ஓஷோ
ஓஷோ (ரஜ்னீஷ் சந்திர மோகன்)(பிறப்பு: டிசம்பர் 11, 1931) ஆன்மிகவாதி, சிந்தனையாளர். ஓஷோ கம்யூன், ரஜ்னீஷ்புரம் வழியாக தன் சிந்தனைகளை, தான் நம்பிய வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு சென்றார். டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தியவர். எளிமையான வெளிப்பாட்டு மொழியில் துண்டான கருத்துக்களைத் தன்னை பின்பற்றியவர்களிடம் பேசினார். சமூக அமைப்புகளின் மீறலாக, எதிர்ப்புக் குரலாக ஓஷோ இருந்தார். அன்றிருந்த விரைப்பான மைய ஆன்மிக முறைகளுக்கு மாற்றான உலகலாவிய ஆன்மிக முறையை முன்வைத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். ஓஷோ மத்திய பிரதேசம் மாநிலம் குச்வாடா என்ற சிற்றூரில் டிசம்பர் 11, 1931-ல் பிறந்தார். குச்வாடாவில் தன் தாய் வழி தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்தனர். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா சென்றார். 1956-ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்றார். சாகர் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்றார்.
பெயர்க்காரணம்
”ஓஷியானிக்” என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே “ஓஷோ” என்ற சொல்லை உருவாக்கினார்.
ஆசிரியப்பணி
1957-ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1958-ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1966-ல் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.
ஆன்மிக வாழ்க்கை
ஓஷோ சிறு வயது முதல் தியானத்தில் ஈடுபட்டார். தன் இருபத்து ஒன்று வயதில் (மார்ச் 21, 1953) ஞானம் அடைந்தார். 1966 முதல் முழு நேரமாக ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார். ஏப்ரல் 14, 1970-ல் தனித்துவமான தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தினார்.
புது சந்நியாசம்
1970-1974 வரை மும்பையில் வசித்தார். இந்த கால கட்டத்தில் ஸ்ரீ ரஜனீஷ் என்பவரிடம் தீட்சை பெற்றார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் சேர்ந்தார். இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்ட அமைப்பு.
ரஜனீஷ்புரம்
ஐக்கிய் அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் மத்தியப்பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தை அமைத்தார். அதில் ஐயாயிரம் பேர் கொண்ட கம்யூன் உருவானது. கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்பட்டபோது உலகம் முழுவதுமிலிருந்து பதினைந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதன் செயல்பாட்டுத்தன்மையைப் பற்றிய சர்ச்சையில் அதன் மேல் எதிர்ப்பு உருவாகியது.
செப்டம்பர் 14, 1985-ல் ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும், கம்யூனின் பொறுப்பிலிருந்த சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறினர். கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் அதன்பின் ஈடுபட்டனர். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைத்தார். அக்டோபர் 28-ல் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் ஓஷோ கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டு நாட்கள் காவலிலிருந்த ஓஷோவிற்கு ”தாலியம்” என்ற விஷம் கொடுக்கப்பட்டது.
1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் இந்தியா பம்பாய்க்குத் திரும்பினார்.
எழுத்து
ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்தன.
தத்துவம்
ஓஷோ தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் ஆகிய மூன்றும் முயங்கும் தளத்திலிருந்து பேசிய ஆன்மிகவாதி. சொற்பொழிவாளர். விரிந்த வாசிப்பைக் கொண்டவர். ஆனால் எளிமையாக உரையாற்றக்கூடியவர். சோஷியலிசம், காந்தியம், ஒழுக்கவியல் ஆகியவற்றுக்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைத்தார். மாற்று ஆன்மிகத்தை முன்வைத்தார். அன்றிருந்த மைய ஆன்மிக முறைகளுக்கு மாற்றான எதிரான உலகலாவிய ஆன்மிக முறையை முன்வைக்கக் கூடியவராக இருந்தார். டைனமிக் தியானமுறையை கற்பித்தார். தன்னை ஞான ஆசிரியனாக முன்வைத்தார்.
மறைவு
ஜனவரி 19, 1990-ல் ஓஷோ காலமானார். ஓஷோவின் சமாதி மீது ”ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை.” என்ற வரி பொறிக்கப்பட்டது.
நூல் பட்டியல்
- The Luminous Rebel Life Story of a Maverick Mystic
உசாத்துணை
இணைப்புகள்
- ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்: Part-01: Sri Krishna Sweets
- ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்| Jeyamohan Speech |part -2
- ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்| Jeyamohan Speech |Part-03
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.