under review

சூளை சோமசுந்தர நாயகர்

From Tamil Wiki
Revision as of 07:15, 22 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
சூளை சோமசுந்தர நாயக்கர்

சூளை சோமசுந்தர நாயகர் (ஆகஸ்ட் 16, 1846 - பிப்ரவரி 22, 1901) தமிழகத்துச் சைவ அறிஞர்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை திரட்டி ஒருங்கிணைத்த முன்னோடிகளில் ஒருவர். மறைமலையடிகளின் ஆசிரியர்.

பிறப்பும் கல்வி

சென்னையில் சூளை பகுதியில் இராமலிங்க நாயகர், அம்மணி அம்மாள் இணையருக்கு பிறந்தார். இயற்பெயர் அரங்கசாமி ஆகும்.இவர் அச்சுதானந்த அடிகள் என்பவரிடம் 'தீக்கை'ப் பெற்று தம் பெயரைச் சோமசுந்தரம் என்று மாற்றி அமைத்துக் கொண்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும் புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் மரபான முறையில் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.

சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்
சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்

தனிவாழ்க்கை

தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கு எழுதுபவராக இருந்தார். சென்னை நகர்மன்றத்தில் எழுத்தர் பணியில் இருந்தார். சைவச்சொற்பொழிவாளர், உரையாசிரியராக அறியப்பட்டார். 1881-ல் நகர்மன்ற வேலையை துறந்தார். சித்தாந்த தீபிகையில் எழுதத் தொடங்கினார்.1898-ல் இவர் சிவஞானத்தம்மாளை மணந்தார். ஜகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள், சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர். லோகாம்பாள் முன்னரே மறைந்தார்.

பணிகள்

சோமசுந்தர நாயகர் மேடையில் சைவசித்தாந்தத்தை விரிவாக பேசுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். அத்வைத வேதாந்தம், வைணவசித்தாந்தம் போன்றவற்றை தர்க்கபூர்வமாக மறுத்து வாதிடுவது அவருடைய வழிமுறை. 1907 முதல் சைவசித்தாந்தத்திற்காக சித்தாந்த ரத்நாகரம் என்னும் இதழையும் நடத்தினார். இவருடைய கடுமையான பேச்சுமுறை காரணமாக சைவசித்தாந்த சண்டமாருதம் (புயல்) என அழைக்கப்பட்டார். சித்தாந்த தீபிகை இதழை நடத்திய ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை இவருடன் இணைந்து செயல்பட்டார். சோமசுந்தர நாயகர் ம.தி.பானுகவி , நா.கதிரைவேற் பிள்ளை ஆகியோருக்கு சைவமும் தமிழும் கற்பித்த ஆசிரியர்.

பட்டங்கள்

  • 'வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்'(இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி)
  • 'பரசமயக் கோளரி' (திருவாவடுதுறை மடம்)

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

மறைமலையடிகள் சோமசுந்தர நாயகர் மறைந்தபோது மறைமலையடிகள் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.

படைப்புகள்

  • அசம்பிரதாய நிராசகம்
  • அஞ்ஞான திமிர பாஸ்கரம்
  • அர்ச்சா தீபம்
  • ஆச்சாரியப் பிரபாவம்
  • ஆஞ்சநேய ராம வைபவ பங்கம்
  • ஆதிசைவ பிரபாவம்
  • ஆபாசஞான நிரோதம்
  • இராமதத்துவ தீபிகையினது ஆபாச விளக்கம்
  • இராமானுஜ மதபேடிகை
  • உத்தமவாத தூலவாதூலம்
  • கங்காதாரணப் பிரக்யரம்
  • கீதார்த்த தீபிகாபாச நிரசனம்
  • குதர்க்கவாத விபஞ்சினி
  • கூரேசவிஜயபங்கம்
  • சமரச ஞான வெண்பா
  • சமரச ஞானதீபம்
  • சமரச ஞானதீபம்
  • சன்மார்க்க போத வெண்பா
  • சித்தாந்த உந்தியார்
  • சித்தாந்த உந்தியார்
  • சித்தாந்த சேகரம்
  • சித்தாந்த ஞானபோதம்
  • சித்தாந்த ரத்நாகரம்
  • சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி
  • சிவதத்துவ சிந்தாமணி
  • சிவநாமாவளி
  • சிவபாரம்ய பிரதர்சினி
  • சிவவாக்கியத் தெளிவுரை
  • சிவாதிக்ய ரத்நாவளி(2 பாகங்கள்)
  • சைவ சூளாமணி
  • சைவதுஷ்டய தர்ப்பணம்
  • ஞானபேத விளக்கம்
  • ஞானபேதத் துணிவு
  • பரதத்வ பிரகாசிகை
  • பரம பத பங்க வினா விடை
  • பாரத தாத்பர்ய சங்கிரகம்
  • பிரஹ்மதத்வநிரூபணம்
  • மூர்க்கவாத விபஞ்சினி
  • மெய்கண்ட சிவதூஷ்ண நிக்ரகம்
  • வேதபாஹ்ய சமாஜ கண்டனம்

உசாத்துணை


✅Finalised Page