கவியழகன்
கவியழகன் (மி. இருதயராஜ்; புலவர் மி. இருதயராசு; நவமணி) (மே 31, 1940 - மார்ச் 15, 2008) எழுத்தாளர், கவிஞர். பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும், சிறார்களுக்கான பல நூல்களையும் எழுதினார். வரலாற்று நாவல்கள் பலவற்றைப் படைத்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறந்த தமிழ்ப் படைப்பாளி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
மி. இருதயராஜ் என்னும் இயற்பெயரை உடைய கவியழகன், மே 31, 1940 அன்று, மதுரையில் உள்ள ஞானஒளிவுபுரத்தில், மிக்கேல்-அருமை மேரி இணையருக்குப் பிறந்தார். திருத்தங்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றார். சாத்தூரில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மதுரை தமிழ்ச் சங்கத்தில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கவியழகன், மதுரை நாகமலை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மனைவி: நவமணி. மகன்கள்: அற்புதசாமி, சகாயராஜன்.
இலக்கிய வாழ்க்கை
கவியழகன், பாரதிதாசனால் ‘கவியழகன்’ என்று பெயர் சூட்டப் பெற்றார். அதுமுதல் ‘கவியழகன் எம்.ஏ.’ என்ற பெயரில் எழுதினார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். அண்ணாவும், கண்ணதாசனும் கவியழகனைப் பாராட்டி ஊக்குவித்தனர். கவியழகனின் முதல் படைப்பு ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ எனும் புதினம், 1969-ல் வெளிவந்தது. தொடர்ந்து பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தார். தமிழ் அணி இலக்கணத்தைக் கதைப்போக்கில் விளக்கும் வகையில், ’தமிழ் அணி இலக்கணக் கதைகள்’ என்ற நூலை எழுதினார். சிறார் நூல்கள் முதல் பொது வாசிப்புக்குரிய வரலாற்று நூல்கள் வரை 300-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
பொறுப்புகள்
- மதுரை எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர்.
- மதுரை நாகமலை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி பண்பாட்டுக் கழகச் செயலாளர்.
விருதுகள்
- மதுரை தமிழாசிரியர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
- நன்னெறி இலக்கிய வித்தகர் பட்டம்.
- சிறந்த தமிழ்ப் படைப்பாளி விருது.
மறைவு
கவியழகன், உடல் நலக் குறைவால், மார்ச் 15, 2008 அன்று காலமானார்.
இலக்கிய இடம்
கவியழகன், மரபுக்கவிதைகளை அதிகம் எழுதினார். பொதுவாசிப்புக்குரிய புதினங்களை எழுதினார். இவரது கவிதைகளைப் பற்றி பாரதிதாசன்,
”குவியிதழ் மலர்ந்தான்
குடத்தேனே அந்தக்
கவியழகன் தந்த கவி”
- என்று வாழ்த்தினார். கிறிஸ்தவ எழுத்தாளர்களுள் ஜெகசிற்பியனை அடுத்து அதிகம் வரலாற்று நாவல்களை எழுதியவராகக் கவியழகன், அறியப்படுகிறார்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- மாணவர் மேனிலைத் தமிழ் இலக்கணம்
- மாணவர்க்கு குறள் சொல்லும் நீதிக் கதைகள்
- அறவழிகாட்டும் குறள்நெறிக் கதைகள்
- தேன்தமிழ் திருக்குறள் கதைகள்
- பாரதி பாடிய ஆத்திசூடிக் கதைகள்
- சிரிப்பிற்கும் சிந்தனைக்கும் ஏற்ற சிறுவர் கதைகள்
- சிறுவர் கதைப் பூங்கா
- மாணவச் செல்வங்களுக்குப் போப்பாண்டவர்
- மாணவர் வகுப்பறைக் கதைகள்
- புனிதர்களின் கதைகள்
- நல்லறிவு மேம்பாட்டுக் கதைகள்
- தமிழ் அணி இலக்கணக் கதைகள்
- சேவையில் சிறந்த சிறுவர் கதைகள்
- சின்னஞ்சிறிய சிந்தனைக் கதைகள்
- பண்பை வளர்க்கும் பைபிள் கதைகள்
- கற்போம் கற்பிப்போம்
- குறள் வழிக் குறுங்கதைகள்
- சிறுவர்களுக்கான அமுத சிறுகதைகள்
- +1, +2 மாணவர் தமிழ் இலக்கணம்
கட்டுரை நூல்கள்
- சுற்றுப்புறச் சூழலில் பாசுபாடுகள்
- அறிவியல் செல்வம்
- சிலேடைச் செல்வம்
- கற்கண்டுத் தமிழில் கட்டுரையும் கடிதமும்
- தேனமுதம்
- முத்துக்குவியல்
- இதயம் கவர்ந்த இரட்டையர்கள்
கவிதைத் தொகுப்பு
- கவிதைப் பூக்கள்
சிறுகதைத் தொகுப்பு
- யாவரும் கேளிர்
- சரித்திரம் போற்றும் கோடிக் கதை
வாழ்க்கை வரலாறு
- புனித சகாய அன்னை
- புனித பாத்திமா அன்னை
- புனித லூர்து அன்னை
புதினங்கள்
- தியாக மலர்கள்
- அழியா நட்பு
- ஒரு மலரின் தியாகம்
- கவிதை பாடும் பறவைகள்
- வாய்மையே வெல்லும்
- கேளடி என் கண்மணி
- உறவுக்குப் பிரிவில்லை
- வானத் தாமரை
- மலர்மதி
- அல்லிமலர்
- காணி நிலம்
- நான்கு திசைகள்
- ராக புஷ்பங்கள்
வரலாற்றுப் புதினங்கள்
- களங்கண்ட இளஞ்சேரல்
- காஞ்சிக் காவலன்
- மாவீரன் புலித்தேவன்
- காவியச் செல்வி
- கோப்பெருந்தேவி
- மண் சிவந்தது
- மன்னர் மன்னன்
- மராட்டிய மாவீரன்
- நர்த்தன நாயகி
- நித்திலவல்லி
- பல்லவ சிம்மன்
- வண்டுவார் குழலி
- வீர வேந்தன்
- விடுதலை வேங்கை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jun-2023, 06:56:59 IST