மு. வரதராசன்: Difference between revisions
Line 39: | Line 39: | ||
மு.வரதராசனின் இலக்கிய ரசனைக்குறிப்புகள் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்து பின்னர் நூல்வடிவம் பெற்றன. தமிழ் மரபிலக்கியங்கள் பாடநூல்களாக வெவ்வேறு கல்விநிலையங்களில் அமைந்திருந்த அக்காலகட்டத்தில் அவற்றை பொருள்கொள்ளவும் ரசிக்கவும் வழிகாட்டியாக அமைந்தன. | மு.வரதராசனின் இலக்கிய ரசனைக்குறிப்புகள் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்து பின்னர் நூல்வடிவம் பெற்றன. தமிழ் மரபிலக்கியங்கள் பாடநூல்களாக வெவ்வேறு கல்விநிலையங்களில் அமைந்திருந்த அக்காலகட்டத்தில் அவற்றை பொருள்கொள்ளவும் ரசிக்கவும் வழிகாட்டியாக அமைந்தன. | ||
====== தமிழ் இலக்கிய வரலாறு ====== | |||
மு.வரதராசன் சாகித்ய அக்காதமிக்காக எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு இந்திய இலக்கியச் சூழலுக்கு தமிழிலக்கிய வரலாற்றை எடுத்துரைத்த குறிப்பிடத்தக்க நூல் ( பார்க்க [[தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன்]]) | |||
====== திருக்குறள் உரை ====== | ====== திருக்குறள் உரை ====== | ||
மு.வரதராசனின் நூல்களில் மிகப்பெரிய அளவில் விற்பனையானதும், தொடர்ந்து விற்பனையாவதும் திருக்குறளுக்கு அவர் எழுதிய எளிய உரை. சுருக்கமான, எளிமையான தமிழ் உரைநடையில் திருக்குறளுக்கு அவர் உரைவிளக்கம் அளித்திருந்தார். | மு.வரதராசனின் நூல்களில் மிகப்பெரிய அளவில் விற்பனையானதும், தொடர்ந்து விற்பனையாவதும் திருக்குறளுக்கு அவர் எழுதிய எளிய உரை. சுருக்கமான, எளிமையான தமிழ் உரைநடையில் திருக்குறளுக்கு அவர் உரைவிளக்கம் அளித்திருந்தார். |
Revision as of 20:46, 3 June 2022
மு.வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) (மு.வ./மு.வரதராசனார்) தமிழ் எழுத்தாளர், பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர், கல்வியாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குறள் உரை மு.வரதராசன் எழுதியது. கல்வியாளராக தன் மாணவர்களிடம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியவராகத் திகழ்ந்தார்.
பிறப்பு, கல்வி
மு.வரதராசன் வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை அருகே வேலம் என்னும் ஊரின் நிலக்கிழார்களில் ஒருவரான முனுசாமி முதலியாருக்கும் கண்ணு அம்மாளுக்கும் ஏப்ரல் 25, 1912-ல் பிறந்தார். மு.வரதராசன் அவர்களின் தந்தை ஊர் மணியக்காரராகவும் இருந்தார்.திருப்பதிக்கு வேண்டுக்கொண்டு பிறந்தமையால் மு.வரதராசனுக்கு பாட்டி நரசம்மா இட்ட பெயர் திருவேங்கடம். பெற்றோர் இட்ட பெயர் வரதராசன்.
மு.வரதராசன் இளமையில் வேலம் திண்ணைப்பள்ளியிலும் வாலாஜாப்பேட்டை ஆரம்பப்பள்ளியிலும் பயின்றார். பள்ளியிறுதித்தேர்வில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தார். மாணவராக இருக்கையில் திருவேங்கடத்து ஐயர் என்னும் ஆசிரியர் மு.வரதராசனின் அணுக்கமான வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.
மு.வரதராசன் பள்ளியிறுதி முடித்தபின் தாலுகா அலுவலகத்திலும் பின் வருவாய்த்துறையிலும் பணியாற்றினார். அப்போது ஆஸ்த்மா நோயினால் அவதிப்பட்டமையால் முறையாக பணியாற்ற முடியவில்லை. அவருடைய தமிழாசிரியர் முருகைய முதலியார் அவருக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் கற்பித்து மேலே படிக்க வழிகாட்டினார்.முருகையா முதலியாரின் சைவசித்தாந்த வகுப்புகளும் உள்ளூர் கோயிலில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் மு.வரதராசனை சைவப்பற்றுடையவராக ஆக்கின.
மு.வரதராசனுக்கு வருவாய்துறையில் அப்காரியாக பதவி உயர்வு கிடைத்தபோதிலும் இளைப்பு நோயால் பணியாற்ற முடியாமல் வேலையை விட்டு வேலம் ஊரில் இருந்தபோது தமிழாசிரியர் (வித்வான்) தேர்வுக்கான பாடங்களைக் கற்றார். தமிழும் ஆங்கிலமும் தானாகவே பயின்று தேர்ந்தார்.மு.வரதராசன் 1953-ல் வித்வான் தேர்வில் தமிழக அளவில் முதன்மையிடம் பெற்று திருப்பனந்தாள் ஆதீனம் அளித்துவந்த ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். 1939-ல் இலக்கியம் இளங்கலை ( பிஓஎல்) தேர்வில் வென்றார்.
மு.வரதராசன் பச்சையப்பன் கல்லூரியில் 1944-ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இலக்கியம் முதுகலை (எம். ஓ.எல்) பட்டம் பெற்றார். 1948-ல் சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். இது சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் என்று சொல்லப்படுகிறது. மு.வரதராசன் அவர்களுக்கு அமெரிக்க வூஸ்டர் கல்லூரி டி.லிட் பட்டத்தை இவருக்கு 1977-ல் வழங்கியது. (Vooster College Of America)
தனிவாழ்க்கை
மு.வரதராசன் 1935-ல் தன் மாமன் மகள் ராதாவை மணந்துகொண்டார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய மகன்கள். மூவருமே மருத்துவர்கள்.
மு.வரதராசன் 1934-ல் டாக்டர் ஹ்யூம் எழுதிய ‘அனைத்து நோய்க்கும் அடிப்படை’ (The Oneness of all diseases - Dr Hume) என்னும் நூலை படித்து அதை தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து தன் இளைப்பு நோயை தீர்த்துக்கொண்டார். வாழ்நாள் முழுக்கவே உடல்நலத்தைப் பேணி நோயின்றி வாழ்ந்தார். இறுதிவரை இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்த மு.வரதராசன் தன் 1974-ல் தன் அறுபத்து இரண்டாம் வயதில் இதயநோய்க்கு ஆளானார். இறுதிவரை அதற்கு மருத்துவம் செய்துகொள்ளவில்லை. இறுதியாக அவரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுசென்றாலும் சிகிச்சை பயனளிக்கவில்லை.
கல்விப்பணி
திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய முருகையா முதலியார் ஓய்வுபெற்றபோது மு. வரதராசனார் அங்கே அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1939-ல் பிஓஎல் பட்டம் பெற்றதும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழாசிரியராக பதவியேற்றார். 1961 ஜூன் வரை மு.வரதராசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளராகவும்,1945-ல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். ரா.பி. சேதுப்பிள்ளை அழைப்பை ஏற்று மு.வரதராசன் சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தலைவராக ஆனார். 1971 வரை சென்னை பல்கலைக்கழகப் பணியிலிருந்தார்.
1971 பிப்ரவரியில் மு.வரதராசன் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்றார். மதுரைப் பல்கலைக்கழகம் பல்கலை கழக நிதிநல்கை குழு (UGC) அங்கீகாரம் பெற முயன்று வெற்றிபெற்றார். மதுரைப் பல்கலையில் அஞ்சல்வழி கல்வி முறையை அறிமுகம் செய்தார்.மு.வரதராசன் பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகநிறுவனம், தமிழ் ஆட்சிமொழிக்குழு உள்ளிட்ட பல அமைப்புகளில் பொறுப்பேற்று பணிபுரிந்தார்.
அரசியல்
இளமையில் தன் ஆசிரியர் முருகையா முதலியாரின் செல்வாக்கால் மு.வரதராசன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். கதராடையை மட்டுமே அணியும் வழக்கம் கொண்டிருந்தார். தன் திருமணத்தின்போதும் கதராடைகளையே அணிந்தார். மு.வரதராசனாரின் அரசியல் ஆசிரியர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார். திரு.வி.கவிடமிருந்து சைவப்பற்று, தமிழார்வம் ஆகியவற்றுக்கு இணையாகவே அரசியல் சமநிலை ஒன்றையும் கற்றுக்கொண்டார். ஆகவே காந்தியப் பற்றுடன் இறுதிவரை திகழ்ந்தாலும் திராவிட இயக்க அரசியல் தலைவர்கள் அனைவருடனும் அணுக்கமான தொடர்புடன் இருந்தார்.
மதம்
மு.வரதராசன் சைவக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் மரபான சைவ வழிபாட்டுமுறைகளில் நம்பிக்கை அற்றவர். ”உருவ வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை, நான் கோயிலுக்கும் அவ்வளவாகப் போவது கிடையாது, ஆனால் சில உருவங்களில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. புத்தர் உருவம், நடராஜர் உருவம், தட்சிணா மூர்த்தி உருவம் இவற்றில் தனி ஈடுபாடு உண்டு. எப்போதாவது கோயிலுக்குப் போனால், போகும்போது தட்சிணாமூர்த்தி உருவத்தைப் பார்த்தால் சில நிமிஷம் கண்மூடி ஏதாவது ஒரு நல்ல பாட்டை மனத்துக்குள் நினைத்துப் பார்ப்பேன். இதுதான் என் வழிபாடு. பூ இட்டு வழிபடுவது எல்லாம் என் மனைவிதான்' என்று தன் மதநம்பிக்கையை பற்றி அவர் கூறியதாக பேராசிரியர் இரா.மோகன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் பதிவுசெய்கிறார்.
மு.வரதராசன் கடவுள் மறுப்புக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த காலம் உண்டு என்றும், சுவாமி ராமதீர்த்தரின் நூல்களால் ஆன்மிக நம்பிக்கை கொண்டவராக ஆனார் என்றும் டாக்டர் விஸ்வநாதன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் பதிவுசெய்கிறார். “இராம தீர்த்தரைத் தம் வழிகாட்டியாகக் கொண்ட மு.வ அவருடைய கருத்துக்களைத் தம வாழவிலும் கடைப்பிடித்து வாழ்ந்தார் என்று கூறுவது மிகை ஆகாது. மு. வ. வும் ஏகானம வாதி, சமயக் குறியீடுகள், சடங்குகள் இவைகளில நமபிக்கை அற்றவர்.இக்கருத்துக்களை அவர் எழுதிய பல நாவல்களிலும் கடடுரைகளிலும் காணலாம். அவர் இறுதியாக எழுதிய நூல் “நல்வாழ்வு (ஜுன் 1973) என்பதாகும். அதில கூறியுள்ள பல கருததுக்கள அவர் எழுத்தாக வெளிவந்திருந்த போதிலும் அவைகளில் முக்கியமானவைகளில் பல இராம தீர்த்தரின் தத்துவங்களின சாரமே ஆகும” என விஸ்வநாதன் கூறுகிறார்.
இசைப் பயிற்சி
மு.வரதராசன் பண்ணுடன் பாடல்களை பாடும் வழக்கம் கொண்டவர். ”சான்றோர்களின் அருட் பாடல்களை உளமுருகிப் பாடி மகிழும் இசை ஞானம் உடையவர்” என டாக்டர் விஸ்வநாதன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
மு.வரதராசன் இளமையில் ஆர்வம் கொண்டிருந்தது சிறார் இலக்கியத்தில். அவருடைய முதல் நூல் குழந்ததைப் பாடல்கள் 1939-ல் வெளியிடபட்டது. பின்னர். வி.ச.காண்டேகரின் செல்வாக்கால் கதைகளையும் நாவல்களையும் எழுதத் தொடங்கினார்.திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடமிருந்து தனித்தமிழியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் நாவல்களை தனித்தமிழில் எழுதினார். மு.வரதராசனின் நாவல்கள் முன்னரே திட்டமிட்ட கட்டமைப்பு கொண்டவை. பெரும்பாலும் உரையாடல்கள் வழியாக ஆசிரியரின் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கம் கொண்டவை.நிகழ்வுகள் யதார்த்த, அன்றாடத்தன்மை கொண்டவை. ஆனால் கதைசொல்லும் நடையும், கதைமாந்தர் பேச்சும் தூய தமிழ்நடையில் அமைந்திருந்தமையால் அவற்றுக்கு யதார்த்தத் தன்மை உருவாகவில்லை
தன் நாவல்கள் வழியாக மு.வரதராசன் தன் பண்பாட்டு, அற, ஒழுக்க விளக்கங்களை முன்வைத்தார். அவை சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறைகொண்ட ஒரு நல்லாசிரியருடைய பார்வைகள். மரபின் எல்லைகளுக்குள் நின்று புதுமையை வரவேற்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக,கரித்துண்டு என்னும் நாவலில் ‘கற்பு என்பது ஒருவனுடன் வாழும்போது அவனுக்கு உண்மையாக வாழ்வது மட்டும்தான்’ என்று வலியுறுத்துகிறார். மு.வரதராசனின் கள்ளோ காவியமோ, கரித்துண்டு, கயமை, அல்லி, பாவை, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு போன்ற நாவல்கள் எழுபதுகளில் புகழ்பெற்றிருந்தன.மு. வரதராசன், தான் எழுதிய நூல்கள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.
மு.வரதராசனின் இலக்கிய ரசனைக்குறிப்புகள் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்து பின்னர் நூல்வடிவம் பெற்றன. தமிழ் மரபிலக்கியங்கள் பாடநூல்களாக வெவ்வேறு கல்விநிலையங்களில் அமைந்திருந்த அக்காலகட்டத்தில் அவற்றை பொருள்கொள்ளவும் ரசிக்கவும் வழிகாட்டியாக அமைந்தன.
தமிழ் இலக்கிய வரலாறு
மு.வரதராசன் சாகித்ய அக்காதமிக்காக எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு இந்திய இலக்கியச் சூழலுக்கு தமிழிலக்கிய வரலாற்றை எடுத்துரைத்த குறிப்பிடத்தக்க நூல் ( பார்க்க தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன்)
திருக்குறள் உரை
மு.வரதராசனின் நூல்களில் மிகப்பெரிய அளவில் விற்பனையானதும், தொடர்ந்து விற்பனையாவதும் திருக்குறளுக்கு அவர் எழுதிய எளிய உரை. சுருக்கமான, எளிமையான தமிழ் உரைநடையில் திருக்குறளுக்கு அவர் உரைவிளக்கம் அளித்திருந்தார்.
திரைப்படம்
மு.வரதராசனின் பெற்றமனம் நாவல் 1960 ல் திரைப்படமாக வெளிவந்தது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், புஷ்பவல்லி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
விருதுகள்
- சாகித்ய அகாதெமி விருது - அகல் விளக்கு நாவல் (1961)
- தமிழக அரசின் விருது - கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள்
- தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் - திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி.
மறைவு
- மு.வரதராசன் அக்டோபர் 10, 1974-ல் சென்னையில் இதயநோயால் மறைந்தார்
நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்
- மு.வ. பொன் சௌரிராசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
- மு.வ. ஆய்வடங்கல் சு.வேங்கடராமன்
- வணக்கத்திற்குரிய வரதராசனார், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- பேராசான் மு.வ., முனைவர் மறைமலை இலக்குவனார்
- மூவா நினைவுகள், ம. ரா. போ. குருசாமி
- மு.வ. முப்பால், ம. ரா. போ. குருசாமி
- பெருந்தகை மு.வ., முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
- மு.வ.வின் நாவல்கள், முனைவர் இரா.மோகன்
- மு.வ வாசகம்- முனைவர் இரா மோகன்
- மு.வ. களஞ்சியம், முனைவர் இரா. மோகன்
இலக்கிய இடம்
மு.வரதராசனார் ஒரு தமிழாசிரிய மரபை உருவாக்கியவர். ”1975 வாக்கில் தமிழ்நாட்டிலே இரண்டு முக்கிய மாணவர் பரம்பரைகள் இருந்தன. ஒன்று தெ. பொ. மீ. பரம்பரை, மற்றது மு. வ. பரம்பரை. தம் புலமைச் சிறப்பால், அறிவாற்றலால், மொழியியல் அறிவினால் தமக்கென ஒரு மாணவர் பரம்பரையை தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் உண்டாக்கினார் என்றால் மாணவர்களை நடத்தும் முறை வாயிலாக, அற நோக்கின் வாயிலாக, பண்பட்ட வாழ்க்கையின் வாயிலாக, எளிய நடை வாயிலாகத் தமக்கென ஒரு மாணவர் பரம்பரையை உண்டாக்கியவர் மு. வரதராசனார்” (க.பூரணசந்திரன்[1]).
மு. வரதராசன் அவரது காலகட்டத்தில் காந்திய இயக்கம் முன்வைத்த மரபார்ந்த அறத்தையும் ஒழுக்கவியலையும், திராவிட இயக்கம் முன்வைத்த மரபுப்பெருமிதத்தையும் அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றவர். அவருடைய நாவல்கள் அறவிவாதங்கள். அவை மரபான பார்வையில் இருந்து சற்றே மேலெழும்படி அறிவுறுத்துபவை. ஆனால் முன்னரே திட்டமிட்ட கதைக்கட்டமைப்பும், ஆசிரியரே பேசுவதுபோல் தோன்றும் உரையாடல்களும் அவர் நாவல்களை பாடநூல்தன்மை கொண்டவையாக ஆக்கின. நவீன இலக்கியத்திற்குரிய கதைமாந்தரின் உளஆழத்துக்குச் செல்லும் பயணமோ, மானுட உறவுகளின் அரிய நுண்தருணங்களை தொட்டுணரும் தன்மையோ, ஒட்டுமொத்தப் பார்வையின் விரிவோ மு.வரதராசன் எழுதிய நாவல்களில் இருக்கவில்லை. அவை பாடநூல்களாகவே பரவின, பாடநூல்களாகவே எஞ்சின. ஆனால் பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்த அவருடைய நாவல்கள் ஒருகாலகட்டத்தின் இலட்சியங்களை கல்விச்சூழலுக்கு எடுத்துச் சென்ற அளவில் தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றவை.
மு.வரதராசனின் மரபிலக்கிய ஆய்வுகள் விரிவான வரலாற்றாய்வுத் தன்மை கொண்டவை அல்ல. இலக்கிய ஆய்வுகளென்னும் தளத்திலும் அவை பிற ஆய்வாளர்களால் பெரிதாக கருதப்படுவதில்லை. அவை இலக்கிய ரசனைக்குறிப்புகள் மட்டுமே. பொதுவாசகர்கள் மரபிலக்கியங்களை அணுகுவதற்குரிய பொதுவான, எளிமையான வழியை முன்வைப்பவை. மரபிலக்கிய தளத்தில் மு. வரதராசனின் முக்கியமான சாதனை என்று சொல்லப்பட வேண்டியது அவரது நூலான திருக்குறள் தெளிவுரை.
நூல்கள்
சிறுவர்நூல்கள்
- குழந்தைப் பாடல்கள்
- இளைஞருக்கான இரு சிறுகதைகள்
- படியாதவர் படும்பாடு
- கண்ணுடைய வாழ்வு
தழுவல் மொழிபெயர்ப்புகள்
- கழகச் சிறுகதைகள் - 1
- கழகச் சிறுகதைகள் - 2
- கழகச் சிறுகதைகள் - 3
மொழிபெயர்ப்புகள்
- சிறுவர்க்கான ஷேஸ்பியர் கதைகள் - 1
- சிறுவர்க்கான ஷேஸ்பியர் கதைகள் - 2
இலக்கணம்
- கழகத் தமிழ் இலக்கணம் - 1
- கழகத் தமிழ் இலக்கணம் - 2
- கழகத் தமிழ் இலக்கணம் - 3
நாவல்கள்
- செந்தாமரை
- கள்ளோ காவியமோ
- கி.பி. 2000
- பாவை
- அந்த நாள்
- மலர்விழி
- பெற்ற மனம்
- அல்லி
- கரித்துண்டு
- கயமை
- நெஞ்சில் ஒரு முள்
- அகல்விளக்கு
- மண்குடிசை
- வாடா மலர்
சிறுகதை
- விடுதலையா?
- குறட்டை ஒலி
- பழியும் பாவமும்
நாடகம்
- பச்சையப்பர்
- மூன்று நாடகங்கள்
- காதல் எங்கே?
- மனச்சான்று
கடித இலக்கியம்
- அன்னைக்கு
- தம்பிக்கு
- தங்கைக்கு
- நண்பர்க்கு
- டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்
பயண இலக்கியம்
- யான் கண்ட இலங்கை
வாழ்க்கை வரலாறு
- அறிஞர் பெர்னாட்ஷா
- காந்தியண்ணல்
- கவிஞர் தாகூர்
- திரு.வி.க
திறனாய்வு
- இலக்கிய ஆராய்ச்சி
- இலக்கியத் திறன்
- இலக்கிய மரபு
- இலக்கியக் காட்சிகள்
இலக்கிய ஆய்வு
- ஓவச் செய்தி
- தமிழ் நெஞ்சம்
- மணல்வீடு
- திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
- கண்ணகி
- மாதவி
- முல்லைத்திணை
- நற்றிணைவிருந்து
- நற்றிணைச் செல்வம்
- குறுந்தொகை விருந்து
- குறுந்தொகைச் செல்வம்
- நெடுந்தொகை விருந்து
- நெடுந்தொகைச் செல்வம்
- நடைவண்டி
- கொங்குதேர் வாழ்க்கை
- புலவர் கண்ணீர்
- இளங்கோ அடிகள்
- குறள் காட்டும் காதலர்
- தாயுமானவர்
- மு.வ.வின் கட்டுரைகள் பகுதி - 1
- மு.வ.வின் கட்டுரைகள் பகுதி - 2
உரை
- திருக்குறள் தெளிவுரை
இலக்கிய வரலாறு
- தமிழ் இலக்கிய வரலாறு (இணையநூலகம்)
சிந்தனைக் கட்டுரைகள்
- அறமும் அரசியலும்
- அரசியல் அலைகள்
- குழந்தை
- கல்வி
- மொழிப்பற்று
- நாட்டுப்பற்று
- குருவிப்போர்
- பெண்மை வாழ்க
- உலகப்பேரேடு
- மண்ணின் மதிப்பு
- நல்வாழ்வு
மொழியியல்
- மொழிநூல்
- மொழியின் கதை
- எழுத்தின் கதை
- சொல்லின் கதை
- மொழி வரலாறு
- மொழியியற் கட்டுரைகள்
முன்னுரைகள்
- மு.வ.வின் முன்னுரைகள்
மேற்கோள்கள்
- டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்
ஆங்கில நூல்கள்
- The Treatment of Nature in Sangam Literature
- Ilango Adigal
உசாத்துணை
- எழுத்தாளர் - டாக்டர் மு. வரதராசன் | Tamilonline - Thendral Tamil Magazine
- மு.வ - ஒரு மதிப்பீடு | எழுத்தாளர் ஜெயமோகன்
- டாக்டர் மு.வரதராசனார் (1912 – 1974) – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள், ஆர்.வி, கூட்டாஞ்சோறு இணையதளம்
- மு.வரதராசன் 10 | மு.வரதராசன் 10 - hindutamil.in
- கதையாசிரியர் தொகுப்பு: மு.வரதராசனார், சிறுகதைகள்.காம், 2012
- அறவோர் மு.வ- இணையநூலகம்
- மு.வ.ஆய்வடங்கல் இணைய நூலகம்
- மு.வ நினைவுமலர். இணையநூலகம்
- க.பூரணசந்திரன் மு.வரதராசன்
- மு.வ நினைவுதினக் கட்டுரை
- தமிழ் வளர்த்தே பேராசிரியர் மு.வரதராசனார், இணுவையூர் ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், அக்டோபர் 2011
- தமிழ் எழுச்சியின் அடையாளம் – டாக்டர்.மு.வ – Aram Online
- மு.வ எனும் இரண்டு எழுத்து இனியவர், இரா.இரவி, தமிழ் ஆதர்ஸ்.காம்
- அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார் – வல்லமை
- நிறைகுடம் போன்ற தமிழ்ப் பெட்டகம் டாக்டர் மு.வ. | Selliyal - செல்லியல்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா, திண்ணை.காம், பிப்ரவரி 2012
- பெருந்தகை மு.வ.வின் இலக்கிய வளத்திற்கு ஒரு சான்று (A Testament to the Literary Richness of Dr. Mu. Varatarācaṉār) Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்)
- மலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்! | முனைவர் மு.இளங்கோவன்
- மு.வ. கரித்துண்டு நாவலில் சமூகச் சிந்தனைகள், முனைவர் கோ.ரவிச்சந்திரன், முத்துக்கமலம்.காம்
- தங்கைக்கு - மு.வ.வரதராசன் இணையநூலகம்
- தம்பிக்கு- மு. வரதராசன் இணையநூலகம்
- மு.வ.வின் உரைநடைத்திறன் தமிழ்வு
- தமிழ் இலக்கிய வரலாறு மு.வரதராசன் இணையநூலகம்
இணைப்புகள்
✅Finalised Page