தத்துவ விளக்கம்
To read the article in English: Thathuva Vilakkam.
தத்துவ விளக்கம் (பொ.யு. 7-ம் நூற்றாண்டு) நூல் சம்பந்த சரணாலயர் இயற்றிய சித்தாந்த மரபுகளைப் பற்றியது.
நூல் பற்றி
ஐம்பத்தொரு பாடல்களால் ஆன இந்நூல் கலித்துறையால் ஆனது. அந்தாதித் தொடையாய் மண்டலித்து வருவது. இந்நூலானது உண்மை விளக்கம் போலத் தத்துவங்களின் தோற்ற ஒடுக்கங்களைத் தெளிவாகக் கூறுகிறது.
தொன்மம்
சீகாழியில் திருஞானசம்பந்தரோடு தங்கியிருந்தபோது அடியவர்கள் வேதசிவாகமங்கள் வடமொழியில் புலமை பெற்றவர்களுக்கே விளங்குமாறு உள்ளதால் தத்துவங்களை தமிழில் விளக்கி எழுதுமாறு சம்பந்த சரணாலயரை கேட்டனர். அதற்கிணங்க வேதசிவாகமங்களிலிருந்து பதிபசுபாசத் துண்மைகளைத் திரட்டி தத்துவ விளக்கம் நூலை இயற்றினார்.
பாடல் நடை
எய்தும் பொருளொரு மூன்றூ பதிபசு பாசமென்றே
மெய்தந்த ஆகமங் கூறு மவற்றினுள் வெங்குருவாழ்
மைதங்கு கண்டன் பதிபசு என்ப தணுக்கண் மற்றுக்
கைதந்த பாசங்க ளாணவ மாயையுங் கன்மமுமே
உரை
தத்துவ விளக்க நூலுக்கு காசி விஸ்வநாத ஐயர் விரிவுரை எழுதினார். இத்தத்துவ விளக்கச் செய்யுளுக்கு மூலமான வேதாகம புராண பிராமணங்களையும் பிற விளக்கங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
பதிப்புகள்
இந்நூலை காசிவாசி செந்திநாதையர் பதிப்பித்தார். செந்தமிழ்ச் செல்வி இதழில் 23 பாடல்கள் வெளியானது. சித்தாந்தம் இதழில் நூலின் சில பாடல்கள் மேற்கோள் குறிப்புகளோடு வெளியானது.
பாராட்டியவர்கள்
- களந்தை ஞானப்பிரகாசர் (சந்தான அகவல்)
- மதுரைச் சிவப்பிரகாசர்
- வெள்ளியம்பலவாணத் தம்பிரான்
- நிரம்ப அழகிய தேசிகர்
- மறைஞான சம்பந்த தேசிகர்
உசாத்துணை
- தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்
- மு.அருணாசலம், " தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு" தி பார்க்கர் 2004.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Apr-2023, 06:10:47 IST