூத லிங்கங்களும், தலங்களும் குறிப்பிடப்படுகின்றன.

தில்லை மூவாயிரவர் பூசை புரி பாதம்
தேவருடனே இருவர் தேடரிய பாதம்
வல்லமாகாளியுடனே வாதுபுரி பாதம்
மாமுனிவர்காய் யமனை மார்பில் உதைபாதம்
சொல்லவே பரவையிடம் தூது சென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டு செயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீர நடமாடும்
ஆதிபுலி யூரர் திருவம்பலவர் பாதம்

தில்லையில் உயிர் நீக்க வேண்டும் எனும் சம்பந்த முனிவரின் விருப்பத்தைச் சொல்லும் பாடல்

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் இப் பாழ் உடலம்
கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப் படினும்
புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி
இழுத்துச் செத்தாலும் சிதம்பரத்தே சென்று இறத்தல் நன்றே.

உசாத்துணை

இரட்டைப்புலவர் பிரபந்தம்-மூலமும் உரையும் பஞ்ச பூத ஸ்தலங்களுக்கான தில்லைக் கலம்பகப் பாடல் சிந்தைக்கினிய தில்லைக் கலம்பகம்-தினமணி



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Dec-2022, 19:13:34 IST