under review

திருநாதர் குன்று: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 31: Line 31:


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:12, 17 April 2022

திருநாதர் குன்று

திருநாதர் குன்று (சிறுகடம்பூர்மலை) (பொ.யு. 4-5-ஆம் நூற்றாண்டு) விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ள சமணர் குன்று. திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன. இருபத்தி நான்கு சமண தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்து மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டும் இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது

இடம்

திருநாதர் குன்று செல்லும் வழி

திருநாதர் குன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இம்மலை சிறுகடம்பூர் மலை என்றும், இப்பகுதி சிம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. சாலை ஓரமாகச் செல்லும் ஒரு சிறிய மண்பாதை வழியே அக்குன்றின் அடிவாரம் சென்றதும், குன்றின்மீது செல்லப் படிகள் காணப்படுகின்றன. அதன் வழியாக மேலே சென்றால், தொக்கி நிற்பதைப் போலக் காணப்படும் பெரிய அளவிலான பாறைகள் உள்ளது. அதையும் கடந்து மேலே சென்றால் பரந்துவிரிந்த விளைநிலங்களும் சமவெளிகளும் காணப்படுகின்றன.

அமைப்பு

நின்ற நிலை தீர்த்தங்கரர் சிற்பம்

மலையின் உச்சியில் உள்ள சமதளத்தில் கருங்கல் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று புறமும் பாறைகள் சூழ்ந்துள்ள இப்பகுதியில் திறந்தவெளிப் பாறைச் சிற்பங்கள் உள்ளன. மிகப்பெரிய பாறையும் அதில் 24 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள், இரண்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரெண்டு வீதம் செதுக்கப்பட்டுள்ளன. சமண மரபில் இந்தச் சிற்ப அமைப்பு சதுர்விம்சதி எனப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்து காணப்படுகின்றனர். தீர்த்தங்கரர்களுக்கு மேலே திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடை காட்டப்பட்டுள்ளது. சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் முக்குடைகளின் கீழே தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கின்றனர். இந்தப் புடைப்புச் சிற்பங்கள் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சமண வழிபாட்டுத்தலமாகத் திகழ்ந்துள்ளது. ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இடையில் ஒன்றின் குறுக்காக ஒன்றாக, இரண்டு சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்தப் புடைப்புச் சிற்பங்கள் ஒரே அளவில் காணப்படுகின்றன. இந்தப் பாறையின் இடது புறம் மேலே பார்சுவநாதரின் சிறு புடைப்புச் சிற்பம் ஒன்று நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

வீழ்ந்து கிடக்கும் சிலை

வீழ்ந்து கிடக்கும் சிலை

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கிறது.

வழிபாடு

செஞ்சிப்பகுதியில் வாழும் சமணர்கள் சித்திரை மாதத்தில் ஒரு நாளில் இங்கு வந்து 24 தீர்த்தங்கரர்களின் சிற்பத் தொகுதிக்கு நீராட்டிப் பூசைகள் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விளக்கெரிப்பதற்காக ஆடுகள் தானம் அளித்த செய்தி கூறும் கல்வெட்டு

கல்வெட்டு

திருநாதர் குன்றில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டுகள், வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த இரண்டு சமணத் துறவிகளின் நிசீதிகைகளை (உயிர்துறந்த இடம்) சுட்டும் கல்வெட்டுகளாகும். மூன்றாவது கல்வெட்டு இங்கிருந்த கோவிலில் விளக்கெரிக்க நானூறு ஆடுகள் தானமளித்த செய்தியினைப் பதிவு செய்துள்ள கல்வெட்டாகும்.

‘ஐ’ எனும் தமிழ் எழுத்து

‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது என்பதால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் பெயர் பெற்றது. இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. இறுதியாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.