being created

திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
திருவாரூர் (அ) ஆரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் சுவரிலும் கி.பி. 1700-ல் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தேவாசிரிய மண்டப ஓவியங்களை வரைந்தவர் ஓவியன் சிங்காதனம் ஆவர்.
திருவாரூர் (அ) ஆரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் சுவரிலும் கி.பி. 1700-ல் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தேவாசிரிய மண்டப ஓவியங்களை வரைந்தவர் ஓவியன் சிங்காதனம் ஆவார்.


== இடம் ==
== இடம் ==

Revision as of 23:07, 14 March 2023

திருவாரூர் (அ) ஆரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் சுவரிலும் கி.பி. 1700-ல் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தேவாசிரிய மண்டப ஓவியங்களை வரைந்தவர் ஓவியன் சிங்காதனம் ஆவார்.

இடம்

சென்னையில்(பாண்டிச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை வழி) இருந்து 300 கி.மீ, தஞ்சாவூரில் இருந்து 61 கி.மீ, கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ, காரைக்காலில் இருந்து 39 கி.மீ தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது. திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தேவாசிரிய மண்டபம் அமைந்திருக்கும் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

ஓவியக் காட்சிகள்

முசுகுந்த புராணம், மனுநீதி சோழன் புராணம் ஆகிய இரண்டு புராணங்கள் காட்சி விளக்கங்களோடு தேவாசிரிய மண்டபத்தின் விதானத்திலும்(உட்கூரை) சுவரிலும் வரையப்பட்டுள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் கந்த விரதப் படலம் என்ற பகுதி உள்ளது. அதில் முசுகுந்தன் என்ற அரசன் எவ்வாறு விரதமிருந்து விண்ணுலகில் இருந்து தியாகேச மூர்த்தியையும் பிற விடங்கர்களையும் இவ்வுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரிலும் மற்ற ஆறு விடங்கத் தலங்களிலும் ஸ்தாபித்தார் என்பது கூறப்பட்டுள்ளது. முசுகுந்தன் இந்திரனுக்குப் போர் உதவி செய்வதற்காக நவ வீரர்களுடன் தேவலோகம் சென்று வாரகலி அசுரனுடன்   போரிடும் காட்சிகள், யானை, குதிரை, காலாட் படைகளின் அணிவகுப்பு, இந்திரனை வெற்றி பெறச் செய்த பிறகு தேவலோகத்தில் சில நாட்கள் தங்கியிருந்த போது இந்திரன் பூஜிக்கும் தியாகராஜ மூர்த்தியின் திருவுருவம் தனக்கு வேண்டும் என்று முசுகுந்தன் கேட்பது, இந்திரன் அதை கொடுக்க மனமில்லாமல் அது போன்ற ஆறு திருவுருவங்களை தேவதச்சன் உதவியுடன் செய்து ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்தில் வைத்து எந்த மூர்த்தியை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல கூறுதல், ஈசன் அருளால் உண்மையான தியாகவிடங்கரை முசுகுந்தன் கண்டுபிடித்து எடுப்பது, ஏமாற்றமடைந்த இந்திரன் மற்ற ஆறு திருவுருவங்களையும் பூலோகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வேண்ட அதன்படி முசுகுந்தன் பூலோகம் எடுத்து வருதல், தேவதச்சன் உதவியுடன் திருவாரூரே மூல விடங்கர் வைக்க ஏற்ற தலம் என அறிய முசுகுந்தனும் தியாகேசரை திருவாரூரில் வைத்து தரிசித்து அம்மூர்த்திக்கு விழா எடுப்பது வரை தேவாசிரிய மண்டப உட்கூரையில் ஓவிய காட்சிகளாக தீட்டப்பட்டுள்ளது. இந்திரனும் முசுகுந்தனும் செலுத்தும் அம்புகளில் செயம் என்றும் வாரகலி அசுரன் செலுத்தும் அம்புகளில் அவஜெயம் என்றும் எழுதப்பட்டிருப்பது இந்திரனின் வெற்றியை காட்டுகிறது. இக்காட்சித் தொடருக்கு அருகே இந்திரனுக்கு தியாகராஜ மூர்த்தி எவ்வாறு கிடைத்தார் என்ற மற்றொரு புராணமும் தீட்டப்பட்டுள்ளது. திருமால் தியாகராஜர் திருவுருவத்தை படைத்து தன் மார்பில் வைத்து பூசித்ததாகவும் பின்பு இந்திரன் திருமாலிடம் இருந்து அந்த திருவுருவத்தை பெற்று பூசித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு கீழாகவும் ஓலையில் எழுதப்பட்டுள்ளது போன்று காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது. திருவாரூர் கோவிலில் உள்ள விக்கிரம சோழனின் கல்வெட்டில், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விரிவாக உள்ள மனுநீதிச் சோழன் வரலாறு தேவாசிரிய மண்டப சுவரில் தீட்டப்பட்டிருந்தாலும் அவ்வோவியங்கள் பணி முடியாத நிலையிலேயே உள்ளது. காட்சி விளக்க குறிப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன. ஓவிங்களில் இடம்பெற்றுள்ள தெய்வ உருவங்களும், மனிதர்களும் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களில் பல்வேறு வகையான நுட்பங்களும் வகைகளும் காட்டப்பட்டுள்ளது. ஆரூர் கோவிலின் அமைப்பு, மற்ற கோவில்கள், மண்டபங்கள் என பலவிதமான கட்டடங்களை தேவாசிரிய மண்டப ஓவியங்களில் காணமுடிகிறது. அரசவை நாட்டியக் காட்சிகள், இறைவன் வீதி உலா வரும் போது நிகழும் நாட்டியக் காட்சிகள், தேவலோகத்தில் நிகழும் நாட்டியக் காட்சிகள், வீதியில் நிகழும் ஶ்ரீ பலி பூசையின் போது நிகழும் நாட்டியம் என நாட்டியக் கலையின் பல்வேறு கூறுகள், திருவாரூர் கோவிலுக்குரிய பூத நிருத்தம் என்ற மத்தளம் இசைக்கும் மரபு, பஞ்சமுக வாத்தியம் இசைத்தல், திருவாரூர் கோவிலில் கொடியேற்று விழா துவங்கி நாள்தோறும் நிகழும் மகோஸ்தவ நிகழ்வுகள் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வானத்தில் செல்லும் ராக்கெட் வாணம், தரையில் சுற்றும் வாணம், கோலில் சுற்றும் வாணம் என பல வகை வாணங்கள் இந்த ஓவியங்களில் குறிப்பாக விழாக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. ஒரு வாணத்தின் மீது நிலச்சக்கர வாணம் என எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புகள்

18-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை மராத்திய மன்னர்களான சகஜியும் பின்னர் முதல் சரபோஜியும் ஆட்சி புரிந்தபோது திருவாரூரில் அம்மன்னர்களின் பிரதிநிதியாய் சாமந்தனர்(படைத்தலைவர்) ஒருவர் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார். அவரது பிரதானியாய் பணிபுரிந்தவர் ஓவியன் சிங்காதனம். ராயசாமந்தனாரின் பிரதானியாய் அரசு அலுவல்களை பார்த்ததோடு ஓவியக் கலையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் சிங்காதனம். திருவாரூரில் தேவாசிரிய மண்டப ஓவியக் காட்சிகளை அன்றைய தஞ்சை மராத்திய அரசின் ஆதரவோடு ஓவியன் சிங்காதனம் வரைந்தார். அஜந்தா குகை ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஓவியங்கள் உட்பட பண்டைய இந்திய ஓவியங்கள் எதிலும் அந்த ஓவியங்களை வரைந்தவர் பற்றிய குறிப்புகள் இல்லை. தேவாசிரிய மண்டப ஓவியங்களை படைத்த ஓவியன் சிங்காதனம் தன் பெயரை மட்டுமல்லாமல் தன் உருவத்தையும் தான் தீட்டிய ஓவியங்களில் இடம்பெறச் செய்துள்ளார். தலையில் முண்டாசு, முகத்தில் தாடி மீசை, இடுப்பில் வேஷ்டி, அதன் மேல் சுற்றப்பட்ட துண்டு, நெற்றியில் திருநீறு, காதுகளில் காதணி, இறைவனை வணங்கும் கூப்பிய கரங்கள் ஆகியவை சிங்காதனத்தின் தோற்றமாக உள்ளது. சில இடங்களில் சிங்காதனம் தரித்துள்ள துண்டில் சிங்காதனம் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் சிங்காதனம் உருவத்தின் காலுக்கு கீழ் ராயசாமந்தனார் வாசல் பிரதானி சித்திர வேலை சிங்காதனம் என்றும் இந்த சித்திரம் எழுதுகிற சித்திர வேலை சிங்காதனம் சதா சேவை என்றும் எழுதப்பட்டுள்ளது. தன் உருவத்தை காட்டும் இடங்களிலெல்லாம் ஆரூரில் அவர் காலத்தில் வாழ்ந்த பலரின் உருவத்தையும் ஓவியமாக தீட்டி அருகே அவர்கள் யார் என்ற குறிப்புகளையும் சேர்த்துள்ளார் ஓவியன் சிங்காதனம்.

சிங்காதனம் தேவாசிரிய மண்டபத்து ஓவியங்களின் கீழ் எழுதியுள்ள புராண விளக்கங்களும் விழாக்கள் பற்றிய செய்திகளும் மக்களின் பேச்சு வழக்குகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் 'ஓவியன் சிங்காதனம்' என்ற தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நிலை

இந்த மண்டபத்தில் ஒட்டு மொத்தம் 96 ஓவியங்கள் உள்ளன. குறிப்பாக தியாகராஜர் தேவலோகத்திலிருந்து தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம் யானை வாகனம் ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாண வேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட 96 வகையான ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டது இந்நிலையில்

1988ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் செய்த பொழுது இந்த ஓவியங்கள் பழுதடைந்தன. பின்னர் தனிநபர் ஒருவர் தற்போதைய பெயிண்ட்களை பயன்படுத்தி பழுதடைந்த ஓவியங்களை சரி செய்ததற்கு பக்தர்களும் பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து சமய அறநிலைத்துறை பழைய மூலிகைகளை கொண்டு ஓவியங்களை வரைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஓவியங்கள் வரையும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது தற்போதுவரை தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பழைய மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைய வேண்டும் அதுமட்டுமின்றி தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் எடுத்து அதன் வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உசாத்துணை

தமிழகக்‌ கோயிற்கலை மரபு, ஆசிரியா்‌: முனைவர்‌. குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, வெளியீட்டு மேலாளர்‌ மற்றும்‌ காப்பாளர்‌: சரசுவதி மகால்‌ நூலகம்‌, தஞ்சாவூர்‌.

கலையியல் ரசனைக் கட்டுரைகள், குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, அகரம் பதிப்பகம்

திருவாரூர்‌ மாவட்டத்‌ தொல்லியல்‌ வரலாறு, ஆசிரியர்கள்‌: பெச. இராசேந்திரண்‌, வெ. வேதாசலம்‌, செ. சாந்தலிங்கம்‌, க. நெடுஞ்செழியன்‌, பொதுப்‌ பதிப்பாசிரியர்‌: கு. தரமோதரன்‌, இயக்குநர்‌, தொல்லியல்‌ துறை, வெளியீடு: தமிழ்நாடு தொல்லியல் துறை

The Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur, V.K. Rajamani and David Shulman

https://tamil.abplive.com/news/thanjavur/request-to-restore-400-year-old-paintings-at-thiruvarur-thiyagaraja-swamy-temple-21961



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.