under review

பறையன் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 26: Line 26:
* [https://www.vikatan.com/literature/arts/132167-jv-library-book-review சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: விகடன் தளம்]  
* [https://www.vikatan.com/literature/arts/132167-jv-library-book-review சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: விகடன் தளம்]  
* [https://www.youtube.com/watch?v=OmzTT80_V64 சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: சமஸ்]  
* [https://www.youtube.com/watch?v=OmzTT80_V64 சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: சமஸ்]  
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:19, 27 August 2023

பறையன் இதழ் (படம் நன்றி: சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, தலித் இதழ்கள் -1869-1943, ஜெ. பாலசுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பக வெளியீடு)
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, தலித் இதழ்கள் (1869-1943)

பறையன் (1893-1900) ஒரு தமிழ் இதழ். இரட்டைமலை சீனிவாசன் இவ்விதழைத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் பிரச்சனைகளையும் பேசிய இவ்விதழ், 1900 வரை வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

பறையன் இதழை இரட்டைமலை சீனிவாசன் அக்டோபர் 7, 1893-ல் தொடங்கினார். ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவந்தது. மார்ச் 1894 முதல் வார இதழாக வெளியானது. 1896 முதல் சொந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியான இவ்விதழ், 1900 வரை வெளிவந்தது. இதழின் விலை, தனிப்பிரதி ஒன்றிற்கு ஒரு அணா. ஆறு மாத சந்தா - ஒரு ரூபாய் எட்டு அணா. வருட சந்தா - மூன்று ரூபாய்.

நோக்கம்

இதழின் நோக்கமாக இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதையான, ‘திவான் பஹதூர் இரட்டைமலை ஸ்ரீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்ற நூலில், “1818-ஆம் வருஷம் இவ்வினக் குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படி கலெக்டர்களை ரெவினியு போர்டார் கேட்டிருந்தார்கள். அது எப்படியாயிற்றென்று தெரியவில்லை. 1893-ஆம் வருடம் கல்வி கற்பித்து கொடுக்கத் தலைப்பட்டார்கள். 120 வருஷம் தூண்டுவாரற்று இருந்தார்கள். 1893-ஆம் வருடம் சர்க்கார் வெளியிட்ட உத்தரவை ஒரு சிலாசாசனமாய் இவ்வினத்தார்கள் எண்ணினாலும் பலிதப்படாமல் போய்விட்டது. அதற்கடுத்த படியாகத்தான் 1893-ஆம் வருடம் ‘பறையன்’ என்ற பத்திரிகையைத் தூண்டுகோலாக வெளியிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயர்க் காரணம்

‘பறையன்’ என்ற பெயருக்கான காரணம் பற்றி, “‘நான்! நான்!!’ என்ற மகா மந்திரத்தைச் ஜெபித்து கொண்டிருப்பவன் தன்னையுணர்ந்து சகலமுமறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல், ‘நான்! நான்!!’ என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமுமில்லாமல் உண்மை பேசி தன் சுதந்திரத்தைப் பாராட்டுகிறானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் சம்பத்துள்ளவனாய் நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் பறையர் இனத்தவனொருவன் ‘பறையன் என்பவன் நான்தான்’ என்று முன்வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பானாகையால் ‘பறையன்’ என்னும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகை பிரசுரித்தேன்” என்கிறார்.

உள்ளடக்கம்

‘பறையன்’ இதழ், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீர், நிலம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. காங்கிரஸ் மீதான விமர்சனத்தை முன் வைத்த இவ்விதழ், சிவில் சர்வீஸ் தேர்வை இந்தியாவில் நடத்தக்கூடாது போன்ற கோரிக்கைகளில் அதிக அக்கறை காட்டியது. பறையர்களுக்குத் தனிப் பள்ளிகள் வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்தது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் திருவாங்கூர், கிருஷ்ணா, கர்னூல் போன்ற நகரங்களிலும் தென்னாப்பிரிக்கா, பர்மா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இவ்விதழுக்கு வாசகர்கள் இருந்தனர். ஒடுக்கப்பட்டோருக்கும், தீண்டாதோருக்கும் நிலவி வந்த சமூகக் கொடுமைகளை ‘பறையன்’ இதழ் வெளிச்சம் போட்டுக் காட்டியது. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. சக இதழ்களுடன் பல்வேறு விவாதங்களை முன்னெடுத்தது.

”பறையன் இதழின் ஒரே ஒரு இதழ் மட்டுமே பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. இந்திய மொழிப் பத்திரிகைகளின் அறிக்கைகளில் இப்பத்திரிகையில் வெளியான செய்திகளின் சுருக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சுருக்கங்களே பறையன் இதழில் வெளியான செய்திகள் குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன” என்று, ’சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை-தலித் இதழ்கள் (1869-1943)' நூலின் ஆசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தம்

ஏழாண்டு காலம் தொடர்ந்து வெளிவந்த இவ்விதழ், 1900-த்தில், இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதால், தொடர்ந்து வெளிவராமல் நின்றுபோனது.

வரலாற்று இடம்

தலித்துகளின் பிரச்சனைகளையை அவர்களின் சார்பில் நின்று பேசிய முன்னோடி இதழாக ‘பறையன்’ இதழ் மதிப்பிடப்படுகிறது. இவ்விதழின் வெற்றியும், இதற்குக் கிடைத்த வரவேற்பும் 'திராவிடப்பாண்டியன்', 'இல்லற ஒழுக்கம்,' பூலோகவியாஸன், ஒருபைசாத் தமிழன் (தமிழன்), 'திராவிட கோகிலம்' போன்ற தலித் ஆதரவு இதழ்கள் உருவாகக் காரணமாக அமைந்தன.

உசாத்துணை


✅Finalised Page