first review completed

சுசித்ரா

From Tamil Wiki
Revision as of 17:59, 15 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
சுசித்ரா

சுசித்ரா (சுசித்ரா ராமச்சந்திரன்) (டிசம்பர் 16, 1987) ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். ஐரோப்பிய ஓவியனின் பார்வையிலிருந்து உயிர்பெறும் அவரது 'ஒளி' சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.

பிறப்பு, கல்வி

சென்னை மயிலையில் டிசம்பர் 16, 1987 அன்று ராமச்சந்திரன்- ஜானகி இணையருக்கு மகளாக பிறந்தார். குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பள்ளி இறுதிக்கல்வி மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். பின்னர் பொறியியல் கல்வியை விருதுநகர் காமராஜ் கல்லூரியில் நிறைவு செய்தார்.

தொடர்ந்து நரம்பணுவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்கா பிட்ஸ்பர்க் நகரில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி ஆய்வு செய்தார்.

தனி வாழ்க்கை

அறிவியல் ஆய்வாளராக உள்ள வருணை ஜூன் 1, 2014 அன்று மணந்தார். ராகேந்து என்றொரு மகன் உள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள அறிவியல் ஆய்வு கூடம் ஒன்றில் விஞ்ஞானியாக பணியாற்றுபவர் தற்போது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

படைப்புகள்

இலக்கியத்தில் தன் மீது செல்வாக்கு செலுத்தும் முன்னோடிகள் என எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஜெயமோகன், அர்சுலா ல குவின், ஐசக் தினேசென் ஆகியோரைக் குறிப்பிடும் சுசித்ராவின் முதல் படைப்பு ‘குடை’ (சிறுகதை) 2017-ல் விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் நடத்திய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. அக்கதை இதழ்களிலோ தொகுப்பிலோ இடம்பெறவில்லை. 2017-ல் பதாகை இதழில் வெளியான 'சிறகதிர்வு' (சிறுகதை) எனும் அறிவியல் புனைவுகதையே பிரசுரமான முதல் கதை. அறிவியல் புனைகதைகளும் எழுதிவருகிறார்

தன் கதைகளைப் பற்றிச் சொல்லும்போது ’என் மொழியின் மரபு மட்டும்மல்லாது, மானுடத்தின் அகம் இந்தப் பிரபஞ்ச வெளியை அர்த்தப்படுத்த கதைகளை உருவாக்கும் பெருமரபில் என் இருப்பை உணர்கிறேன். அறமும் மறமும் ரௌத்திரமும், அருளும் கனிவும் மானுடமும், தவமும் அழகும் பேரிருப்பும், எல்லாம் வந்தது கதை வழியே’ என்று கூறுகிறார் (ஒளி தொகுப்பின் முன்னுரை).[1]

மொழியாக்கம்

  • ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘Periyamma’s Words’ என்று Asymptote பத்திரிக்கையில் வெளியானது (2017)[2]
  • அ.முத்துலிங்கத்தின் ஆட்டுப்பால் புட்டு ஆங்கிலத்தில் Narrative Magazine[3]
  • ஜெயமோகனின் தேவகி சித்தியின் டைரி மொழியாக்கம்[4]

இலக்கிய இடம்

அடிப்படை மெய்யியல் வினாக்களை நோக்கிச் செல்லும் சுசித்ராவின் கதைகள் பெரிதும் கவனிக்கப்பட்டவை. அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் குறியீடுகளை பயன்படுத்தி அவ்வகையான உசாவல்களையே முன்னெடுக்கிறார். தமிழில் அறிவியல் புனைகதைகளின் புத்தெழுச்சியை முன்னெடுக்கும் படைப்பாளிகளில் சுசித்ரா முக்கியமானவர். சுசித்ரா இன்றைய அறிவியல் புனைகதைகளைப்பற்றிச் சொல்கையில் ‘இன்று எழுதப்படும் அறிபுனை கதைகளில் உள்ள நெகிழ்ச்சி ஒருவகையில் இந்த எல்லைகளை கடந்து தூய கதைகளாக நிற்க முற்படுவதன் வழியாக உருவாகி வருகிறது’ என்கிறார்.[5]

கதை சொல்லல் தன்மை கூடியிருக்கும் அதே சமயம், விளையாட்டாக நின்றுவிடாமல் இக்கதைகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்துக்கு – கலை மற்றும் அறிவியலிடையே உள்ள முரண்பாடு, அது விளைவிக்கும் மோதல், கலை மானுடனுக்கு அளிப்பதென்ன, பயம் என்ற உணர்வை சமூகமும் அரசும் தனிமனிதனுக்கு எப்படி புகட்டி ஆள்கிறது என்பவை என்று விமர்சகர் பிரியம்வதா குறிப்பிடுகிறார்.[6]

விருதுகள்

  • 2017 - Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசு (பெரியம்மாவின் சொற்கள் மொழியாக்கம்)
  • 2020 - ‘ஒளி’ தொகுப்புக்காக வாசகசாலை இளம் எழுத்தாளர் விருது

நூல்பட்டியல்

  • ஒளி (2020, யாவரும் பதிப்பகம்)

உசாத்துணை

ஆகாசமிட்டாய் | Literature, art, philosophy | Bilingual – Tamil & English ]

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.