பி.எம்.மதுரைப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:29, 16 March 2022 by Jeyamohan (talk | contribs)
மதுரைப் பிள்ளை

பி.எம்.மதுரைப்பிள்ளை (1858- ) தொடக்ககால தலித் இயக்கத்தின் புரவலராக இருந்த செல்வந்தர். அரசு குத்தகைதாரராகவும் கப்பல் வணிகராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

சென்னையில் மார்க்கண்டமூர்த்தி -அம்மணியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 26 டிசம்பர் 1858 ல் மதுரைப்பிள்ளை பிறந்தார். சென்னை வெப்பேரி எஸ்.பி.ஜி பள்ளியில் தொடக்கக் கல்வியும் பின்னர் ரங்கோனிலுள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைப் பள்ளி படிப்பும் முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பட்டப்படிப்பை முடித்தார்

தனிவாழ்க்கை

மதுரைப் பிள்ளையின் தந்தை ரங்கூனில் அரசு குத்தகைதாரராக இருந்தார். அதன் வழியாக மதராஸ் ஆங்கில அரசுக்கு அணுக்கமானவர். மதுரைப்பிள்ளை 1877-இல் சென்னை மாநில கவர்னரின் நேர்முக எழுத்தராக பணியாற்றினார்.  1878ல் மீண்டும் ரங்கூன் சென்றார். Stevedore and General Merchant & Contractor என்னும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

1880 ல் ஆதிலட்சுமி அம்மாளை மணம்புரிந்து வைத்தனர். அவ்வாண்டே மதுரைப்பிள்ளையின் தந்தை மார்க்கண்ட மூர்த்தி மறைந்தார்.

ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற தொழில்நுறுவனத்தில் பங்குதாரர் ஆனார். பின்னர் துபாஷ் ஸ்டீவ்டென் என்கிற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். கோலார் தங்கவயல் பணிகளில் குத்தகைதாரராக பணியாற்றினார்.1885 இல் ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880 இல் ரங்கூன் மாநகர கமிஷ்னராகவும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றினார்.1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார் மீனாட்சி என்று தனது மகளின் பெயரை சூட்டினார். எம்.சி. மதுரைப்பிள்ளை அவர்களின் வழிவந்தவர் தலித் இயக்க அரசியல்வாதியான மீனாம்பாள் சிவராஜ்.

சமூகப் பணிகள்

1898 ம் ஆண்டில் பர்மாவில் ரங்கூன் நகரிலுள்ள டம்ரின் மருத்துவமனை அமைந்துள்ள வளாகத்தில் மதுரைப்பிள்ளை உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டிடத்தைக் கட்டி மக்களுக்கு அளித்தார்.1892இல் நாகப்பட்டினத்தில் வேறுநாடுகளுக்கு பணிக்குச் செல்லும் தமிழர்களுக்கு உதவும்பொருட்டு இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத்தினார்.

தலித் மக்களுக்காகத் தேனாம்பேட்டையில் கல்விச் சாலை நடத்திவந்த ரெவரன்ட் ஜான் ரத்தினம் செய்துவந்த பணிகளுக்கு நிதியளித்தார்.ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் முதன்மை நிதிக்கொடையாளராக மதுரைப் பிள்ளை திகழ்ந்தார். அதில் முக்கியத் தொண்டர்களாக இருந்த புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் பத்தர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 1919 ஆம் ஆண்டு தங்கவயலில் ஸ்ரீநம்பெருமாள் பள்ளியை நிறுவினார். 1921இல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தின் விளைவாக உருவான புளியந்தோப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்தார்.

சென்னை நகராட்சியாகயின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைதாப்பேட்டை தாலுகா போர்டு அங்கத்தினரான மதுரைப்பிள்ளை, நாளடைவில் செங்கல்பட்டு ஜில்லா போர்டு உறுப்பினராகவும், கல்வித் துறை உறுப்பினராகவும் ஆனார். சென்னை நகர கவுரவ மாஜிஸ்டிரேட் பதவியை வகித்தார். அவருக்கு ஆங்கில அரசு அளிக்கும் ‘ராவ்சாகேப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1925இல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். சைமன் கமிஷனுக்கு சாட்சியமளித்த மதுரைப்பிள்ளை 1932 ல் வட்டமேசை மாநாட்டிற்கு ரெட்டமலை சீனிவாசன் சென்றபோது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்

மதப்பணிகள்

பி.எம்.மதுரைப் பிள்ளை வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். ஸ்ரீரங்கம் சென்று முறைப்படி ஐந்து நாம முத்திரைகளையும் பெற்றுக்கொண்டு ஆசாரமான வைணவராக திகழ்ந்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தின் விழாக்களை ஆண்டு தோறும் தன் செலவில் நடத்தினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய அறுபத்துமூவர் விழாவுக்கும் பெரும் நிதியளித்து நடத்தினார்.

மறைவு

15 ஜூலை 1913ல் மதுரைப்பிள்ளை மறைந்தார்.

மதுரைப் பிரபந்தம்

மதுரைப் பிள்ளையின் கொடைத்திறன் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய மதுரைப் பிரபந்தம் என்ற நூல் வெளியாகியிருக்கிறது

உசாத்துணை