நவ திருப்பதிகள்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள ஒன்பது திருமால் திருத்தலங்கள் நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகிறன. இத்தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இக்கோயில்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
நவ திருப்பதிகள்
நவ திருப்பதித் தலங்கள் அனைத்தும், 108 திவ்ய தேசங்களைச் சேர்ந்தவை. இத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி, தலம், தீர்த்தம் போன்ற சிறப்புகளைக் கொண்டவை. நவ திருப்பதிகளாவன,
- ஸ்ரீவைகுண்டம்
- நத்தம்
- திருப்புளியங்குடி
- தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)
- தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)
- பெருங்குளம்
- தென்திருப்பேரை
- திருக்கோளூர்
- ஆழ்வார் திருநகரி
நவக்கிரக நவ திருப்பதிகள்
நவ திருப்பதித் தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. அவை,
- சூரியன் - ஸ்ரீவைகுண்டம்
- சந்திரன் - வரகுணமங்கை (நத்தம்)
- செவ்வாய் - திருக்கோளூர்
- புதன் - திருப்புளியங்குடி
- குரு - ஆழ்வார் திருநகரி
- சனி – திருக்குளந்தை (பெருங்குளம்)
- ராகு – தொலைவிலி மங்கலம்
- கேது - தொலைவிலி மங்கலம்
- சுக்கிரன் - தென்திருப்பேரை
நவ திருப்பதிகளின் சிறப்புகள்
நவ திருப்பதிகளின் ஒவ்வொரு தலத்துக்கும் புராணக் கதைகளும், தல விருட்சமும், தல தீர்த்தமும், தலப் பெருமைகளும் உள்ளன. இத்தல இறைவர்களை வந்து வழிபடுவதால் துன்பங்கள், நோய்கள் விலகுவதுடன், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. நவ திருப்பதி ஆலயங்கள் அனைத்தையும் ஒரே நாளில் வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தொன்ம நம்பிக்கைகள்
- வைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
- நத்தம் விஜயாசனப் பெருமாளை வழிபட்டால் எளியவருக்கும் முக்தி கிடைக்கும்.
- திருப்புளியங்குடி காய்சின வேந்தப் பெருமாளை வழிபட பாவங்கள் அனைத்தும் விலகும்.
- பெருங்குளம் மாயக்கூத்தனை வணங்க, மாயத்திரை விலகும்.
- தொலைவல்லி மங்களம் தேவர்பிரானை வழிபட தோல் வியாதிகள் அனைத்தும் நீங்கும்.
- தொலைவல்லி மங்களம் அரவிந்தலோசனரை வணங்கி வழிபட்டால் வேலை, தொழில் பிரச்சனைகள் நீங்கும்.
- தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதரை வழிபட குழந்தை பாக்கியம் பெருகும். புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
- திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வணங்கி வழிபட வறுமை நீங்கும். செல்வம், செல்வாக்கு, புகழ் உண்டாகும்.
- ஆழ்வார் திருநகரி ஆதி நாதரை வணங்கி வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
தல புராணச் சிறப்புகள்
நவ திருப்பதிகள் அனைத்திற்கும் தனித் தனியாகத் தல புராணங்கள் உள்ளன. அவை அனைத்தும் சூதமுனிவரால் அருளப்பட்டவை. அவை கீழ்காணும் செய்திகளைக் கொண்டுள்ளன.
- இறைவன் தன்னை அழியாபதியாக்க காட்டியது.
- பசு பால் சொரிந்த இடத்தில் இறைவன் எழுந்தருளியது.
- இறைவன் இறைவிக்கும் இடையே நடந்த ஊடல் காரணமாகப் பூமிக்கு வருவது.
- தேவர்களுக்கும், அசுார்களுக்கும், விலங்குகளுக்கும், வேடனுக்கும், பிரம்மனுக்கும் முக்தியளித்தது.
- தீர்த்தம் மற்றும் தலவிருட்சங்களுக்குப் பெருமை சேர்த்தது.
- எளிய அடியவர்களுக்கு முக்தியளித்தது
- முதுமை, பிணி, சாபம் நீக்கியருளியது.
- குரு தோஷம் மற்றும் வறுமைகளை நீக்கியது.
- புத்திர பாக்கியம் அருளியது.
நவ திருப்பதிகள் அமைவிடம்
எண் | இறைவன் | தாயார் | தலம்/ஊர்/அமைவிடம் | கோயில் தொலைவு | தலபுராணம் |
---|---|---|---|---|---|
1 | வைகுண்டநாதன், கள்ளபிரான் | வைகுண்ட நாச்சியார், சோரநாத நாச்சியார் | ஸ்ரீவைகுண்டம் | தூத்துக்குடியில் இருந்து 32 கி.மீ | இறைவன் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சோமுகாசுரனை அழித்த புராணம் |
2 | விஜயாசனப் பெருமாள் | வரகுணமங்கை, வரகுண வல்லி | நத்தம் | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 1 கி.மீ | உரோமச முனிவர் தன் சீடனுக்கு உரைத்த புராணம் |
3 | காய்சின வேந்தப் பெருமாள் | மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி | திருப்புளியங்குடி | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 2 கி.மீ | இந்திரன், அரக்கனின் சாப விமோசனப் புராணம் |
4 | மாயக்கூத்தன் | குழந்தைவல்லி, அலர்மேல்மங்கை | பெருங்குளம் | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கி.மீ | கமலாவதியை திருமார்பில் ஏற்றிய புராணம் |
5 | தேவர் பிரான், ஸ்ரீநிவாசன் | ஸ்ரீதேவி, பூதேவி | தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி) | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 10 கி.மீ | தராசுக்கும் வில்லுக்கும் கிடைத்த சாப விமோசனப் புராணம் |
6 | அரவிந்தலோசனார் | கருந்தடங்கன்னி | தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி) | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 10 கி.மீ | இறைவன் தாமரை மலர்மேல் கொண்ட ஆசையால் உருவான புராணம் |
7 | மகரநெடுங் குழைக்காதர், நிகரில் முகில்வண்ணன் | திருப்பேரைநாச்சியார், குழைக்காது நாச்சியார் | தென்திருப்பேரை | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 12 கி.மீ | பிரம்மனுக்காக உருவான புராணம் |
8 | வைத்தமாநிதி பெருமாள் | குமுதவல்லி, கோளுர்வல்லி | திருக்கோளூர் | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கி.மீ | பேரன் சாபம் நீக்கி, தர்மம் வென்ற புராணம் |
9 | ஆதிநாதர் | ஆதிநாயகி, குருகூர் நாயகி | ஆழ்வார் திருநகரி | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கி.மீ | இறைவன் உயிர்கள் தோன்றும் முன் பூவுலகில் அவதரித்த புராணம் |
உசாத்துணை
- நவ திருப்பதிகள்: தினமலர் இதழ் கட்டுரை
- நவ திருப்பதிகள்: சொல்வனம் இதழ் கட்டுரை
- நவ திருப்பதி ஆலயங்கள்: மாலைமலர் இதழ்
- நவ திருப்பதி ஆலயங்கள்: ஒன் இந்தியா தளம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.