அருட்காவியம்

From Tamil Wiki
Revision as of 20:15, 20 November 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added)

அருட்காவியம் (1999), இயேசு கிறிஸ்த்துவின் வாழ்க்கையை மரபுப் பாடல்களில் கூறும் நூல். மூன்று காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1050 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனை இயற்றியவர் மதலை முத்து.

பதிப்பு, வெளியீடு

அருட்காவியம் காப்பிய நூல், 1999-ல் வெளியானது.

நூல் அமைப்பு

அருட்காவியம் காப்பியம் இன்பப் பொழிவுறு காண்டம் , புரட்சிப் பொழிவுறு காண்டம் , துன்பப் பொழிவுறு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்தின் பாடல்கள் ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவினால் இயற்றப்பட்டுள்ளன. அருட்காவியம் நூலில் உள்ள மூன்று காண்டங்களில், ஓவ்வொரு காண்டமும் ஏழு சாரல்களாகப் (காதை) பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாரலும் ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது.

இன்பப் பொழிவுறு காண்டம்

இன்பப் பொழிவுறு காண்டமானது ஏழு சாரல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,

  1. காட்சியுறு சாரல்
  2. அன்புக் கசிவுறு சாரல்
  3. தோற்றமுறு சாரல்
  4. இன்புறு சாரல்
  5. இடருறு சாரல்
  6. ஞானமுறு சாரல்
  7. சோதனை மீட்புறு சாரல்

- என்பனவாகும். இன்பப் பொழிவுறு காண்டம், 270 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

காட்சியுறு சாரல்

காட்சியுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. காட்சியுறு சாரல்
  2. நகர் வளம்
  3. மக்கட்படி நிலையும் படுதுயரும்
  4. செக்கரியாவின் இறைக்காட்சி
  5. மாமரியின் இறைக்காட்சி
அன்புக் கசிவுறு சாரல்

அன்புக் கசிவுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. மாமரியும் எலிசபெத்தும்,
  2. மாமரியின் வாழ்த்துப்பா
  3. மக்களின் மருட்சி
  4. ஊமை நீங்கல்
  5. செக்கரியாவின் சான்று
தோற்றமுறு சாரல்

தோற்றமுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. யோசேப்பின் கலக்கம்
  2. யோசேப்பின் தெளிவு
  3. மக்கட் படுதுயர்
  4. மீட்பரின் தோற்றம்
  5. மீட்பின் அறிவிப்பு
இன்புறு சாரல்

இன்புறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. அன்னையின் அரவணைப்பு
  2. தாலாட்டு
  3. மாண்புறு ஞானியர்
  4. மீட்பர் அர்ப்பணம்
  5. இறைவாக்கு
இடருறு சாரல்

இடருறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. கொடுங்கோவின் கொடுமனம்
  2. இறை எச்சரிக்கை
  3. இரத்தக் களரி
  4. ஏரோதின் மறைவு
  5. ஆசானிடர்
ஞானமுறு சாரல்

ஞானமுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. அன்னையே ஆசான்
  2. வல்லுநரிடை சொற்போர்
  3. யோசேப்பின் மறைவு
  4. யோவானின் எரிசினம்
  5. கேள்விக்கணை
சோதனை மீட்புறு சாரல்

சோதனை மீட்புறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. அன்பு யோர்தனில் கரைதல்
  2. முப்பெருஞ் சோதனைகள்
  3. முக்கிய சீடரின் தெரிவு
  4. கானாவூர் மன்றல்
  5. அரிமத்தியா ஊரினன்
புரட்சிப் பொழிவுறு காண்டம்

புரட்சிப் பொழிவுறு காண்டமானது ஏழு சாரல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,

  1. பெண்ணடிமை தகர்வுறு சாரல்
  2. பகிர்வுறு சாரல்
  3. மூடப்பழக்கம் முறிபடு சாரல்
  4. அன்பதிர்வுறு சாரல்
  5. மனமாற்றமுறு சாரல்
  6. பற்றுறு சாரல்
  7. இறையரசு நிறுவுறு சாரல்

- என்பனவாகும். புரட்சிப் பொழிவுறு காண்டம் 440 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

பெண்ணடிமை தகர்வுறு சாரல்

பெண்ணடிமை தகர்வுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. சமாரியப் பெண்
  2. இரத்தப்போக்குடைய பெண்
  3. விபச்சாரப் பெண்
  4. ஊர் சுவைத்த ஊரறி பாவை
  5. மணவிலக்கு
பகிர்வுறு சாரல்

பகிர்வுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. பணிப் பகிர்வு
  2. யோவானின் துன்பப் பகிர்வு
  3. அப்பப் பகிர்வு
  4. அரியவழிப் பகிர்வு
  5. விசுவாசப் பகிர்வு
மூடப்பழக்கம் முறிபடு சாரல்

மூடப்பழக்கம் முறிபடு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. கதிர் கொய்தல்
  2. சூம்பிய கையினன்
  3. உண்ணும் முறை
  4. இறந்த மகன்
  5. குட்ட நோயாளன்

அன்பதிர்வுறு சாரல்

அன்பதிர்வுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. ஏசுவின் சகோதரர்
  2. பாடுகளின் முன்னறிவிப்பு
  3. மலைப்பொழிவு
  4. நல்லாயன்
  5. நல்ல சமாரியன்

மனமாற்றமுறு சாரல்

மனமாற்றமுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. ஏரோது
  2. செல்வச் செழிப்புள்ள வாலிபன்
  3. சக்கேயு
  4. இலேவியர்
  5. ஊதாரி மைந்தன்

பற்றுறு சாரல்,

பற்றுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. பேதுரு
  2. யாவீர்
  3. பிறவிக் குருடன்
  4. நூற்றுவர் தலைவர்
  5. கானானியப் பெண்

இறையரசு நிறுவுறு சாரல்

இறையரசு நிறுவுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. இறையரசில் யார் பெரியோன்?
  2. இறையரசும் பட்டுச் சிறாரும்
  3. இறையரசும் திராட்சைத் தோட்டமும்
  4. இறையரசும் நையாண்டியும்
  5. இறையரசும் நல்விருந்தும்
துன்பப் பொழிவுறு காண்டம்

மூன்றாவது காண்டமான துன்பப் பொழிவுறு காண்டமானது, ஏழு சாரல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,

  1. சதியுறு சாரல்
  2. விழிப்புணர்வுறு சாரல்
  3. பிடிபடு சாரல்
  4. வதைபடு சாரல்
  5. கொலைபடு சாரல்
  6. காவலுறு சாரல்
  7. மாண்புறு சாரல்

- என்பனவாகும். துன்பப் பொழிவுறு காண்டத்தில் 340 பாடல்கள் உள்ளன.

சதியுறு சாரல்

சதியுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. ஒளிவிழா
  2. இலாசரின் மாண்பு
  3. சதியாலோசனை
  4. கயபாவின் சூழ்ச்சி
  5. விருந்தேற்பு

விழிப்புணர்வுறு சாரல்

விழிப்புணர்வுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. ஆரவாரப் பவனி
  2. சீசருக்கு வரி
  3. வாக்களித்த இறையரசு
  4. விவேகமிலாத் தோழியர்
  5. பாரக வீழ்ச்சி

பிடிபடு சாரல்

பிடிபடு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. மும்முத்தப் பரிசு
  2. ஈற்றுணவு
  3. மும்முத்தக் காட்சி
  4. பேதுருவின் பேதமை
  5. இரத்த நிலம்

வதைபடு சாரல்

வதைபடு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. முன் விசாரணை
  2. ஏரோதின் எள்ளல்
  3. பிலாத்துவின் நப்பாசை
  4. கற்றூணில் வதைபடல்
  5. முள்முடி

கொலைபடு சாரல்

கொலைபடு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. கொலைபடு தீர்ப்பு
  2. கொலைக்களப் பயணம்
  3. வறுமைக் கோலம்
  4. எள்ளலுரை
  5. அன்பருவி

காவலுறு சாரல்

காவலுறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. என்புகள் முறிபடாமை
  2. அஞ்சியோர் அஞ்சாமை
  3. புண்ணுறு புண்முகம்
  4. நல்லடக்கம்
  5. காவலுறு கல்லறை

மாண்புறு சாரல்

மாண்புறு சாரல், ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. சாவுக்குச் சாவுமணி
  2. மாண்புற்ற மதலேன்மரி
  3. வழிப்போக்கரின் மாண்பு
  4. சீடர்களின் மாண்பு
  5. விண்ணேற்பு

பாடல்கள் நடை

எருசலேம் நகரத்தின் சிறப்பு

மஞ்சுறங்கும் ஆலயநல் உச்சிதனைச் சொந்தமெனத்

தஞ்சமான வானரங்கள் மஞ்சுதனைத் தட்டியே

மஞ்சமாக்கித் துஞ்சுதற்கு மந்திகளைக் கொஞ்சியே

கெஞ்சுவதைக் கண்ணுயர்த்திக் காண்

இயேசு செய்த முதல் அற்புதம்

வெற்றுளத்தை நல்லாவி பொங்கி நிறைத்தாற்போல்

கற்சாடி மூவிரண்டும் தண்ணீர் கொளச்செய்தே

அற்புதனோ அற்புதமாய் ஊறும் கனிச்சாறாய்த்

தெற்றெனவே மாற்றினார் ஆங்கு

இயேசுவின் துன்பம்

வீழ்ந்திட்ட மாபரனை வீணாராம் வீரர்கள்

சூழ்ந்தாங்கு சாட்டையால் சூரர்போல் மாறிமாறி

காழ்ப்புற்றுக் கைநோவக் காட்டமுடன் வாட்டினரே

வீழ்ந்திட்டோர் மீண்டெழா வாறு

இயேசுவின் தாய் மரியாளின் கையறு நிலை

பத்துமாதம் தன் வயிற்றில் பத்திரமாய்த் தான்சுமந்த

நித்தியனாம் நித்தியா நந்தமீயும் புத்திரனை

சத்துருக்கள் வாட்டுவதைத் தம்கணால் கண்டயர்ந்து

சத்தமின்றி நைந்தழுதாள் நொந்து


கண்ணறையின் உள்ளுயிராம் கண்மணியைக் காத்துள

கண்ணிமைபோல் தன்மகனைக் காத்துளநம் கன்னிமரி

கண்கசிந்து தன்னுயிரின் கண்ணுள்கண் சிக்கிடவே

கண்ணிலியாய் நின்றனளே காய்ந்து

மதிப்பீடு

அருட்காவியம் காப்பிய நூல், எளிய, இனிய நடையில் இயற்றப்பட்டுள்ளது. உவமை நயங்களும், வர்ணனைச் சிறப்புகளும், அணி நயங்களும் கொண்டதாக அமைந்துள்ளது. திருக்குறள், தேம்பாவணி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும், விவிலியச் செய்திகளையும் ஆசிரியர் மதலைமுத்து ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார். கடினமான சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்துள்ளதுடன், சில சொற்களுக்கு விளக்கமாக, விவிலியத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நூல் பற்றி, முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், “இலக்கிய உணர்வும் இறை உணர்வும் ஒன்று சேர்ந்த காவியம் அருட்காவியமாகும். விவிலியச் செய்திகளை எளிமையான கவிதைகளில் படைத்திருப்பது போற்றுதலுக்குரியது. இனிய ஓசையும் இனிய சொற்களும் அமையப்பெற்று நான்கடிகளிலும் ஒரே எதுகை பெற்று செப்பலோசை குன்றாமல் பாடல்களை இயற்றியுள்ள காப்பியக் கவிஞரின் இலக்கணப் புலமைக்கும் விவிலியப் புலமைக்கும் இந்நூல் சான்றாக அமைகின்றது.” என்று மதிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு, 2013