ஆ.வே. இராமசாமியார்
ஆ.வே. இராமசாமியார் (ஆலத்துடையான்பட்டி வேங்கடாச்சலம் இராமசாமியார்) (ஏப்ரல் 11, 1928 - ஜூலை 16, 2017) தமிழறிஞர். திருக்குறள் சார்ந்த நூல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
ஆ.வே. இராமசாமியார் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டியில் வேங்கடாச்சலம் செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். உள்ளூர் திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். படிக்க வசதியில்லாததால் எட்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றார். இராம. கோவிந்தசாமி, அ. அரங்கசாமி, சிவப்பிரகாச சேதுராயர், எச்.வி. வேங்கடராமர், என். இராமசாமி ஆகியோர் இவரின் ஆசிரியர்கள்.
தனிவாழ்க்கை
ஆ.வே. இராமசாமியார் கி. தனம் அவர்களை மணந்தார். திருவள்ளுவன், தொல்காப்பியன் ஆகியோர் இவரின் மகன்கள்.
ஆசிரியப்பணி
ஆ.வே. இராமசாமியார் திருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிபாளையத்தில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக முப்பத்தியிரண்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
அமைப்புப்பணிகள்
- வைரிசெட்டிபாளையம் திருக்குறள் பேரவைச் செயலாளராக இருந்தார்.
- தன் மாதவருமானத்தில் சேமித்த பணத்தைக் கொண்டு தான் வேலை செய்த பள்ளி, அல்லூர் தவச்சாலை, கா.சு. பிள்ளை நினைவு இலக்கியக்குழுக்களிலும், தலைநகர் தமிழ்ச்சங்கத்திலும் அறக்கட்டளைகள் நிறுவி தொண்டு செய்தார்.
- மாவட்ட நூலகம், ஒன்றியத்தொடக்கப்பள்ளி, தமிழ்த்தாய்த்திருக்கோயில், தமிழ்க்குடில் உள்ளிட்ட அமைப்புகளின் புரவலர்.
இலக்கிய வாழ்க்கை
ஆ.வே. இராமசாமியார் திருக்குறளை தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் தொண்டுகளைச் செய்தார். திருக்குறள் சார்ந்த பதின்மூன்று நூல்களை எழுதினார். குறளன்பன் என இலக்கிய உலகில் அறியப்பட்டார். இலக்கியத்திறனாய்வு நூல்கள், தன்வரலாற்று நூல்கள், பயணக்கட்டுரை நூல்கள் எழுதினார். இவரின் வாழ்வை சிவ. முத்துக்குமாரசாமி நூலாக எழுதினார்.
மறைவு
ஆ.வே. இராமசாமியார் ஜூலை 16, 2017-ல் காலமானார்.
உசாத்துணை
- திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர்: ஆ.வே. இராமசாமியார்: மு. இளங்கோவன்
- குறளன்பன் ஆ.வே. இராமசாமியார் மறைவு: மு. இளங்கோவன்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.