வீர சைவ இலக்கியம்
வீர சைவ இலக்கியம் (பொ.யு. 12ஆம் நூற்றாண்டு). சாந்தலிங்க அடிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், குமார தேவர் ஆகியோர் தமிழில் வீரசைவ இலக்கியத்தில் முக்கியமானவர்கள்.
வரலாறு
தமிழகத்தில் பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவியது. துறைமங்கலம் சிவப்பிரகாசர் காலத்திலேயே வீர சைவ இலக்கியம் வளர்ந்திருந்தது. இந்த நூற்றாண்டில் பெரிய நிறுவனங்களான சைவ மடங்களைப் போன்றே வீர சைவமும் மடங்களை அமைத்துச் சமயத்தையும் இலக்கியத்தையும் பரப்பியது.
புலவர்கள்
- சாந்தலிங்க அடிகள்
- திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
- குமாரதேவர்
சாந்தலிங்க அடிகள்
இவர் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவியவர். சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையின் கணவர். அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது, வைராக்ய சதகம், வைராக்ய தீபம் போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சாந்தலிங்க அடிகளின் மாணவர். அவருடைய நூல்களுக்கு உரை எழுதியவர். உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், திருப்போரூர் முருகன் மேல் கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது ஆகியவை பாடியுள்ளார்.
குமாரதேவர்
மகாராஜா துறவு என்ற நூலை இயற்றியவர். சாந்தலிங்க அடிகளின் மாணவர். சிவாத்துவிதக் கொள்கையை விளக்கியவர். மகாராஜா துறவு, அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.
வீர சைவ நூல்கள்
- சித்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- ஏசு மத நிராகரணம்
- இட்டலிங்க அபிடேகமாலை
- கைத்தல மாலை
- குறுங்கழி நெடில்
- நெடுங்கழி நெடில்
- நிரஞ்சன மாலை
- பழமலை அந்தாதி
- பிக்ஷாடன நவமணி மாலை
- சிவநாம மகிமை
- வேதாந்த சூடாமணி
- திருத்தொண்டர்மாலை
- ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்