under review

சுதேச நாட்டியம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 24: Line 24:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்]]
[[Category:இதழ்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:04, 21 December 2025

சுதேசநாட்டியம்

சுதேசநாட்டியம் (1902-1944) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இலங்கைத் தமிழ் இதழ். இலங்கையின் தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று. இதை ஆசுகவி என பெயர்பெற்ற கல்லடி வேலுப்பிள்ளை நடத்தினார்.

வரலாறு

கல்லடி வேலுப்பிள்ளை தன் நாற்பதாவது வயதில் சென்னையில் வாங்கிய அச்சு இயந்திரத்தை தானே இயக்கி 1902-ல் சுதேச நாட்டியம் என்னும் இதழை தொடங்கினார். ஆங்கில இதழான Native Opinion இதழாசிரியரை அணுகினால் இதழ் தொடங்க உதவுவார் என சொன்னதன் பேரில் அவரை அணுகினார். அவருடைய ஏளனப்பேச்சால் கசப்படைந்தே இதழை தொடங்கினார். அச்சொல்லையே தமிழில் சுதேச நாட்டியம் என ஆக்கிக்கொண்டார். முதல் இதழில் '..எம்மோடு பரிகாச வாக்காய்ப் பேசியதை ஞாபகப் படுத்தவும், அவர் எம்மேற் கொண்ட தவறான எண்ணத்தை அவர்க்கெம் செய்கையால் காட்ட வேண்டு மென்றாஞ்சித்துமே "நேற்றிவ் ஒப் பீனியன்' என்னும் பெயரோடு அப்பொருட் பொதிந்த 'சுதேச நாட்டியம்' என்னும் பெயரையும் இப் பத்திரத்திற்குச் சூட்டலாயினேம்.' என்று குறிப்பிடுகிறார்

"நாமிப் பத்திரிகையை ஒருவரைத் தூஷிக்கும் நோக்கமாயல்ல, எமது நயத்துக்காயும், பிறர்க்கு விசேஷ சற்புத்திகளையும், பிறதேச வர்த்தமானங்களையும், அறிவிக்கும் நோக்கமாகவுமே தொடங்கினேம்'(சுதேச நாட்டியம் - 1902-ம் ஆண்டு) என்று இதழில் குறிப்பிடுகிறார்.

'சுதேச நாட்டியம்'பத்திரிகை 1932 வரை கல்லடி வேலுப்பிள்ளையாலும் பின்னர் அவருக்கு உதவியாக இருந்த சி. நல்லதம்பி என்பவராலும் நடத்தப்பட்டது. 1910-ம் ஆண்டில் இதழியல் செயல்பாடுகளுக்காகச் சிறை செல்ல நேர்ந்தது. அப்போது இதழை அவருடைய உதவியாளர் நல்லதம்பி நடத்தினார்.

சுதேசநாட்டியம் இதழ் விமர்சனம்

இலக்கிய இடம்

சுதேசநாட்டியம் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதை முதன்மையாக இலக்காகக் கொண்டிருந்தது. ஆங்கில ஆட்சியின் ஊழல்களை விமர்சித்தது. தமிழ்ச்சிற்றிலக்கியங்களை வெளியிட்டது. சைவர்களுக்கும் மற்றவர்களுக்குமான மதப்போரில் தூய சைவத்தின் குரலாக ஒலித்தது. கல்லடி வேலுப்பிள்ளை எழுதிய கண்டனக் கட்டுரைகளை வெளியிட்டது.

சுதேசநாட்டியம் இதழ் பற்றி "தமிழின் மாட்சிக்கும், தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்கும் களம் அமைத்துக் கொடுப்பதை கருப்பொருளாகக் கொண்டிருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளையும், சமயக் குறைபாடுகளையும், இலக்கியத் தாழ்வுகளையும் தயவுதாட்சணியமின்றி அம்பலப்படுத்தியது. போலிகளைப் புறந்தள்ளித் தூயவழியில் பத்திரிகை தர்மத்தை பேணிக்காத்த பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு." என 'ஈழத்துத் தமிழ் அறிஞர்கள்" என்னும் நூலில் கவிஞர் த.துரைசிங்கம் பதிவு செய்துள்ளார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:01 IST