அனுராதா ஆனந்த்
அனுராதா ஆனந்த் தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கவிதைகள், சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
அனுராதா ஆனந்த் சென்னையில் பி.எம். சங்கர், செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். சென்னை ஐவஹர் வித்யாலயாவிலும், ஃபாத்திமா கான்வென்டிலும் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
அனுராதா ஆனந்த் மகன் ப்ரணவ், மகள் நயனிகாவுடன் சென்னையில் வசிக்கிறார். குடும்ப நிறுவனத்தில் இணைய வர்த்தகத் துறையில் வேலை செய்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
அனுராதா ஆனந்தின் கவிதைகளும், கவிதை மொழிபெயர்ப்புகளும் அவரது கல்லூரி காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளிவந்தன. 2015 முதல் அவரது கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்தன. 2017-ல் விகடன் தடம் இதழில் பதினாறு சமகால கவிஞர்களின் கவிதை மொழிப்பெயர்ப்புகள் ஒரே இதழில் பிரசுரமானது. இந்தக் கவிதைகள் ‘எண் ஏழு(7) போல் வளைபவர்கள்’ என்ற தொகுப்பாக வெளிவந்தது.
அனுராதா ஆனந்தின் முதல் சிறுகதை 'மஞ்சள் குருவி' 2017-ல் வெளிவந்தது. இவரின் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள், விகடன், விகடன் தடம், உயிர்மை, கல்கி, குங்குமம், குமுதம், கல்குதிரை, ஓலைச்சுவடி, மங்கையர் மலர், புரவி, நம் நற்றிணை, நீலம் போன்ற பத்திரிகைகளிலும் வாசகசாலை, கனலி, வனம், நுட்பம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபது கவிஞர்களுள் ஒருவர்.
விருதுகள்
- 2018-ல் ’எண் 7 ஏழு போல் வளைபவர்கள்’ தொகுப்பிற்காக ஆத்மாநாம் விருது
- 2019-ல் ’கறுப்பு உடம்பு’ தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்பிற்காக விகடன் இலக்கிய விருது
- 2021-ல் ’ஆணின் சிரிப்பு’ என்ற தொகுப்பிற்காக வாசகசாலை விருது
நூல்கள் பட்டியல்
மொழிபெயர்ப்பு
- அழிக்க முடியாத ஒரு சொல் (சிறுகதைகள்)
- நிக்கனோர் பர்ரா: 27 எதிர் கவிதைகள்
- ஆணின் சிரிப்பு (கவிதை)
- கறுப்பு உடம்பு (கவிதை)
- கற்பனைகளால் நிறைந்த துளை (கவிதை)
- எண்: 7 போல் வளைபவர்கள் (கவிதை)
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
இணைப்புகள்
- அனுராதா ஆனந்த் ஏற்புரை | எமிலி டிக்கின்சன் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
- கவிஞர் ஆத்மாநாம் விருது 2018 | அனுராதா ஆனந்த் ஏற்புரை
- 'பாடுகளின் இறுதியில் ஒரு கதவிருந்தது: லூயி க்ளக்கின் கவிதைகள் பேசியது என்ன?: அனுராதா ஆனந்த்
- பூர்வகுடி கவிஞர் Natalie Diaz-க்கு புலிட்சர் விருது... இவர் கவிதைகள் கலங்கடிப்பது ஏன்?: ஆனந்தவிகடன்
✅Finalised Page