under review

முத்துத்தாண்டவர்: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review added)
Line 122: Line 122:
# [https://shaivam.org/scripture/Tamil/1188/muththuth-thandavar-compositions#ananda-thandavamadinar https://shaivam.org/scripture/Tamil/1188/muththuth-thandavar-compositions]
# [https://shaivam.org/scripture/Tamil/1188/muththuth-thandavar-compositions#ananda-thandavamadinar https://shaivam.org/scripture/Tamil/1188/muththuth-thandavar-compositions]
# https://youtu.be/C9Nyg-508lA
# https://youtu.be/C9Nyg-508lA
# https://youtube.com/playlist?list=PLJBp7dGJmlBDCNdlBzLQrk1pT18rl2fBn<nowiki/>{{Ready for review}}
# https://youtube.com/playlist?list=PLJBp7dGJmlBDCNdlBzLQrk1pT18rl2fBn
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 09:44, 14 February 2022

முத்துத்தாண்டவர்
முத்துத்தாண்டவர்

முத்துத்தாண்டவர் (1525-1600)  கர்நாடக இசையில் பல தமிழ் கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய இசை முன்னோடி. பல்லவி-அனுபல்லவி-சரணம் என்கிற வடிவத்தை தமிழ் கீர்த்தனைகளில் அறிமுகப்படுத்தியவர் .[1]

கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1600).

இவர் இயற்றிய பதங்கள் இன்றும் நாட்டிய அரங்குகளில் பயன்படுத்தப் படுகின்றன.

பிறப்பு, இளமை

தாண்டவர் சீர்காழியில் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வேளாளர் குடும்பத்தில் 1525 ஆம் ஆண்டு பிறந்தார். தில்லை ஆண்டவரின் பெயராகிய தாண்டவர் என்னும் பெயரை பெற்றோர் இவருக்கு வைத்தனர். பெற்றோர் பெயர் தெரியவில்லை. மரபான வழியில் தமிழும் இசையும் பயின்றிருந்தார்.

இவரது பாடல்களின் பதிப்புகளில் ஆரம்பம் முதலே இவரது வரலாறு குறிப்பிடப்பட்டு வருகிறது. இது தவிர அவர் பாடல்களின் கருப்பொருள் சார்ந்து பல தொன்மங்களும் வழக்கத்தில் உள்ளன.

தொன்மங்கள்

தாண்டவரை இளமையில் என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. அது தொழுநோய் என்று அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அந்நிலையில் சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் நட்பு அவருக்கு ஏற்பட்டது. சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை போக்கியது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்க மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நோயுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது.

ஒரு நாள், சீர்காழி கோயிலில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து விழித்த தாண்டவர், தன் நிலையை உணர்ந்து பிரும்மபுரீஸ்வரரை நோக்கி வேண்டினார். இசைவேளாளர் ஆகையால் மரபு வழி கற்ற தேவாரப் பாடல்களைப் பாடினார்.

அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் எழுதுமாறு சொன்னாள். தனக்கு பாட்டேதும் எழுதத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்க வரியாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மறைந்துவிட்டாள் அச்சிறுமி.

முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தன. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். இப்பாடல் பல்லவி, அனுபல்லவியுடன் மூன்று நீண்ட சரணங்கள் கொண்டது. தாண்டவருக்கு நல்ல குரல் வளமும் இருந்தது. இப்பாடல் அக்கோவிலை விரிவாக வர்ணிக்கும் சரணம் கொண்டது.

பல்லவி: பூலோக கைலாயகிரி சிதம்பரம் அல்லால்

புவனத்தில் வேறுமுண்டோ

அனுபல்லவி: சாலோக சாமீப சாரூப சாயுச்சிய

சபைவாணர் ஆனந்தத் தாண்டவம் புரிவதால்

அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் அவரது நோய் தீர்ந்தது. ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் அளித்ததை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார் முத்துத்தாண்டவர். நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது.

ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் உடலை விட்டு நீங்கியது.

ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்தார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது.

இசைப் பணி

முத்துதாண்டவர் கீர்த்தனம்
முத்துதாண்டவர் கீர்த்தனம்

முத்துத்தாண்டவர் தமிழிசை வரலாற்றில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து இசைப்பாடல்(கீர்த்தனை/கிருதி) வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தைச் சேர்ந்தவர். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அனுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (முப்பிரிவு) முறையை, தாளத்துக்குப் பொருத்தி அவ்வடிவத்தை முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவர்.

அதன் பிறகு இதுவே கீர்த்தனைகளின் வடிவமாகியது. அதனால் கீர்த்தனை மரபின் முன்னோடி. இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். தன் பாடல்களில் சமயச் செய்திகளையும், தல வரலாற்று செய்திகளையும், புராணச் செய்திகளையும் அமைத்துப் பாடியிருக்கிறார்.  

இவரின் பல பாடல்கள் பதம் என்கிற வகையினைச் சாரும். பதம் என்னும் வகைப் பாடல்கள் பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படுபவை. அந்தக் காலகட்டத்தில் சிருங்கார ரசமும், பக்தியும் இதுபோன்ற பதங்களின் பாடுபொருட்களாக இருந்தன.  அவற்றை  உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.

கீர்த்தனங்கள்

இதுவரை முத்துத்தாண்டவருடைய 60 கீர்த்தனங்கள் கிடைத்து அச்சிடப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 25 ராகங்களும் 7 தாளங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் மேளகர்த்தா ராகங்கள் குறைவாகவும் ஜன்ய ராகங்களே அதிகமாகவும் இருக்கின்றன. கல்யாணி, ஆனந்த பைரவி, நாதநாமக்கிரியை ஆகிய ராகங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அதிகம் பயன்பாட்டில் இல்லாத பரீஸ் (பரசு), கர்நாடக சாரங்கா, கௌளிபந்து, நாகவராளி, மங்கலகௌசிகை ஆகிய ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.

இவருடைய பல்லவிகள் சொற்கள் எளிதாகவும் குறைவாகவும் இருப்பதால் பாடகர் தம் கற்பனைத் திறனுக்கு ஏற்றபடி விரித்துப் பாடுவதற்கு உதவுகிறது. இயல்பாக தாளத்தில் அமையும் சந்தம் கொண்டிருக்கிறது. இவர் மேளக்காரர் மரபை சேர்ந்தவர் என்பதால் பரதநாட்டியமும், நட்டுவாங்கமும் அறிந்திருப்பது அவரது ”ஆடிய வேடிக்கை பாரீர் “ போன்ற கீர்த்தனைககளில் தெரிகிறது. சில கீர்த்தனங்கள் ‘தாளக் கீர்த்தனம்’ என்றே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

”ஆனந்தத் தாண்டவம் ஆடினார்” மூவடுக்கொலிக் கீர்த்தனம் எனப் புகழ்பெற்றது

பல்லவி

ஆனந்தத் தாண்டவ மாடினார் தில்லையம்பல வாணனார்

அனுபல்லவி

ஆனந்தத் தாண்டவமாடி நின்றாரரியருள் சித்தம் பெறச் சக்கொன்று            

அருச்சிக்கும் தனிப்புஷ்பந் தரிச்சுத்தம் பதத்திற் பொற்றிருச் சிற்றம்பலத்து நின்று                     (ஆனந்த)

சரணங்கள்.

1.     பாதச்சிலம்பு கலீர் கலீர் கலீரென்னப்  பைம்பொற் குழைகள்

    பளீர் பளீர் பளீரென்ன வேதப்புராணந் தத்தெய் தத்தெய் தத்தெய்யென்ன  

விரித்துச் செஞ்சடைக்குப் பொன் தரித்துக் குஞ்சரத்தைக் கொன்றுரித்துத்

திண்புரத்தைப் புன் சிரிப்பிற் சங்கரித்துநின்று                        (ஆனந்த)

இப்பாடல் மேலும் இரண்டு சரணங்கள் கொண்டது.

பதங்கள்

முத்துத்தாண்டவர் இருபத்தைந்து பதங்கள் இயற்றியிருக்கிறார். இவற்றில் 12 ராகங்களை பயன்படுத்தியிருக்கிறார். ”பேச ஒண்ணாத கோபம் ஏதோ” என்ற பதம் ஆஷாட கன்னடம் என்னும் அரிய ராகத்தில் அமைக்கப்பட்டது.

சிறுமிகள் கூற்றாகவும், காதல் கொண்ட பெண்கள் கூற்றாகவும் பல அகத்துறை உணர்வுகள் கொண்ட பக்திப் பாடல்களை நாட்டியத்துக்கு உரிய பதங்களாக இயற்றியிருக்கிறார்.

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் - ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் - நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்     (தெண்)

 சரணங்கள்

1.  பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

    இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு     (தெண்)

2.  கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

    பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு     (தெண்)

3.  மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்                   

    சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித்     (தெண்)

மறைவு

1640-ஆம் வருடம், ஆனி மாதம் மக நட்சத்திரத்தன்று இவர் மறைந்தார் என்று சொல்லப்படுகிறது.

படைப்புகள்

இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

  • பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ - ராகம் - கல்யாணி, தாளம் - ஜம்பை தாளம்
  • சேவிக்க வேண்டுமையா[3] - ராகம் -ஆந்தோளிகா, தாளம் - ஆதி தாளம்
  • சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் - ராகம் - நீலாம்பரி, தாளம் - திரிபுட தாளம்
  • நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் - ராகம் - ஆகிரி, தாளம் - ஆதி தாளம்
  • பேசாதே நெஞ்சமே பேசாதே - ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்
  • காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] - ராகம் - தன்யாசி, தாளம் - மிஸ்ர சாபு
  • தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] - ராகம்- வசந்தா, தாளம்-ஆதி
  • தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் - ராகம் - யமுனாகல்யாணி, தாளம் - ஆதி

உசாத்துணை

வெளி இணைப்புகள்

  1. https://www.isaikalai.com/2021/06/blog-post_13.html
  2. முத்துத்தாண்டவர் கீர்த்தனங்கள்
  3. https://shaivam.org/scripture/Tamil/1188/muththuth-thandavar-compositions
  4. https://youtu.be/C9Nyg-508lA
  5. https://youtube.com/playlist?list=PLJBp7dGJmlBDCNdlBzLQrk1pT18rl2fBn


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.