எஸ்.ரமேசன் நாயர்

From Tamil Wiki
Revision as of 07:49, 13 December 2023 by Jeyamohan (talk | contribs)

எஸ்.ரமேசன் நாயர்:( 3 மே 1948 - 18 ஜூன் 2021) மலையாள கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பாடலாசிரியர். வானொலியில் நிகழ்ச்சியமைப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழிலிருந்து செவ்வியல்நூல்களை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் நண்பர், அவருடைய தன்வரலாற்றை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர்.

பிறப்பு, கல்வி

எஸ்.ரமேசன் நாயர் குமரிமாவட்டம் குமாரபுரம் என்னும் ஊருல் ஏ.ஷடானன் தம்பி- எல்.பரமேஸ்வரியம்மா இணையரின் மூத்தமகனாக 2 மே 1948ல் பிறந்தார்.

குமாரபுரத்தில் ஆரம்பக்கல்வி பயின்ற ரமேசன்நாயர் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள மொழியில் முதுகலை பயின்றார். பல்கலைக்கழக அளவில் முதலிடத்தில் வெற்றிபெற்றார்

தனிவாழ்க்கை

எஸ்.ரமேசன் நாயர் 1973ல் கேரள இன்ஸ்டிடியூட் ஆப் லாங்வேஜஸ் (கேரள மொழியாராய்ச்சி நிறுவனத்தில்) ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். 1975ல் இந்திய தேசிய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். வானொலிப்பணியில் இருக்கையிலேயே திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். கேரள காங்கிரஸ் அமைச்சர் குறித்து எழுதிய கட்டுரைக்காக அந்தமானுக்கு பணிமாற்றம் அளிக்கப்பட்டபோது பணியை துறந்தார்.

திரிச்சூர் விவேகோதரம் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய வி.ரமா இவர் மனைவி. ரமா ஓர் எழுத்தாளர். இரே மகன் மனு ரமேசன் திசைப்பட இசையமைப்பாளர்.

இலக்கியப் பணி

கவிதைகள்

எஸ்.ரமேசன் நாயர் கேரள மரபுக்கவிதை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகக் கருதப்படுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகள் அவை. நாராயணகுருவின் வாழ்க்கையை கவிதைவடிவில் எழுதிய குருபௌர்ணமி என்னும் கவிதைநூல் புகழ்பெற்றது

பாடல்கள்

எஸ்.ரமேசன் நாயர் சபரிமலை ஐயப்பன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்கள் பற்றிஏராளமான பக்திப்பாடல்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அவை கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பாடகர்களால் பாடப்பட்டு புகழ்பெற்றன.ப

மொழியாக்கங்கள்

எஸ்.ரமேசன் நாயர் தமிழிலிருந்து ஏராளமான செவ்வியல் நூல்களை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தார். திருக்குறள் மொழியாக்கம், சிலப்பதிகாரம் மொழியாக்கம் ஆகியவை புகழ்பெற்றவை. மு.கருணாநிதியின் நண்பரான ரமேசன் நாயர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்குநீதி என்னும் தன் வரலாற்று நூலையும் மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்துள்ளார்

திரைப்பாடல்கள்

எஸ்.ரமேசன் நாயர் 1985 ல் வெளிவந்த பத்தாமுதயம் என்னும் திரைப்படத்திற்கு முதல் பாடலை எழுதினார். ஏறத்தாழ 450 திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த ரமேசன் நாயர் அவர் இசையில் அதிகமாக எழுதினார்

அமைப்புப் பணிகள்

இந்துத்துவ பார்வை கொண்ட இலக்கிய அமைப்பான தபஸ்யாவின் மாநிலத் தலைவராக ரமேசன் நாயர் நீண்டகாலம் பணியாற்றினார்

இறப்பு

எஸ்.ரமேசன் நாயரின் மருமகள் டாக்டர் உமா 18 மார்ச் 2021ல் மறைந்தார். அது ரமேசன் நாயரை உளவியல் சார்ந்த சோர்வுக்கு ஆளாக்கியது. கோவிட் தொற்றும் ஏற்பட்டது. முன்னரே நீண்டகாலமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். எர்ணாகுளம் லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே தன் 73 ஆம் வயதில் 18 ஜூன் 2021ல் மறைந்தார்

இலக்கிய இடம்

எஸ்.ரமேசன் நாயர் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக மதிக்கப்படுகிறார். அவருடைய சிலப்பதிகார மொழியாக்கமும் திருக்குறள் மொழியாக்கமும் மிகச்சிறப்பானவை என கருதப்படுகின்றன

நூல்கள்

உசாத்துணை