ஶ்ரீனிவாச மகி: Difference between revisions

From Tamil Wiki
Line 53: Line 53:
* பரமாத்மிகா-உபநிஷத்-பாஷ்யம்
* பரமாத்மிகா-உபநிஷத்-பாஷ்யம்
* தசா-விதா-ஹேது-நிரூபண
* தசா-விதா-ஹேது-நிரூபண
* தாத்பர்ய சிந்தாமணி


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://sreenivasaraos.com/tag/agama-tantra/ ஶ்ரீனிவாசராவ் இணையப்பக்கம்]
[https://sreenivasaraos.com/tag/agama-tantra/ ஶ்ரீனிவாசராவ் இணையப்பக்கம்]

Revision as of 21:36, 4 June 2024

ஶ்ரீனிவாச மகி (Sreenivasa-makhin) ஶ்ரீநிவாஸ மஹி, ஶ்ரீநிவாஸ மகின்: வைணவ ஆசிரியர். வைணவத்தின் வைகானஸ மரபின் முதன்மையான உரையாசிரியர்களில் ஒருவர். வைகானஸத்தை நிறுவும்பொருட்டு என்னும் நூலை இயற்றினார். ஶ்ரீனிவாச அத்வாரி, ஶ்ரீனிவாச தீட்சிதர் என்றும் அழைக்கப்படுகிறார்

காலம்

ஶ்ரீனிவாஸ மகி வைணவ மதத்தின் ஆகமம் ஆன வைகானஸ மரபின் முதன்மையான அறிஞர். ஶ்ரீனிவாச மகி பத்தாம்நூற்றாண்டைச் சேர்ந்த நிருசிம்ஹ வாஜபேயி, பட்ட பாஸ்கரர் என்னும் வைகானஸ ஆகமவல்லுநர்களுக்கு பின் வந்தவர். ஆகவே அவர் பொயு 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிறப்பு, கல்வி

வைகானசத்தின் வேதாந்த தேசிகர் என்று அழைக்கப்படும் ஶ்ரீனிவாஸ மகி கௌசிக கோத்திரத்தில் வைகானஸ பிராமண குடியில் கோவிந்தாச்சார்யா- ருக்மிணியம்மா ஆகியோரின் மகனாக தற்போதைய திருமலை திருப்பதியான வேங்கடாச்சலத்தில் (வரசகிரி)யில் பிறந்தார். பாரம்பரிய முறைப்படி வைகானஸ ஆகமங்களில் பயிற்சி பெற்றார்

தனிவாழ்க்கை

திருமலை- திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் பூசகராகப் பணியாற்றினார்.

மதப்பணி

ஶ்ரீனிவாஸ மகியின் காலகட்டத்தில் வைகானஸ மரபின் மீது பாஞ்சராத்ர மரபின் கடுமையான தாக்குதல் நடைபெற்றது. வைகானஸ அந்தணர்கள் பல்வேறு ஆலயங்களில் இருந்து அகற்றப்பட்டனர். வைகானஸம் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே அர்ச்சகராகத் திகழும் அதிகாரத்தை அளிக்கிறது. பாஞ்சராத்ரம் பஞ்சசம்ஸ்காரம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் அந்த அதிகாரத்தை அளிக்கிறது. ஆகவே எண்ணிக்கையாலும் வைகானஸத்தை பாஞ்சராத்ரம் அகற்றியது. அதை எதிர்த்து ஶ்ரீனிவாஸ மஹி விரிவாக எழுதினார்.

வைகானஸ ஆகம வல்லுநரான ஸ்ரீனிவாஸ மகி தனது புகழ்பெற்ற படைப்பான தச - வித - ஹேது-நிரூபணா என்னும் நூலில் வைகானஸம் பாஞ்சராத்ர ஆகமத்தை விட ஏன் மேலானது என்பதற்கு பத்து கோணங்களில் தர்க்கபூர்வமான காரணங்களை முன்வைத்தார். பாஞ்சராத்ர மரபை கடுமையாக கண்டித்தார்

பத்து தர்க்கங்கள்

வைகானஸம் ஏன் முதன்மையானது என்பதற்கு ஶ்ரீனிவாஸ மகி சொல்லும் பத்து காரணங்கள்

  • வைகானஸ-சூத்திரம் விஷ்ணுவின் அவதாரமான முனிவரால் உருவாக்கப்பட்டது
  • வைகானஸ சூத்திரம் அனைத்து சூத்திரங்களிலும் தொன்ன்மையானது;
  • வைகானஸம் சுருதிகளான வேதங்களின் கொள்கைகளை முழுமையாகவே பின்பற்றுகிறது
  • வைகானஸம் வேதச்சடங்குகளை முழுமையாக பின்பற்றுகிறது
  • வேதமந்திரங்களை நேரடியாக பயன்படுத்துகிறது
  • வைகானஸம் நிசேக என்னும் சடங்கின் வழியாக கருவிலேயே ஒருவனை வைணவனாக்குகிறது. முழு வாழ்க்கைக்கும் உரிய சடங்குகளைக் கொண்டுள்ளது,
  • வைகானஸம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் பதினெட்டு வகையான உடல் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளை (சமகாரங்கள்) பரிந்துரைக்கிறது;
  • வைகானஸம் வழிபாட்டுச் சடங்குகளை வாழ்க்கையின் எல்லா செயல்களுடனும் இணைக்கிறது.
  • வைகானஸம் மனு மற்றும் பிற ஸ்மிருதிகளாலும் சூத்திரங்களின் ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • வைகானஸம் முழு பிரபஞ்சத்திற்கும் ஒரே காரணமான நாராயணனின் முழுமையான மேலாதிக்கத்தை ஏற்கிறது
  • வைகானஸ சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள வைகானச தர்மத்தை பின்பற்றுபவர்கள் நாராயணனுக்கு உகந்தவர்கள்.
வழிபாட்டு வரையறை

ஸ்ரீனிவாஸ மகி தனது வாதங்களுக்கு ஆதரவாக, பல்வேறு க்ரிஹ்ய மற்றும் தர்ம சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், உபநிடதங்கள், புராணங்கள் ஆகிய பல்வேறு நூல்களின் பத்திகளை மேற்கோள் காட்டுகிறார். வீட்டில் செய்யப்படும் வழிபாடுகள் (கிருஹர-அர்ச்சா) ,முழுச் சமூகத்தின் நன்மைக்காக செய்யப்படும் ஆலயவழிபாடு (ஆலய-அர்ச்சா) ஆகியவற்றை தனியாக வகுத்துச் சொல்கிறார். ஆனால் உருவச்சிலைகளை ஆலயங்களில் மட்டுமே வழிபடவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்

வழிபாட்டு அதிகாரம்

ஶ்ரீனிவாச மகியின் தசா-விதா-ஹேது-நிரூபணம் நூலிந் மைய நோக்கம் வைகானச மரபில் பிறந்த அந்தணர்கள் மட்டுமே விஷ்ணு கோயில்களில் பூசை செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் என நிறுவுவதே. (முக்யாதிகாரிணம் வைகானாசனாம்) . ஓர் ஆலயத்திலுள்ள சிலைகளின் ஆற்றல் என்பது அதை நிறுவியவர்கள் மற்றும் வழிபடுபவர்களான பூசகர்களின் உள்ளக்குவிப்பாலும், நோன்பாலும் உருவாவதே என வாதிடுகிறார்.

ஒரு வைகானசர் விஷ்ணுகோயிலில் நிகழ்த்தும் வழிபாடு என்பது அவருக்காக அல்ல, அனைவருக்குமாகத்தான் (சர்வ ஜன க்ஷேம) தனிநபர் (ஆத்மன்), சமூகம் (லோகம்), அரசு(ராஷ்ட்ரா), ஆட்சியாளர் (ராஜன்) குடிமகன் (பிரஜா) ஆகியோரின் நலனுக்காக பூசைகள் செய்யப்படவேண்டும். இது உகந்த மழை பெய்யவும், வேளாண்மை செழிக்கவும், இருகால், நான்குகால் விலங்குகளின் நலனுக்காகவும் (த்வி பத, சதுஷ்பத) மற்றும் முழு இயற்கையின் நலனுக்காகவும் செய்யப்படும் வேண்டுதலாகும்.

கோவிலில் நிறுவப்பட்ட தெய்வத்தின் வழிபாடு அனைவருக்கும் நன்மை பயக்கும் தன்மை கொண்டது. (சௌம்யா). செழிப்பும் மங்கலமும் அளிக்கும் இயல்புகொண்டது (ஸ்ரீ காரா) இந்த வழிபாடு கிரியா-யோகமாகக் கருதப்படுகிறது.

வேள்வியின் வழியாக உருவமற்ற (அமூர்த்த அர்ச்சனை) வழிபாட்டை விரும்புவோருக்கும், விஷ்ணுவை அவரது வியூகவடிவங்களில் பக்தி செலுத்தி வழிபடுபவர்களுக்கும் (சமூர்த்த-பகவத்-யக்ஞம்) வைகானச பாரம்பரியம் இடமளிக்கிறது என்று ஸ்ரீனிவாசா-மகி விளக்குகிறார்.

ஶ்ரீனிவாஸ மகி இப்போதைய கலி யுகத்தில் ஆகம வழிபாடுதான் மிகவும் பொருத்தமானது, ஏனெனில் வேதமாகிய சுருதிகளின் அடிப்படையில் செய்யப்படும் வேள்விச்சடங்குகள் (ஸ்ரௌத) ஸ்மிருதிகளின் அடிப்படையில் செய்யப்படும் சடங்குகள் ( ஸ்மார்த்த) இரண்டும் சாமானியர்களின் திறனுக்கு அப்பாற்பட்டவை என்கிறார். ஆகம முறைப்படிக் கட்டப்பட்ட ஓர் ஆலயத்தில் வைகானஸ அதிகாரம் கொண்டவர்களால் ஆகம முறைப்படி பூசை நிகழ்ந்து, மற்றவர்கள் மனப்பூர்வமான பக்தியைச் செலுத்தினாலே போதுமானது என்று அறிவுறுத்துகிறார்.

இடம்

ஶ்ரீனிவாஸ மகி வைகானஸ ஆகம மரபை விளக்கியவர், அதை இறுக்கமான குலமரமாக நிலைநிறுத்தியவர் என் அறியப்படுகிறார்

நூல்கள்

  • லக்ஷ்மி-விசிஷ்டாத்வைத-பாஷ்யம
  • வைகானஸ–மஹிமா-மஞ்சரி
  • பரமாத்மிகா-உபநிஷத்-பாஷ்யம்
  • தசா-விதா-ஹேது-நிரூபண
  • தாத்பர்ய சிந்தாமணி

உசாத்துணை

ஶ்ரீனிவாசராவ் இணையப்பக்கம்