under review

பூண்டி பொன்னி நாதர் கோயில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added display-text to hyperlinks)
Line 30: Line 30:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991
* https://web.archive.org/web/20120923232614/http://www.tnarch.gov.in/cons/temple/temple12.htm
* [https://web.archive.org/web/20120923232614/http://www.tnarch.gov.in/cons/temple/temple12.htm MONUMENTS - TEMPLES -POONDI ARUGAR TEMPLE (JAIN) ]


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:34, 14 April 2022

பூண்டி பொன்னி நாதர் கோயில்

பூண்டி பொன்னி நாதர் கோயில் (பொ.யு. 13ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை (வட ஆற்காடு) மாவட்டத்தில் பூண்டியில் அமைந்த சமணக் கோயில். முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கெனக் கட்டப்பட்ட கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

இடம்

வடஆர்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அண்மையிலுள்ள பூண்டியில் பொன்னி நாதர் கோயில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி - ஆற்காடு நகரங்களுகிடையே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி எனும் கிராமத்தில் அமைந்த சமணக் கோயில்.

வரலாறு

இந்த கோயிலை வீரவீரன் என்ற பட்டப்பெயரைக்கொண்ட சம்புவராய சிற்றரசன் கட்டியமையால், இது வீரவீரஜினாலாயம் எனவும் அழைக்கப்பட்டது. பொன் எழில் நாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலை, பொ.யு. 13-ஆம் நூற்றாண்டில் சோழர் கட்டிடக் கலையில் கட்டப்பட்டு, சமணத் தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் வீர வீர ஜினாலயம் என அழைக்கப்பட்டது.

தல வரலாறு

பூண்டியிலுள்ள கோயிலைப் பற்றிய தலவரவரலாற்றுச் செய்தியொன்று மெக்கன்சி சுவடித் தொகுப்பில் உள்ளது. இரும்பன், பாண்டன் என்னும் வேடர்கள் வள்ளிக்கிழங்கு எடுப்பதற்காக எறும்புப் புற்றைத் தோண்டினர். அப்புற்றினுள் நெடுங்காலமாகத் தவம் செய்து வந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் சமணத்துறவியிடமும் அரசர் இராயனிடம் (சம்புவராயன்) செய்தியைக் கூறி இங்கு கோயில் உருவாவதற்கு காரணமாயினர். இந்த வேடர்களின் நினைவாக இரண்டு ஊர்களுக்கு பூண்டி எனவும், இரும்பேடு எனவும் பெயர்கள் சூட்டினார். சமய நாதமுனீஸ்வரர் என்னும் துறவியரைப் பற்றிய செய்திகள் தெரிய வரவில்லை.

கல்வெட்டுக்கள்

பொன்னி நாதர் கோயிலில் வீர வீரசம்புவராய சிற்றரசனது ஒரே ஒரு சாசனம் மட்டும் உள்ளது. இதில் சம்புவராயன் கோயிலுக்குத் தானமாக அளித்த நிலங்களின் விரிவான செய்தியும் இடம் பெற்றுள்ளது. சம்புவராயன் மாதவ முனிவரிடம் அவரின் தவநெறிக்குத்தாம் என்ன செய்ய வேண்டுமென வினவினார். ஜெயங் கொண்ட சோழ மண்டலத்தில் பல்குன்றக் கோட்டத்தில் மெய்யூர் நாட்டில் அருகனது அற நெறியை வளரச் செய்ய வேண்டுமெனக் கூறினார். மன்னன் வீரவீரஜினாலயம் என்ற ஆலயத்தை எழுப்பினான்.

இந்த சிற்றரசன் இக்கோயிலுக்கு மிகுதியான நிலங்களையும் தானமாக அளித்தான். இந்த நிலங்கள் கணியிலுப்பைக்கு மேற்காகவும், நெருநற்பாக்கத்திற்கு வடமேற்காகவும், பொரு நற்குன்றுப் புனலாற்றிற்கு வடக்கிலும், ஆதித்தமங்கலத்திற்கு தென்கிழக்காகவும், குண்டிகைக் துறைக்கு வடகிழக்காகவும், ஆதித்த மங்கலத்துக்கு கிழக்காகவும், மெய்யூரிலுள்ள பொய்கைக்குத் தெற்காகவும் மறையோர் ஆதைக்கு (நிலத்திற்கு?) தெற்கிலும், ஆதனூரிலுள்ள மடுவிற்கு தென்மேற்கிலும் ஆகிய எட்டு திசைகளில் உள்ள எல்லைகளுக்குட்பட்டதாக இருந்தது. இத்தகைய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அதில் குண்டிகைக் கற்களும் நடப்பட்டுள்ளன. இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்ட கிடைக்கப்பெறும் அந்தராயம், ஆயம் முதலிய வரிகளைக்கொண்டு கோயிலின் மாளிகை எடுக்கப்படுவதற்கு வழி செய்யப்பட்டது. இந்நிலங்களில் கமுகு, செந்நெல், கரும்பு ஆகியவை பயிர் செய்வதற்கும்; சம்பகம், சாதிப்பூ. செங்கழுநீர்ப்பூ வகைகளைத் தருகின்ற செடிகளை வளர்ப்பதற்கும் மன்னன் ஆவன செய்திருக்கிறான்.

அமைப்பு

பொன்னி நாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளை உடையது. இதன் அடிதளத்திலிருந்து கூரைவரை கருங்கல்லினாலும், அதற்கு மேலுள்ள விமான பகுதி செங்கல், சுதை ஆகியவற்றாலும் கட்டப்பட்டது. கோயிலின் அடித்தளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டரம், மேல்ப்பட்டிகை முதலிய உறுப்புகளைக் கொண்டது. வெளிப்புறச்சுவர்களில் சிறிய அளவிலான மாடங்களும், அரைத்தூண்களும் உள்ளன. இந்த அரைத்தூண்கள் சதுர வடிவத்துடன் மேற்பகுதியில் கும்பம், கலசம், பலகை, பூமுனைகளையுடைய போதிகை ஆகியவற்றைக் கொண்டது. மண்டபத்தினுள் நிறுவப்பட்டுள்ள தூண்களும் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டையக் கலைப்பாணியைக் கொண்டது.

ஒரு தளத்தினையுடைய விமானமும், இத்தளத்தில் கூடம், சாலை எனப்பெறும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும் அவற்றிற்கிடையில் தீர்த்தங்கரர், யக்ஷன், யக்ஷி ஆகியோரது சுதைவடிவங்களும் உள்ளன. தளத்தின் மேற் பகுதியில் கிரீவமும், உருண்டைவடிவ சிகரமும் உள்ளன. சிகரத்தின் கிரீவப்பகுதியில் தீர்த்தங்கரர் திருவுருவங்களைப் பெற்ற கோட்டங்களும் சிங்கமுக வளைவுகளும் இடம் பெற்றுள்ளன. கோயிலைச் சுற்றி திருச்சுற்றுமதிலும், கோபுரவாயிலும் உள்ளன. கோபுரத்தின் அடிப்பகுதி கருங்கல்லினாலும் தளங்கள் செங்கல்லினாலும் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு தளத்திலிலும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும், சுதை வடிவங்களும் படைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலாகக் கூண்டுவடிவசிகரம் உள்ளது.

சிற்பங்கள்

மூலவராகிய பொன்னி தருமதேவி, பார்சுவ நாதர் சிற்பங்கள் உள்ளன. கருவறையிலுள்ள மூலவர் திருவுருவம் மூன்று அடி உயரமுடைய பொ.யு. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புடைப்புச்சிற்பம். இரு மருங்கிலும் சாமரம் வீசுவோரது சிற்றுருவங்கள் உள்ளன. இவரது தலைக்கு மேல் முக்குடையும் மெல்லியதாக வடிக்கப்பட்டிருக்கிறது இதில் அலங்கார பிரபை வடிவம் தீட்டப்பெறவில்லை.

மண்டபத்தின் ஒருபுறத்தில் அழகிய தருமதேவிச் சிற்பம் நிறுவப்பெற்றுள்ளது. கரண்டமகுடம், குண்டலங்கள், அடுக்கடுக்கான கழுத்தணிகள் கேயூரங்கள், கைவளைகள், மேகலை ஆகியவை அணிந்துள்ளாள். வீற்றிருக்கும் பீடத்தில் இவளது இருமைந்தரும், பணிப்பெண்ணும் சிற்றுருவங்களாக வடிக்கப்பட்ட இச்சிலைகள் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது புடைப்புச் சிற்பமாக இன்றி தனிச்சிற்பமாக உள்ளது.

இக்கோயிலில் காணப்படும் பார்சுவநாதர் சிற்பம் மிகுந்த வேலைப் பாடுகளுடன் உள்ளது. பார்சுவதேவர் அணியாத அழகராய் அசைவற்ற தவக் கோலத்தில் உள்ளார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பும், சுற்றிலும் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும் பிரபை அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூ வேலைப் பாடுகளுடைய இந்த திருவாசியின் மேற்பகுதி பரந்து காணப்படுவதால், அழகிய தோரண வாயிலைப் போன்று விளங்குகிறது. இச்சிற்பம் பொ.யு. 16 ஆம் நூற்றாண்டைய கலைப்பாணியைக் கொண்டுள்ளது.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.