ஜனா ஜெயகாந்தி
ஜனா ஜெயகாந்தி (பிறப்பு: நவம்பர் 9, 1985) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். மன்னார் மனித புதைக்குழி, ரணதீவு நில மீட்புப் போராட்டம் தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜனா ஜெயகாந்தி இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் சுந்தரலிங்கம், கலாவதி இணையருக்கு நவம்பர் 9, 1985-ல் பிறந்தார். மன்னாரில் வசித்து வருகிறார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் கற்றார்.
அமைப்புப் பணிகள்
- பெண்களின் தன்மேம்பாடு(women's empowerment) தொடர்பான சிறப்பு பத்து நாள் பயிற்சியை தமிழ்நாட்டில் பெற்றார்.
- மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட அலுவலராகப் பணியாற்றினார்.
- பெண்கள் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
- மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வு, மீள் நல்லிணக்கம், பால்நிலை தொடர்பான வளவாளராகவும் உள்ள ஜனா ஒரு மாற்றுத்திறனாளி.
- வடமாகாண மாற்றுத்திறனாளி மாதர் நலன்நோன்பு அமைப்பின் அங்கத்தினர்.
இலக்கிய வாழ்க்கை
எழுத்தாளர் ஜனா ஜெயகாந்தி கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். மன்னார் மனித புதைக்குழி, ரணதீவு நில மீட்புப் போராட்டம் தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் 'எதிர்' இணையத்தளத்தில் வெளிவந்தன. 'வானம்பாடி' சிறுகதைத் தொகுப்பில் இவரின் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இவரின் சிறுகதைகளும் கவிதைகளும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம், பெண்ணியம் ஆகியவற்றைப் பேசுபொருளாகக் கொண்டவை.
உசாத்துணை
✅Finalised Page