first review completed

அவிநயம்

From Tamil Wiki
Revision as of 10:03, 12 February 2022 by Logamadevi (talk | contribs)

அவிநயம் (பொ.யு. 9-ஆம் நூற்றாண்டு) தமிழ் பாட்டியல் இலக்கண நூல். அவிநாயனார் இதன் ஆசிரியர். இந்நூல் பொ.யு 6-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது. பன்னிரு பாட்டியல் நூலில் இந்நூலின் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்வகைமையின் இலக்கணத்தைப் பேசும் துறை.

நூலாசிரியர்

அவிநயனார் என இந்நூலாசிரியரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இவர் பொ.யு 9 நூற்றாண்டினர் என்பது பொதுவான கணிப்பு. சமணர் என்பது இந்நூலில் அணுக்கொள்கை, ஊழ்க்கொள்கை ஆகியவை பேசப்படுவதில் இருந்து தெரியவருகிறது.

முன்செய் வினையது முறையா உண்மையின் ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து

என ஊழ்வினைக்கொள்கையை அவிநய மேற்கோள் குறிப்பிடுகிறது. (யாப்பருங்கலவிருத்தி, ஒழிபியல் 95, மேற்கோள்)

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றது. இவை வெவ்வேறு நூல்களாக இருக்கலாம். அவிநயப் புறனடை தனிநூல் என்பது உறுதி என்கிறார் க.ப. அறவாணன்.  (சைனரின் தமிழிலக்கணக் கொடை, பக். 178)

இலக்கணங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவினாலேயே எழுதப்பெறும். வெண்பாவில் எழுதுவது சங்ககாலத்திற்குப் பின் வந்த மரபாக இருக்க வேண்டும். முதல்முறையாக வெண்பாவில் எழுதப்பட்ட நூல் அவிநயப் புறனடை. வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்பதை முதலில் காட்டியவர் சமணராகிய அவிநயனார் என்று ஆய்வாளர் சொல்கிறார்கள்[1].

நூல்

அவிநயம் என்பது வடமொழியில் நடிப்பு, மெய்ப்பாடு ஆகியவற்றுக்கான சொல். சமணராகிய அவிநயர் அத்தலைப்பில் நூல் செய்தமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம். அவிநயம் புகழ்பெற்ற நூலாக இருந்துள்ளது. அது நூலாக கிடைக்கவில்லை. தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் போன்ற நூல்களில் இந்நூலின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றை தொகுத்து மயிலை சீனி வேங்கடசாமி அவிநயம் என்னும் நூலாக ஆக்கினார். இந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார்.

நூலமைப்பு

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் மயிலை சீனி வேங்கடசாமியால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.