first review completed

சுப்பு ஆறுமுகம்: Difference between revisions

From Tamil Wiki
(Category:நாடகாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
Line 71: Line 71:
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:வில்லுப்பாட்டு கலைஞர்கள்]]
[[Category:வில்லுப்பாட்டு கலைஞர்கள்]]
[[Category:நாடகாசிரியர்கள்]]

Revision as of 20:15, 31 December 2022

சுப்பு ஆறுமுகம்
சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம் (ஜுன் 28, 1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர், கவிஞர், பாடகர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர். தேசபக்தி, புராணங்கள், விழிப்புணர்வு சார்ந்த வில்லிசைப்பாடல்களை பத்தாயிரம் மேடைகளுக்கு மேல் அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி, சத்திரபுதுக்குளத்தில் ஆ. சுப்பையாபிள்ளை, சுப்பம்மாள் இணையருக்கு ஜுன் 28, 1928-ல் கடைசி மகனாகப் பிறந்தார். அப்பா சுப்பையாபிள்ளை இசைக்கலைஞர், ஆசுகவி, பொம்மை தொழில் செய்தவர். சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படித்தார். மதுரை தமிழ்ச்சங்கம்’ அமைப்பில் மூன்று ஆண்டுகள் தமிழ்மொழி படித்தார். இராம அய்யர், நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சுப்பு ஆறுமுத்தின் தமிழ் ஆசிரியர்கள். தந்தையிடமிருந்து இசை பயின்றார். பேலூர் மடம் ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தாஜி மகராஜ் சுப்பு ஆறுமுகத்திற்கு தீட்சை வழங்கினார்.

சுப்பு ஆறுமுகம் குடும்பத்தினருடன் (நன்றி குங்குமம்)

தனி வாழ்க்கை

சுப்பு ஆறுமுகத்தின் மனைவி மகாலட்சுமி. மகள்கள் சுப்புலட்சுமி, பாரதி, மகன் காந்தி. காந்தியும், பாரதியும் வில்லிசைக் கலைஞர்கள். பாரதியின் கணவன் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள்.

கலை வாழ்க்கை

சுப்பு ஆறுமுகம்

சுப்பையா பிள்ளை, நவநீத கிருஷ்ணன் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டை முறையாகப் பயின்றார். சுப்பு ஆறுமுகத்தை சென்னைக்கு அழைத்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் தனது வீட்டில் தங்க வைத்தார். கலைவாணர் கம்பெனியில் வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத வைத்தார். உடுமலை நாராயண கவியார், கே.பி.காமாட்சி ஆகியோருடன் இணைந்து எழுத்துப் பணியாற்றினார். காந்திமகான் கதையை, என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் சுப்பு ஆறுமுகத்தைக் கொண்டு எழுதச் சொல்லி பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார். 1960-ஆம் ஆண்டு இவரின் வில்லிசை நிகழ்ச்சி 'கருணைக்கடல் காஞ்சி காமாட்சி' என்ற தலைப்பில் அரங்கேறியது. காஞ்சிப் பெரியவர் நல்லாசியுடன் ஆலயங்களில், தமிழ்ச்சங்களில் வில்லுப்பாட்டு பாடினார். "காந்தி வந்தார்" என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். 1975 முதல் தூர்தர்ஷனில் வில்லிசை பாடினார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி அரங்கேற்றினார்.

வில்லுப்பாட்டு
சுப்பு ஆறுமுகம்

கலைவாணரின் மறைவிற்குப் பின்னர் சுப்பு ஆறுமுகம் நாடெங்கும் முதல் பணியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தினார். சுடலைமாடன், இசக்கியம்மன், முத்தாரம்மன் கோவில்களில் கொடையில் பாடினார். பாடல் முறைகள், பாடல் பிரதி உருவாக்கம், சமூக விழிப்புணர்வு சார்ந்த கருக்கள் கொண்ட பாடல் ஆகியவற்றில் புதுமை செய்து வில்லிசைக்கலையை நவீனப்படுத்தினார்.

ராமாயணம், மகாபாரதம், அரசியல்-சமூக பிரச்சனைகளையும் வில்லுப்பாட்டில் பாடினார். மெல்லிய பகடியுடன் கூடிய இசை இவருடைய வில்லிசைப்பாடல்களில் இருந்தது. திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத தமிழில் பாடினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த தியாகபிரம்மத்தின் 145-ஆவது ஆண்டு நிகழ்ச்சி முதல் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேர வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் நடத்தினார். ‘நாதத்தில் பேதமில்லை’ என்ற தலைப்பில் திருவையாறு மகோற்சவத்தில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும், வெளி நாடுகள் பலவற்றிலும் வில்லிசை நிகழ்ச்சிகள் செய்தார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேசபக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் ஒலிநாடாக்களாகவும், குறுந்தகடுகளாகவும் வெளிவந்தன.

சுப்பு ஆறுமுகம், எம்.எஸ்.வி

திரை வாழ்க்கை

கலைவாணரின் பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதினார். இவர் எழுதிய மனிதனைக்காணோம்' என்ற நாவலின் மூலக்கதையை வைத்து ’சின்னஞ்சிறு உலகம்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக்கினார். திரைப்படங்களில் பாடல்கள் பாடினார். உத்தமவில்லன் படத்தில் அறிமுகப்பாடல் சுப்பு ஆறுமுகம் குழு பாடியது.

இலக்கிய வாழ்க்கை

சுப்பு ஆறுமுகம் தன் பதினாறு வயதில் பாரதியார் மீது கொண்ட பற்று காரணமாக அவரின் கண்ணன் பாட்டு சாயலில் "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது 'பொன்னி' என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. வில்லுப்பாட்டை மையமாகக் கொண்டு பதினைந்து நூல்களை எழுதினார். 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்ற நாடகம் இவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிட்டது. மனிதர்கள் ஜாக்கிரதை நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்ற வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு இருந்தது. 85 வயதோடு, வில்லுப்பாட்டு மேடைக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, முழுவதுமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். தொடங்கினேன். ‘திருக்குறள் அனுபவ உரை’ என்ற நூலை எழுதினார். மூன்று நாவல்கள் எழுதினார்.

பதிப்பகம்

சுப்பு ஆறுமுகம் மகம் பதிப்பகத்தை ஆரம்பித்தார். ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற நூலையும், ‘வில்லிசையில் சமுதாயப் பாடல்கள்’ என்ற நூலையும் வெளியிட்டார்.

சுப்பு ஆறுமுகம் விருதுகள்

விருதுகள்

  • 1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருது
  • 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது
  • 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது
  • இந்து தமிழ் திசை நாளிதழின் ‘தமிழ் திரு விருது’
சுப்பு ஆறுமுகம் நினைவுகள் (நன்றி குங்குமம்)

மறைவு

சென்னை கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் தனது மகளுடன் வசித்து வந்த சுப்பு ஆறுமுகம் தனது 94-ஆவது வயதில் அக்டோபர் 10, 2022-ல் வயது முதிர்வு காரணமாக காலமானார். நெசப்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இவரைப்பற்றிய நூல்

  • மனைவி மகாலட்சுமி சுப்பு ஆறுமுகத்தின் வாழ்க்கையைப் பற்றி ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • வில்லிசை மகாபாரதம்
  • வில்லிசை இராமாயணம்
  • நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • நூலக வில்லிசை
  • தமிழ்த்தாய்
  • திருக்குறள் அனுபவ உரை
  • திருக்குறள் தாத்தா: அறிவுவளர் கதைகள்
  • வாழ்க நீ
  • அன்பு மோதிரம்
  • கோபுரச் செடி
  • மாணவர் திலகம்
  • காந்தியின் கவிதைகள்
நாவல்
  • மனிதனைக்காணோம்

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.