பெருங்கதை
பெருங்கதை (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) சமண மதம் சார்ந்த காப்பியம். குணாட்டியர் என்பவர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவி கொங்கு வேளிர் என்பவரால் தமிழில் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை ஆகும். இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதையாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.
காலம்
கங்க மன்னர்கள் சமணத்தை ஆதரித்தவர்கள். துர்விநீதன் எனும் கங்க மன்னன் பொ.யு. 550 முதல் 600 வரை ஆண்டான். அவன் ‘பிருகத் கதை' யை வடமொழியில் மொழிபெயர்த்தான் என்பர். கொங்குவேளிர் எழுதிய, ‘பெருங்கதை' துர்விநீதனின் மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம் என்பர் ஈ.எஸ்.வரதராச அய்யர்.
நூல் அமைப்பு
பெருங்கதை உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. அகவற்பாவால் ஆன தொடர்நிலைச் செய்யுள். முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11-ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.
குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி ஆவான். உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.
தெய்வம் பேணல், ஊழ்வினையின் வன்மை, கல்வியின் பெருமை, நட்பின் திறம், காலம் இடம் ஆகியவை அறிந்து செயல்படுதல், பெண் கல்விச் சிறப்பு, செய்நன்றி அறிதல், ஆசிரியர் மாணவரது இலக்கணங்கள், மந்திரிகளின் இயல்பு, துறந்தோர் பெருமை முதலிய பல குறிப்புகள் இந்நூலில் உள்ளன. பெருங்கதைப் பாடல்கள் நயமிகுந்தவை. இந்நூலின் கதை திருமங்கை ஆழ்வாராலும், சீத்தலைச் சாத்தனாராலும் எடுத்தாளப்பட்டு உள்ளது. சிலப்பதிகார உரைப் பாயிரத்துள் அடியார்க்கு நல்லார் இதனைக் குறிப்பிடுவார்.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.