first review completed

இசைப்பாடல்

From Tamil Wiki
Revision as of 20:13, 22 April 2022 by Logamadevi (talk | contribs)
பாரதியார் இசைப்பாடல்

Lyric என்ற கிரேக்க மொழி சொல்லில் இருந்து பிறந்த இலக்கிய வடிவம் இசைப்பாடல். Lyra என்னும் இசைக்கருவியை இசைத்துப் பாடத்தக்க வடிவம் என்பதால் இப்பெயர் பெற்றது. இப்பாடல் வகை குறைந்த வரிகளைக் கொண்டது. ஒரு மனிதனின் உணர்வையோ, சிந்தனையையோ பாடல் வடிவில் முன்வைப்பது.

இசைப்பாடல்

உலகின் எல்லாப் பழம்பெரும் நாகரீகத்திலும் இசைப்பாடல் போன்ற வடிவம் இருப்பதை ஆய்வாளர் எம். வேதசகாயகுமார் சுட்டிக் காட்டுகிறார். எகிப்து, ஹீப்ரு, லத்தீன் போன்ற மொழிகளில் பழைமையான இசைப்பாடல் வடிவங்களைக் காணலாம். ஆய்வாளர்கள் ஐரோப்ப மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தை இசைக்காலகட்டமாக குறிப்பிடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த உணர்ச்சிமையவாதக் கவிஞர்கள் இசைப்பாடல் வடிவத்தையே தங்கள் கவிதையில் கையாண்டனர். ஷெல்லி, கீட்ஸ், பைரன் போன்ற கவிஞர்களின் இசைப்பாடல் புகழ்பெற்றவை.

தமிழலக்கியத்தில் இசைப்பாடல்

உணர்ச்சி மையவதாகக் கவிஞர்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் இருபதாம் நூற்றாண்டில் தமிழிலும் இசைப்பாடல் வடிவம் செல்வாக்கு பெற்றது. ”சங்கச் செவ்வியல் இலக்கியத்தில் சில பாடல்கள் இதன் சாயல்கொண்டு காணப்படுகின்றன” என எம். வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.

இசைப்பாடல் இலக்கிய வடிவத்திற்கு பாரதியின் பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு. பாரதி தன் கவிதைகளை இசையமைத்துப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட வகை மன நிலையை உணர்த்தும் நோக்கம் கொண்டவை. இசைப்பாடல் இலக்கிய வடிவத்திற்கு பாரதியின் தேசபத்திப் பாடல்கள் நல்ல எடுத்துக்காட்டு.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்ப

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடெனும் பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

பாரதியின் சமகாலத்தவரான பாரதிதாசன் மற்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றவர்கள் இசைப்பாடல் வடிவை கையாண்டனர். புதுக்கவிதை வடிவம் செல்வாக்கு பெற்ற காலத்தில் இசைப்பாடல் வடிவம் பின்னடைவை சந்தித்தது.

அதன்பின் திரைப்படப் பாடலாசிரியர்கள் இவ்வடிவை கையாளவதில் முனைப்புக் காட்டினர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் இவ்வடிவில் குறிப்பிடத்தக்கவர்கள். கண்ணதாசன் பாடல்களை இலக்கியத் தரமாக ஏற்பதில் விமர்சகர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உண்டு. கண்ணதாசனுக்கு பிறகு இசைப்பாடல்களில் இலக்கியத்தரம் கேள்விக்குள்ளாகிறது.

தமிழ் செவ்வியல் இசைப்பாடல்

தமிழ்ச் செவ்வியல் இசைப்பாடல் வடிவங்களை இந்த இசைப்பாடல் வடிவமாக கருத இயலாது. செவ்வியல் இசை வடிவங்கள் நீண்ட மரபினைக் கொண்டவை.

உசாத்துணை

  • இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.