அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் (பொயு 14 ஆம் நூற்றாண்டு) தமிழ் பக்திக் கவிஞர். முருகன் மீது இயற்றிய திருப்புகழ் என்னும் நூல் புகழ்பெற்றது. இது சந்தப்பாடல்களால் ஆனது. தமிழின் இசைமரபில் முதன்மையான இடமுள்ளவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அருணகிரிநாதர் 1370-ல் திருவண்ணாமலையில் பிறந்தவர். கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவரை ஆதி என்னும் ஒரு மூத்த சகோதரி வளர்த்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். சம்ஸ்கிருதத்தையும் கற்றார். உரிய வயதில் திருமணமும் நடந்தது. எந்நேரமும் காமத்தில் இருந்ததால் சொத்தை இழந்ததோடு அல்லாமல் நோயாலும் அவதிப்பட்டார். முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தியதால் பக்தி பாடல்களை உருவாக்க ஆரம்பித்தார் என அவரின் வரலாற்று நூல்களில் காணப்படுகிறது.
மனையவள் நகைக்க என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதர் அவரை தந்தையும் தாயும் உறவினரும் எள்ளிநகையாடியதைப் பற்றி பாடுகிறார். அதை வைத்து அவருடைய பெற்றோர் நீண்டகாலம் உயிருடன் இருந்தனர், அவர் மணமானவர் என ஊகிக்கலாம் என சில ஆய்வாளர் சொல்வதுண்டு. செய்யூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் முருகன் அருணகிரியின் விருப்பக்கடவுள்.
தொன்மம்
பரத்தையரிடம் சென்று நோயுற்று செல்வத்தை இழந்த அருணகிரி தன் தமக்கை ஆதியிடம் தனக்கு பரத்தையரிடம் செல்ல பணம் கேட்டார் என்றும், அப்போது அவர் ‘நானும் பெண்தானே?” என்று கேட்டதாகவும், அதனால் அதிர்ச்சி அடைந்த அருணகிரி திருவண்ணாமலை மலைமேல் ஏறி குதித்து உயிர்விடப்போனபோது முருகன் நேரில் தோன்றி நாவில் சரவணபவ என்னும் எழுத்தை எழுதியதாகவும், அதனால் ஞானம் பெற்று தன் அன்னையின் பெயரிலிருந்து தொடங்கி ’முத்தைத் தரு பத்தி’ எனும் பாடலுடன் திருப்புகழை பாடியதாகவும் தொன்மக்கதைகள் சொல்கின்றன.
இலக்கியவாழ்க்கை
அருணகிரி தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1,088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளது. திருப்புகழ் இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்று.
அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இசை மூலம் வழிபடும் புதிய வழிபாட்டு முறையை உலகிற்கு உணர்த்தியது. அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றது.
பாடல்கள் பதிப்பு
1871ல் மாவட்ட நீதிபதியாக இருந்த வி.டி. சுப்பிரமணிய பிள்ளை சிதம்பரம் செல்லும் பயணத்தின்போது பயணிகள் திருப்புகழ் பாடல்களை பாடக்கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். திருப்புகழ் அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தது. . 1871-ல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894-ல் முதலாவது பதிப்பும், 1901-ல் இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
திரைப்படம்
1964-ஆம் ஆண்டில் அருணகிரிநாதர் என்கிற தமிழ் திரைப்படம் வெளியானது. இதில் பின்ணணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நூல் பட்டியல்
- கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
- கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
- கந்தரனுபூதி (52 பாடல்கள்)
- திருப்புகழ் (1307 பாடல்கள்)
- திருவகுப்பு (25 பாடல்கள்)
- சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
- மயில் விருத்தம் (11 பாடல்கள்)
- வேல் விருத்தம் (11 பாடல்கள்)
- திருவெழுகூற்றிருக்கை
உசாத்துணை
- அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம் - சித்தியவான், மலேசியாவின் திரு திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு - (kaumaram.com)
- அருணகிரிநாதர் வரலாறு (elathuranmikasapai.blogspot.com)
- அருணகிரிநாதர் | Tamil and Vedas
- http://tamilonline.com/thendralnew/article.aspx?aid=13731
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.