கண்ணதாசன்

From Tamil Wiki
Revision as of 10:18, 9 March 2022 by Jeyamohan (talk | contribs)

கண்ணதாசன் (1927- ) தமிழ்க் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். தமிழில் திரைப்படப்பாடல்கள் வழியாக பெரும்புகழ்பெற்ற கண்ணதாசன் திராவிட இயக்க ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழில் குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள் எழுதினார். மரபுக்கவிதையில் எழுதிய முக்கியமான இறுதிக்கட்ட கவிஞர் என அறியப்படுகிறார்

பிறப்பு, கல்வி

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக 24 ஜூன் 1927ல் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர் ( ஆறு சகோதரிகள், மூன்று சகோதரிகள்) சிறு வயதில் இவரை பழனியப்பச் செட்டியார் -சிகப்பி ஆச்சி (மறைவு 25-12-1958) இணையர்  தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் முடித்தபின் அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

தனிவாழ்க்கை

கண்ணதாசன் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்குச் சென்று சந்திரசேகரன் என்று புனைபெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. காரைக்குடிக்கு திரும்பி திருமகள் என்னும் இதழி பிழைதிருத்துபவராக பணிக்குச் சேர்ந்தார். அப்போதுதான் கண்ணதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்,. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள்  இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் இருக்கிறார்

இலக்கியவாழ்க்கை

கண்ணதாசனின் முதல் கதை ’நிலவொளியிலே’ கிருகலட்சுமி இதழில் 1944ல் வெளிவந்தது. காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என பலபெயர்களில் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், திரைக்குறிப்புகள் எழுதினார். டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருக்கையில் 1952-1953 ல் தன் முதல் குறுங்காவியம் ‘மாங்கனி’யை எழுதினார்.

அரசியல்

1949 ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளில் பங்கெடுத்தார். 9 ஏப்ரல் 1961 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகினார். 1962 ல் ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். 1963ல் அக்கட்சி தமிழ் தேசிய காங்கிரசுடன் இணந்தது. காமராஜரின் தீவிர ஆதரவாளராக அரசியல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காமராஜர் மறைவுக்குப்பின் இந்திய தேசியக் காங்கிரஸ் (இந்திரா) பிரிவின் ஆதரவாளரானார். இறுதிவரை காங்கிரஸ் ஆதரவாளராக நீடித்தார். மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியமைத்தபோது அவரால் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

மறைவு

கண்ணதாசன் பெதடின் போதையூசி போடும் வழக்கம் கொண்டிருந்தார். உடல்நலிந்து 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.  

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

நூல்கள்

கவிதை

காப்பியங்கள்
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • இயேசு காவியம்
  • ஐங்குறுங்காப்பியம்
  • கல்லக்குடி மகா காவியம்
  • கிழவன் சேதுபதி
  • பாண்டிமாதேவி
  • பெரும்பயணம்
  • மலர்கள்
  • மாங்கனி
  • முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
  • கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  • கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
  • அம்பிகை அழகுதரிசனம்
  • கிருஷ்ண அந்தாதி
  • கிருஷ்ண கானம்
  • கிருஷ்ண மணிமாலை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  • ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  • தைப்பாவை
கவிதை நாடகம்
  • கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு[தொகு]
  • பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
  • பஜகோவிந்தம்

நாவல்கள்

  • அவளுக்காக ஒரு பாடல்
  • அவள் ஒரு இந்துப் பெண்
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • அதைவிட ரகசியம்
  • ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
  • ஆயிரங்கால் மண்டபம்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
  • ஊமையன்கோட்டை
  • ஒரு கவிஞனின் கதை
  • கடல் கொண்ட தென்னாடு
  • காமினி காஞ்சனா
  • சரசுவின் செளந்தர்ய லஹரி
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • சிங்காரி பார்த்த சென்னை
  • சுருதி சேராத ராகங்கள்
  • சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  • தெய்வத் திருமணங்கள்
  • நடந்த கதை
  • பாரிமலைக்கொடி
  • பிருந்தாவனம்
  • மிசா
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • ரத்த புஷ்பங்கள்
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வேலங்குடித் திருவிழா
  • ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  • ஈழத்துராணி
  • ஒரு நதியின் கதை
  • கண்ணதாசன் கதைகள்
  • காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  • குட்டிக்கதைகள்
  • பேனா நாட்டியம்
  • மனசுக்குத் தூக்கமில்லை )
  • செண்பகத்தம்மன் கதை
  • செய்திக்கதைகள்
  • தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  • எனது வசந்த காலங்கள்
  • வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
  • எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
  • மனவாசம் (காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
  • எனது சுயசரிதம்

கட்டுரைகள்

  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • இலக்கியத்தில் காதல்,
  • இலக்கிய யுத்தங்கள்
  • எண்ணங்கள் 1000
  • கடைசிப்பக்கம்
  • கண்ணதாசன் கட்டுரைகள்
  • கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  • கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.
  • குடும்பசுகம்
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • சுகமான சிந்தனைகள்
  • செப்புமொழிகள்
  • ஞானமாலிகா
  • தமிழர் திருமணமும் தாலியும்
  • தென்றல் கட்டுரைகள்
  • தெய்வதரிசனம்
  • தோட்டத்து மலர்கள்
  • நம்பிக்கை மலர்கள்
  • நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  • நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
  • நான் ரசித்த வர்ணனைகள்
  • புஷ்பமாலிகா
  • போய் வருகிறேன்
  • மனம்போல வாழ்வு
  • ராகமாலிகா
  • வாழ்க்கை என்னும் சோலையிலே

ஆன்மீகம்

  • அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
  • அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
  • அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

  • அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  • ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  • ஆண்டாள் திருப்பாவை
  • ஞானரஸமும் காமரஸமும்
  • சங்கர பொக்கிஷம்
  • சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  • சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
  • திருக்குறள் காமத்துப்பால்
  • பகவத் கீதை

பேட்டிகள்

  • கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
  • சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

  • ஐயம் அகற்று
  • கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

உசாத்துணை

https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2019/07/47123/