சரோஜா ராமமூர்த்தி: Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940இல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார். | சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940இல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார். | ||
[[File:சரோஜா, து. ராமமூர்த்தி.jpg|thumb|358x358px|சரோஜா, து. ராமமூர்த்தி]] | [[File:சரோஜா, து. ராமமூர்த்தி.jpg|thumb|358x358px|சரோஜா, து. ராமமூர்த்தி (நன்றி: பாரதி)]] | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == |
Revision as of 16:54, 24 January 2023
சரோஜா ராமமூர்த்தி (ஸரோஜா ராமமூர்த்தி) (ஜூலை 27, 1921 - ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். இவருடைய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.
வாழ்க்கைக் குறிப்பு
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940இல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார்.
தனிவாழ்க்கை
எழுத்தாளர் து. ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி ஜனவரி 28, 1943இல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி, கணேசகுமார், குமரன்.
மகள் பாரதி எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்கள். ஜெயபாரதி தந்தையின் 'குடிசை' கதையை அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
சரோஜா ராமமூர்த்தியும் அவர் கணவர் து.ராமமூர்த்தியும் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றவர்கள். இருவரும் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப்பின் கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்கள்.
இலக்கிய வாழ்க்கை
சரோஜா ராமமூர்த்தி இளமையில் “பாரதி” என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். சரோஜா ராமமூர்த்தியின் முதல் சிறுகதை 1939இல் வெளியானது. இவரது முதல் நாவல் 'மனைவி' அக்டோபர், 1946-ல் கலைமகள் இதழில் தொடராக வெளியாகிப் பின் 1947-ல் நூலாக வெளியானது. இவரின் ‘பனித் துளி’ நாவல் இவரை எழுத்துலகில் பிரபலமாக்கியது. 600 சிறுகதைகள், எட்டு நாவல்கள், இரண்டு குறு நாவலகள் எழுதினார். 'முத்துச்சிப்பி’, 'இருளும் ஒளியும்' போன்றவை இவரது பிற நாவல்கள்.
சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணி சுடர், போன்ற இதழ்களில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதினார்.1943இல் சக்தி இதழில் ‘செளந்திரம்’ சிறுகதை வெளியானது. ’பிருந்தையின் அருள்’ சிறுகதை மங்கை இதழில் 1947-ல் வெளியானது. 'குடும்பக்காட்சி’, 'ஆகி வந்த படம்’, 'பிள்ளை வளர்ப்பு', 'பார்வதி’, 'யாருடைய சித்தம்’, 'ரங்கத்தின் ஆவி' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'நவராத்திரிப் பரிசு', 'குழலோசை முதலிய கதைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளன. 'அன்னை', 'மாளவிகா', 'இரு கதைகள்’, 'நெஞ்சு பொறுக்குதில்லையே' போன்றவை இவரது பிற படைப்புகள். 'கல்கி' இதழில் சிறுகதைகள் பல எழுதினார். 2023இல் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக சரோஜா ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ”சரோஜா திறக்கும் உலகம்” என்ற பெயரில் அம்பையை தொகுப்பாளராகக் கொண்டு வெளிவந்தது.
காஞ்சி பரமாச்சார்யரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சரோஜா ராமமூர்த்தி தன் இறுதிக் காலத்தில் ழுதாமலானார். முழுவதுமாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.
திரை வாழ்க்கை
எம்.ஜி.ஆர், பத்மினி நடித்த "விக்கிரமாதித்தன்" படத்தின் திரைக்கதையின் ஒரு பகுதியை இவர் எழுதினார்.
இலக்கிய இடம்
”நாடகத்தனமான திருப்பங்கள் இல்லாமல் உண்மைக்கு ஒத்ததாக எழுதுபவர்” என க.நா.சு மதிப்பிட்டார். “எழுதி, எழுதி மெருகேரிய கை” என கி.வா.ஜ பாராட்டினார். “ நீரோட்டம் போல் செல்கிற தமிழ்நடை” என மு.வ பாராட்டினார்.
சரோஜா ராமமூர்த்தி பற்றி அம்பை, "சரோஜா ராமமூர்த்தி முப்பதுகளின் இறுதி ஆண்டுகளில் எழுத ஆரம்பித்து எதிர்க் கேள்விகளை தைரியமாகக் கேட்டவர். தொடர்ந்து எழுதியவர்." என்கிறார்.
சரோஜா ராமமூர்த்தியின் கதைகள் இந்திய சுதந்திரப்போராட்ட கால மனநிலைகளை காட்டுபவை. மரபை அதன் விழுமியங்களை மீறாமல் சீர்திருத்தம் செய்யும் நோக்கம் கொண்டவை.சமூக விடுதலையையும், தனிமனிதனின் அகவிடுதலையையும் பற்றிய காந்திய பார்வையை முன்வைப்பவை. குடும்பம் எனும் நிறுவனத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், அதில் உழலும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் இவர்களின் மன உணர்வுகளை நுணுக்கமாக கவனித்து எழுதினார்.
மறைவு
சரோஜா ராமமூர்த்தி ஆகஸ்ட் 8, 1991-ல் தன் எழுபதாவது வயதில் காலமானார்.
நினைவுகள்
சரோஜா ராமமூர்த்தியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
நூல்கள்
நாவல்
- மனைவி
- முத்துச்சிப்பி
- பனித்துளி
- இருளும் ஒளியும்
- அவள் விழித்திருந்தாள்
- மலையில் ஒரு மாளிகை
சிறுகதைத் தொகுப்பு
- வெறும் கூடு
- குழலோசை முதலிய கதைகள்
- நவராத்திரிப் பரிசு
- சரோஜா திறக்கும் உலகம் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
இணைப்புகள்
- பனித்துளி சரோஜா ராமமூர்த்தி நாவல் இணையநூலகம்
- சரோஜா ராமமூர்த்தியின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் இணையநூலக இணைப்பு
- சரோஜா ராமமூர்த்தி சிறுகதைகள் இணையநூலகம்
- வாழ்க்கை என்பது, சரோஜா ராமமூர்த்தி கதை, ஒலி வடிவில்
- தெய்வ சங்கல்பம், சரோஜா ராமமூர்த்தி கதை, ஒலி வடிவில்
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- சரோஜா ராமமூர்த்தி கதை அவள்
- பசுபதி பக்கங்கள் சரோஜா ராமமூர்த்தி
- அம்பை The Face behind the Mask: Women in Tamil Literature
- சரோஜா ராமமூர்த்தி: குங்குமம் தோழி Web Exclusive
- சரோஜா திறக்கும் உலகம்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்: காலச்சுவடு பதிப்பகம்
✅Finalised Page