குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர் ( ) நா.பார்த்தசாரதி எழுதிய நாவல். இலட்சியவாத நோக்குள்ள மையக்கதாபாத்திரங்களை முன்வைத்த படைப்பு. தமிழின் புகழ்பெற்ற பொதுவாசிப்புக்குரிய புனைவுகளில் ஒன்று.
எழுத்து வெளியீடு
குறிஞ்சிமலர் கல்கி இதழில் தொடர்கதையாக வெளியாகியது. நா.பார்த்தசாரதி இந்நாவலை ‘மணிவண்ணன்’ என்ற பெயரில் எழுதினார். பின்னர் தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக டிசம்பர் 1960ல் நூல்வடிவம் கொண்டது.
’தொட்டதையெல்லாம் விளங்கச் செய்யும் பொலிவு வாய்ந்தது தமிழ்ப் பெண்மரபு. அந்த மரபிலிருந்து இந்த நாட்டு வாழ்க்கை யையே மாற்றியமைக்கும் பண்பு வாய்ந்த இலட்சியப் பெண்கள் பிறக்க வேண்டும்! அப்படி ஓர் இலட்சியப் பெண் இதை எழுதுகிறவனுடைய கனவில் பிறந்தாள். கற்பனையில் தோன்றி 'என்னைக் காவிய மாக்குங்கள் என்றாள். இந்தக் கதையிலும் அவள் பிறக்கிறாள்; இனி நாட்டிலும் பிறப்பாள். பிறக்க வேண்டும் என்பது இந்தக் கதையை எழுதுகிறவனுடைய ஆசை’ என்று நா.பார்த்தசாரதி முன்னுரையில் இந்நூலின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவல் பற்றி மு. வரதராசன் ’இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது’ என்று முதல்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்
நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவல் பற்றி க.நா.சுப்ரமணியம் கடுமையான விமர்சனம் எழுதியிருக்கிறார். அதில் “டைரி எழுதுகிற லட்சிய வாலிபனும், தெருவில் கார் மோதி மயங்கி விழுகிற லட்சிய ‘வாலிபி’யும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் நடக்கிறது ‘குறிஞ்சி மலரி’ல், காதல் பிறக்கிறது; ஆனால் இருவரும் லட்சிய ஜன்மங்கள் ஆயிற்றே! காதல் பூர்த்தியாகலாமா? பூரணியையும் அரவிந்தனையும் வைத்து ‘மணிவண்ணன்’ (அல்லது நா. பார்த்தசாரதி) 560 பக்கங்கள் எழுதியிருக்கிறார், வளவளவென்று அடிக்கொருதரம் ஆச்சரியக் குறியிட்டு, பக்கத்துக்கு நாலுதரம் வாசகர்களைக் கிள்ளி அழவிட்டுக்கொண்டு, தானும் அழுது கண்ணிர் வரவழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். ஐம்பது பக்கத்தில் முடித்திருந்தால், முதல்தரமான கதையாக இல்லாவிட்டாலும், சுமாரான கதையாக இருந்திருக்கும். ஐநூறு பக்கத்தில் தமிழ் நாட்டின் சாதாரணத் தொடர்கதையாக, வாசகர்களுக்கு மிகவும் விருப்பமான தொடர்கதையாக உருவாகியிருக்கிறது” என மதிப்பிடுகிறார்.
