ஜோகன்னா மீட்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 61: | Line 61: | ||
* [https://missionsbox.org/missionary-bio/charles-mault-martha-south-india/ Charles & Martha Mault, MISSIONARY BIO'S, missionsbox.org] | * [https://missionsbox.org/missionary-bio/charles-mault-martha-south-india/ Charles & Martha Mault, MISSIONARY BIO'S, missionsbox.org] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 23:11, 14 April 2022
ஜோகன்னா செலஸ்டினா மீட் (Johanna Celestina Mead) ( 1803-1848 )நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநிலையங்களை உருவாக்குவதிலும் பெண்களுக்கு கைத்தொழில் பயிற்றுவிப்பதிலும் பெரும் பணி ஆற்றியவர்.
பிறப்பு
ஜோகன்னா தஞ்சாவூரில் 1803ல் கிறிஸ்தோபர் ஹென்ரிச் ஹோர்ஸ்ட் (Christoph Heinrich Horst) மரியா மக்தலேன ஹோர்ஸ் (Maria Magdalena Horst0 இணையருக்கு பிறந்தார்.
தனிவாழ்க்கை
ஜோகன்னா ஹோர்ஸ்ட் தஞ்சைக்கு வந்த சார்ல்ஸ் மீட் ஐ மணந்து ஜோகன்னா செலஸ்டினா மீட் ஆக ஆனார். அவருக்கு பத்து குழந்தைகள்
- தியோடர் மீட்
- ஜோசப் மீட்
- சோபியா ஸ்டெம்னெட்
- ஃப்ளோரென்ஸ் மீட்
- ரேச்சல் மீட்
- ஆன் காம்ம்ரெர் மீட்
- கிறிஸ்தோபர் கார்னீலியஸ் மீட்
- நதானியேல் மீட்
- எயூஸ்பியுஸ் மீட்
- ஜேம்ஸ் மீட்
கல்விப்பணிகள்
சார்ல்ஸ் மீட் நாகர்கோயிலுக்கு மைலாடியில் இருந்து மிஷன் தலைமையகத்தை மாற்றி அங்கே சிறு கட்டிடங்களைக் கட்டினார். அவருடைய ஊழியர்களும் சில மைலாடி மக்களும் அங்கே வாழ்ந்தனர். 1819-ல் ஜோஹன்னாவை சார்ல்ஸ் மீட் மணந்தார். ஜோகன்னா நாகர்கோயிலுக்கு குடிவந்தார். அவருடன் தஞ்சாவூரில் இருந்து கிறிஸ்தவ கவிஞர் வேதநாயகம் சாஸ்திரியின் உறவினரான அருளாயியும் அவர் கணவர் அருளானந்தமும் வந்தனர். அருளானந்தம் ஆலயத்தில் ஊழியராக நியமிக்கப்பட்டார்.
ரெவெரெண்ட் மால்ட்டின் மனைவி திருமதி மார்த்தா மால்ட் (Martha Mault) நாகர்கோயிலுக்கு 1819-ல் வந்தார். அவருடன் இணைந்து பெண்களுக்கான கல்வியை முன்னெடுக்க ஜோகன்னா மீட் முடிவுசெய்தார். ஜோகன்னா மீட், மார்த்தா மால்ட், திருமதி மில்லர், திருமதி தாம்ப்ளன், திருமதி நாட்டன், திருமதி பெய்லி, திருமதி பேக்கர் ஆகியோர் உடன் இணைந்துகொண்டனர். 1891-ல் மீட் ஆங்கிலப் பள்ளியை நிறுவியபோது அருகிலேயே பெண்களுக்கான ஆங்கிலப்பள்ளியும் அவர்களால் நிறுவப்பட்டது.
தொடக்கத்தில் பெண்களை பள்ளிக்கு கொண்டுவருவதில் பெரும் கஷ்டம் இருந்தது. வீடுவீடாகச் சென்று சேர்த்து 18- பெண்களைச் சேர்த்து பள்ளியை தொடங்கினர். அங்கே படிக்க வரும் பெண்கள் வேலைசெய்து பொருளீட்ட முடியாது என்பதனால்தான் வர மறுக்கிறார்கள் என்பதைக் கண்ட ஜோகன்னா மீட் அவர்களுக்கு கைத்தொழில்கள் வழியாக வருமானம் வர ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு தையல் கலை கற்றுக்கொடுக்கப்பட்டது. திருமதி மால்ட் அவர்களுக்கு லேஸ் பின்ன கற்றுத்தந்தார். அவர்கள் வெண்பட்டு நூலில் பின்னிய லேஸ்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் அது மிக லாபம் வரும் தொழிலாக மாறியது. தலையணை உறைக்கும், ஜெபத்தின்போது முட்டாக்காகவும் பயன்படும் மெல்லிய லேஸ்களுக்கு லண்டனில் மிகவும் கிராக்கி உருவாகியது.
1828-ல் மீட் நெய்யூருக்கு மாற்றப்பட ஜோகன்னாவும் உடன் சென்றார். நெய்யூரில் அவர் கால்டன் பள்ளி (CALTON SCHOOL ) என்ற பெயரில் ஒரு பெண்கள் பள்ளியை தொடங்கினார். அது உண்டு உறைவிடப்பள்ளியாக இருந்தது. அப்பெண்கள் செய்யும் கைத்தொழில் வருமானத்தால் அவர்கள் தங்கி பயில்வதுடன் வீட்டுக்கும் பணம் அனுப்ப முடிந்தது. அந்தவகை பள்ளிகள் மக்களால் ஏற்கப்பட்டன. லெடிஷியா போனா- ஜூலியா நீல் நினைவுப்பள்ளிகள் (Letitia-Bona-Julia Knill Schools) என்ற பெயரில் அத்தகைய உண்டுறைவுப் பள்ளிகள் பெள்களுக்காக நெய்யூரைச் சுற்றி உருவாக்கப்பட்டன. அங்கே பயின்ற மாணவிகளே ஆசிரியைகளாக புதிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.கிராமங்களில் மாலைப்பள்ளிக்கூடங்கள் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டன. ஹாக்ஸ்டன் ஆதரவற்றோர் பள்ளி (Hoxton Orphan School ) நெய்யூரில் உருவாக்கப்பட்டது.
ஜோகன்னா மீட் முயற்சியால் தென்திருவிதாங்கூரில் பெண்கள் கல்வி மிக உயர்நிலையை அடைந்தது. 1837- ல் தென் திருவிதாங்கூரில் 15- பெண்பள்ளிக்கூடங்களில் 316- பெண்கள் படித்தனர். 1840-ல் நெய்யூர் நாகர்கோயில் என இரண்டு மிஷன் மாவட்டங்களில் 7540- குழந்தைகள் பள்ளிகளில் பயின்றனர். அவர்களில் 998- பேர் பெண்கள்.
உடைச்சீர்திருத்தங்கள்
ஜோகன்னா மீட் இரண்டு பங்களிப்புகளுக்காக நினைக்கப்படுகிறார்.
ஜாக்கெட்
அன்று பெண்கள் துணியை மார்பின்மேல் கட்டி மறைக்கும் கச்சு என்னும் உடையே புழக்கத்தில் இருந்தது. 1800- வரை திருவிதாங்கூரில் அரசியர் உட்பட எவருமே மார்புகளை மறைக்கவில்லை என்பதை ஓவியங்கள் காட்டுகின்றன. இஸ்லாமியப்பெண்கள் முழு உடலையும் மறைக்கும் போர்வைபோன்ற அங்கியை அணிந்திருந்தனர். உள்ளூர் சிரியன் கிறிஸ்தவர்கள் தொளதொளப்பாக இடைக்கும் கீழே வரும் குப்பாயம் என்னும் சட்டையை அணியத் தொடங்கினர். பின்னர் இஸ்லாமியரும் அதை அணிந்தனர். குப்பாயத்தின் மேல் வெள்ளியாலான அரைநாண் என்னும் ஆபரணத்தையும் கழுத்தில் மாலைகளையும் அணிந்துகொண்டனர். ஆனால் அது இஸ்லாமியர், சிரியன் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரிய உடையாகவே இருந்தது.
உயர்சாதியில் நம்பூதிரிப்பெண்கள் மேலாடை அணியவில்லை. அரசகுடும்பம் மேலாடை அணியத் தொடங்கியபோது நாயர் குடும்பங்களிலும் சில உயர்மட்டத்தினர் மட்டும் வெளியே செல்லும்போது மேலாடை அணிந்தனர். ஆனால் மார்பில் ஒரு துணியை கட்டி அதன்மேல் சால்வைபோல சேலையை அணிவதே வழக்கமாக இருந்தது. (படங்களில் ராணி கௌரி பார்வதி பாய் அந்த உடையையே அணிந்திருக்கிறார்) வெள்ளைக்காரப் பெண்கள் பாரம்பரியமான கவுன் அணிந்தனர்.
ஏழைப்பெண்களுக்கான ஒரு மேலாடையை ஜோகன்னா மீட் வடிவமைத்தார்.அது குறைவான துணியில் தைக்கப்பட்டது. அதை கையில்லாத ரவிக்கை எனலாம். மார்புக்கு நடுவே கீழே இரு நீண்ட முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக்கொள்ளும்படி அமைந்தது. எளிமையான சில தையல்களில் உருவாகிய அந்த ஆடை எல்லா அளவுகொண்டவர்களும் அணியத்தக்கது. வெள்ளையர்கள் கோட்டுக்குள் இறுக்கி அணியும் குட்டையான ஜாக்கெட் போலிருந்தமையால் அது ஜாக்கெட் எனப்பட்டது. அதன்பின் அதற்கு கை வைத்து தைக்கப்பட்டது. கழுத்து வட்டமாக வெட்டப்பட்டது. இன்றும் பெண்கள் சேலையுடன் அணியும் ஜாக்கெட் அல்லது ரவிக்கை அவ்வாறு உருவானது. திருவிதாங்கூரில் அதை ஜம்பர் என்றனர். வெள்ளையர் தோலால் ஆன இறுக்கமான உள்ளாடையை கவசம்போல் அணிந்தனர். அது ஜம்பர் எனப்பட்டது. அதைப்போல நாடாவால் கட்டப்படுவதனால் இப்பெயர் அமைந்தது
அடிப்பாவாடை
அkகாலப் பெண்கள் ஒரு குட்டையான தைக்கப்படாத ஆடையை இடுப்பில் இறுகச்சுற்றி அணித்து அதன்மேல் வேட்டியை சுற்றிக் கட்டிக்கொண்டனர். அது ஒந்நரையும் முண்டும் எனப்பட்டது. சேலை கட்டிக்கொள்பவர்களும் அடியில் அப்படி குட்டைத்துண்டையே அணிந்தனர். ஜோகன்னா பெண்கள் சேலையை இயல்பாக அணியும்பொருட்டு இன்றைய அடிப்பாவாடை என்னும் உடையை சுருக்குநாடாவுடன் வடிவமைத்தார்.
ஜோகன்னா வடிவமைத்த ஜாக்கெட் கிறிஸ்தவர்களிடையே பிரபலமடைந்தது. ஆலயங்களுக்கு மார்பை மறைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என மிஷன் ஆணையிட்டது. அது திருவிதாங்கூரில் உயர்சாதியினரிடையே சீற்றத்தை உருவாக்கவே தோள்சீலை கலகம் தொடங்கியது.
மறைவு
ஏறத்தாழ 30- ஆண்டுகள் நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்கள் கல்விக்காக பெரும்பணியாற்றிய ஜோகன்னா தன் 45- ஆவது வயதில் ஈரல்நோயால் பெப்ருவரி 6 1848- ல் மறைந்தார்.
ஜோகன்னாவின் சமாதி நெய்யூரில் உள்ளது. அதில் "Here are deposited the remains of Johanna Celestina wife of Revd.C. Mead and daughter of Revd.C.H.Horst . She departed to enter into the rest which remaineth for the people of God, on the 6th February 1848, after 29 years of missionary labour, aged 45 and 14 days" என்னும் வாசகம் உள்ளது
பங்களிப்பு
ஜோகன்னா மீட் நூறாண்டுகளுக்கு பிறகும் பெண்கல்விக்காகவும் பெண்களின் பொருளியல் விடுதலைக்காகவும் ஆற்றிய பெரும்பணிக்காக நினைக்கப்படுகிறார்.
உசாத்துணை
- Thus they abolished slavery in Travancore - Hamlet in Monsoon Blog of Ramachandran, June 2020
- Foreign Missions in Kerala, Binny VA
- London Missionary Society, A Register of Missionaries Deputations etc 1923, SOAS Library UK
- Rev Charles Mead, father of South Travancore mission
- Charles & Martha Mault, MISSIONARY BIO'S, missionsbox.org
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.