சி.பா.ஆதித்தனார்

From Tamil Wiki
Revision as of 17:40, 30 March 2022 by Jeyamohan (talk | contribs)

சி.பா.ஆதித்தனார் ( ) தமிழ் இதழாளர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர். தொழிலதிபர், அரசியல்வாதி.நாளிதழுக்குரிய மொழிநடையை வடிவமைத்து வரையறைசெய்தவர்.

பிறப்பு, கல்வி

சி.பா.ஆதித்தனாரின் இயற்பெயர் சி.பாலசுப்ரமணியன். திருநெல்வேலி மாவட்ட்த்தில் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக அமைந்துள்ள காயாமொழி என்னும் ஊரில் 27 செப்டெம்பர் 1905ல் சிவந்தி ஆதித்தனுக்கும் கனகம் அம்மையாருக்கும் பிறந்தார். ஆதித்தனாருக்கு நான்கு உடன்பிறந்தோர். தையல்பாக ஆதித்தனார் மூத்தவர். தனஞ்சய ஆதித்தனார், வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார் ஆகியோர் இளையவர்கள்.

ஆதித்தன் என்பது காயாமொழி ஊரிலுள்ள ஒரு குடும்பத்திற்கு பாண்டியர் காலம் முதல் அளிக்கப்பட்டுள்ள குடும்பப்பட்டம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் முதலில் வடம்தொட்டு இழுக்கும் உரிமை இக்குடும்பத்திற்கு உரியது. அந்நிலப்பகுதியில் அரசஅதிகாரம் உடையவர்களாக அவர்கள் விளங்கினர்.

ஆதித்தனார் ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம்பெற்றார். அங்கேயே இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின் எஃப்.எல் என்னும் சட்டப்படிப்புக்காக சென்னை சென்றார். அதை படித்துக்கொண்டிருக்கையிலேயே பாரிஸ்டர் படிப்புக்காக 1928 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். 1933ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ஆதித்தனார் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தவரும் ராமநாதபுரம் கோட்டையூர் அருகே உள்ள மணச்சை என்னும் ஊரைச்சேர்ந்தவருமான ஓ.ராமசாமி நாடாரின் மமள் கோவிந்தம்மாளை 1 செப்டெம்பர் 1933 ல் மணந்துகொண்டார் . அவர்களுக்கு பா. ராமச்சந்திர ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் என இரண்டு மகன்களும் சரஸ்வதி அம்மாள் என ஒரு மகளும் பிறந்தனர்.

பாரிஸ்டர் பட்டம் பெற்றதும் ஆதித்தனார் சிங்கப்பூர் சென்று அங்கே வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். சிங்கப்பூர் வழக்கறிஞர்களின் நிறுவனம் ஒன்றில் நாலில் ஒரு பங்கு என்னும் அளவில் பங்குதாரர் ஆனார்.சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் நின்று வென்றார். அவ்வாறு வென்ற முதல் வெள்ளையரல்லாதவர் ஆதித்தனார்தான்

இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஆதித்தனார் இந்தியா திரும்ப முயன்றார். விமானத்தில் இந்தியாவுக்கு வந்தபோது போர்ச்சூழலால் விமானம் இந்தோனேசியாவுக்கு அனுப்பபப்ட்டது. போர்க்காலம் முடிய ஆதித்தனார் இந்தோனேசியாவில் தங்கினார். அங்கே ஆதித்தனாருக்கு சட்டையப்பர் என்னும் முடிதிருத்தகத் தொழிலாளர்தான் அடைக்கலம் கொடுத்தார். தானிருந்த ஊரில் இருந்து 300 மைல் தொலைவில் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் நிற்பதாகத் தெரிந்து ஆதித்தனார் சூரபாயா என்னும் துறைமுகத்திற்க்சுச் சென்றார் இரண்டுநாட்கள் பட்டினி கிடந்து கப்பலுக்காக காத்திருந்தார். அவர் சென்ற கப்பல் ஆஸ்திரேலியாவை சுற்றிக்கொண்டு 29 நாட்கள் பயணம் செய்து 1942 ஏப்ரல் 4 அன்று இந்தியாவந்து சேர்ந்தது. அவர் வந்து சேர்ந்த இரண்டாம் நாள், ஏப்ரல் 6 அன்று அவர் தந்தை சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்.

இதழியல்

லண்டனில் ஆதித்தனார் இந்திய மாணவர் சங்கத்தில் தங்கினார். இந்தியாவிலுள்ள இதழ்களுக்கு லண்டன் அரசியல் பற்றி லண்டன் கடிதம் என்னும் பகுதியை எழுதினார். தமிழில் சுதேசமித்திரன் இதழில் தொடர்ந்து அவர் எழுதிய லண்டன் கடிதம் பகுதிகள் வெளிவந்தன. சிங்கப்பூரில் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு தமிழ்நாளிதழ் தொடங்க முயன்றார். அவருடைய மாமனனார் அதற்கு ஒப்பவில்லை. ஆனால் சிங்கப்பூர் தமிழ்முரசு தொடங்க உதவிசெய்தார்.

அரசியல்

1930ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சிங்கப்பூர் சென்றபோது ஆதித்தனாரின் மாமனார் ஓ.ராமசாமி நாடாரின் இல்லத்தில் தங்கினார். ஈ.வெ.ராமசாமி பெரியாருடனான உரையாடல் வழியாக திராவிட இயக்க அரசியலில் ஆதித்தனார் ஆர்வம் கொண்டார். சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

நாம் தமிழர் இயக்கம்

ஆதித்தனார் இந்தியா திரும்பியதும் 1942ல் நாம் தமிழ என்னும் இயக்கத்தை தொடங்கினார். அவ்வியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது நிறுத்திவைக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப்பின் 1957 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதியில் நின்று சட்டச்சபைக்கு தேர்வுசெய்யப்பட்டார். மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தை 1957ல் தொடங்கினார். அவ்வியக்கத்தின் முதல் கூட்டத்தை 1958 ல் பாரதிதாசன் தலைமையில் கூட்டினார். பல இடங்களில் மாநாடுகளை நடத்தினார்.

1965 ல் ஆதித்தனார் தேசப்பிரிவினையை கோருகிறார் என்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கோவையில் சிறையில் இருந்த அவர் 1966ல் விடுதலையானார். வெளிவந்ததும் நாம் தமிழர் இயக்கத்தை கலைத்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்

பதவிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த ஆதித்தனார் 1967 ல் நடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிர்ரு வென்றார். சி.என்.அண்ணாத்துரை முதல்வராக ஆனபோது ஆதித்தனார் சட்டப்பேரவைத் தலைவர் ஆனார். சட்டப்பேரவை பொறுப்பில் குறுகிய காலமே பணியாற்றினார்

1969ல் சி.என்.அண்ணாத்துரை மறைந்து மு.கருணாநிதி முதல்வரானதும் அவருடைய அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக 113 பிப்ரவரி 1969 ல் பதவி ஏற்றார். 1971ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1973ல் வேளாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

மறைவு

சி.பா.ஆதித்தனார் 21 மே 1981ல் தன் 75 ஆவது வயதில் மறைந்தார்.

நினைவுச்சின்னங்கள்

சி.பா.ஆதித்தனார் பெயரில் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது

கபடிப்போட்டிக்கு தமிழக அளவில் சி.பா.ஆதித்தனார் நினைவுக்கோப்பை வழங்கப்படுகிறது

சென்னையில் ஆதித்தனாருக்கு சிலை உள்ளது. அச்சாலை ஆதித்தனார் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது

சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.

சி.பா.ஆதித்தனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளிவந்துள்ளது.