கழுகுமலை சமணர் படுகைகள்

From Tamil Wiki
Revision as of 14:35, 21 March 2022 by Ramya (talk | contribs)

கழுகுமலை சமணர் படுகைகள் (பொ.யு. 768-800) பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடம். தமிழகத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ள கோயில். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ளது. இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் பொ.யு 8ஆம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.

வரலாறு

இம்மலையின் உச்சியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு பராந்தக நெடுங்சடையான் ஆட்சி காலத்தில் இங்கு சமணர் பள்ளி உருவாக்கப்பட்டு நடந்து வந்ததைத் தெரிவிக்கிறது.

அமைப்பு

கழுகுமலை சமணர் படுகைகள் குடைவரை கட்டிட அமைப்பிலான கல் படுக்கைகள். இங்கு அதிக எண்ணிக்கையிலான சமணர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பாறைகளில் கல்வெட்டுக்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. கழுகு மலைச் சமணச் சிற்பங்கள் இம்மலையில் மூன்று தொகுதிகளாகக் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் அடியில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. குணசாகரப் படாரர் என்னும் சமணப் பெரியாரும், பலரும் இங்கு வாழ்ந்துள்ளனர்.

சமணர் பள்ளி

மலையில் வழிபாடு நடைபெற்ற சமணார் தெய்வத்துக்கு அரைமலை ஆழ்வார் என்றும், மலைமேல் திருமலை தேவர் என்றும் பெயர் இருந்தது. இதன் அருகில் பலர் சமணர் உருவங்களைச் செய்திருக்கிறார்கள். கோட்டாறு, மிழலூர், வெண்பைக்குடி முதலிய 32க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். சமணத்துறவிகள் குரவர் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியர் என்று அழைக்கப்பட்டனர். எட்டி, ஏனாதி, காவிதி முதலிய தமிழ்ப்பட்டங்களைப் பெற்றவர்களும், தச்சர், வேளான், குயவர், கொல்லர் முதலியோரும் இச்சிற்பங்களைச் செய்துள்ளனர். குணசாகரப்படாரர் எனும் சமணப் பெரியார் இங்கு வாழ்ந்துள்ளார்.

சிற்பங்கள்

நேமிநாதர், பர்ஸ்வநாதர், மகாவீரர் மற்றும் பல சமண தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலையிலுள்ள சிற்ப உருவங்களும், யக்ஷர், யக்ஷி ஆகியோர் சிற்பங்களும் இங்கு உள்ளன. தீர்த்தங்கரரின் தலைக்கு மேற்பகுதியில் முக்குடையும் கொடி போன்ற அமைப்பும், யக்ஷிகளின் கரங்களில் சாமரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இறந்து போன சமணத் துறவிகள்(குரவர்கள்), அவர்களது சீடர், தந்தை, தாய், பிள்ளைகள் ஆகிய பலரின் நினைவாக சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன.

உசாத்துணை