தமிழ்ச்சிட்டு (சிறார் இதழ்): Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 35: | Line 35: | ||
* [https://www.tamilauthors.com/01/987.html சிறார் இலக்கிய வளர்ச்சியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்] | * [https://www.tamilauthors.com/01/987.html சிறார் இலக்கிய வளர்ச்சியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்] | ||
* [https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=21&id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lux3&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 தமிழ்ச்சிட்டு இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=21&id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lux3&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 தமிழ்ச்சிட்டு இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 19:29, 1 July 2023
தமிழ்ச்சிட்டு (1965) சிறார் இதழ். சிறுவர்கள் மாணவர்களாக இருக்கும்போதே தமிழ்ப் பற்றுடன் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், 1965-ல், பெருஞ்சித்திரன் தமிழ்ச்சிட்டு இதழைத் தோற்றுவித்தார். மாணவர்களுக்குத் தேவையான கலை, அறிவியல், வாழ்வியல் கருத்துகளைத் தாங்கிய தனித்தமிழ் இதழாக, தமிழ்ச்சிட்டு வெளிவந்தது.
பதிப்பு, வெளியீடு
சிறுவர்கள் இளம் வயதிலேயே தமிழ்ப் பற்றுடன் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், பெருஞ்சித்திரன், 1965-ல், கடலூரில், தமிழ்ச்சிட்டு இதழைத் தொடங்கினார். பள்ளி மாணவர்களைக் கவரும் வகையில் பாடல்கள், கதைகள், கட்டுரைகள், அறிவியல் புதிர்கள், துணுக்குகளுடன் இவ்விதழ் வெளிவந்தது.
அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த சிறார் இதழ்களின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித் தமிழுக்கு தமிழ்ச்சிட்டு இதழ் முக்கியத்துவம் அளித்தது. தமிழ்ச்சிட்டு இதழில் கலை, அறிவியல், இலக்கியம், பொதுஅறிவு, விளையாட்டு, நாட்டார் கூறுகள் போன்றவை தனித்தமிழ்ச் சிந்தனையுடன் வெளிவந்தன. சில ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் சொந்த அச்சகம் அமைக்கப்பட்டு தமிழ்ச்சிட்டு இதழ் சென்னையிலிருந்து வெளிவந்தது.
இதழின் பெயர்க் காரணம்
தமிழ்ச்சிட்டு என்ற இதழின் பெயர்க்காரணம் குறித்து பெருஞ்சித்திரன், “சிட்டுக்குருவி குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நன்கு தெரிந்த பறவை. அதன் சுறுசுறுப்பும் உழைப்பும் முயற்சியும் சிறுவர்களுக்குக் கட்டாயம் வேண்டுவன. தமிழ் மாணவர்களும் அச்சிட்டுக்குருவியைப் போல் சுறுசுறுப்பாகவும் உழைப்பும் முயற்சியும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி இடப்பெற்றதே அதன் பெயர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளடக்கம்
தமிழ்ச்சிட்டு இதழின் முகப்புப் பக்கத்தில் சிட்டுக்குருவிகளின் ஓவியம் இடம்பெற்றது. ‘தமிழ்ச்சிட்டு' என்ற பெயரின் கீழ், ‘தனித்தமிழ் சிறுவர் கலை இதழ்’ என்ற குறிப்பு இடம்பெற்றது. இவ்விதழ், 1/8 டெம்மி அளவில் 16-20 பக்க அளவில் வெளிவந்தது. இதழின் ஆண்டினைக் குறிக்க குரல் என்பதையும், மாதத்தைக் குறிக்க இசை என்பதையும் தமிழ்ச்சிட்டு பயன்படுத்தியது. திருவள்ளுவர் ஆண்டையும், தமிழ் மாதக் குறிப்பையும் தமிழ்ச்சிட்டு இதழ் பின்பற்றியது. தமிழ்ச்சிட்டு இதழின் முகப்புப் பக்கத்தில் பெருஞ்சித்திரனின் கீழ்காணும் பாடல் இடம் பெற்றது.
இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு!
இன்றைய சிறுவர் நாளைய உலகம்!
நன்று செய்வதே நமக்குநல் வாழ்க்கை!
என்றும் அழியாது இருப்பதே புகழே!
தமிழ்ச்சிட்டு கதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், பாடல், துணுக்கு, உரை எனப் பல பகுதிகளுக்கு இடமளித்தது. இதழின் அட்டையில் புகழ்பெற்ற தலைவர்களின் படங்கள் இடம்பெற்றன. அறிவியல் செய்திகள், மொழிபெயர்ப்புகள், கணிதவியல் சார்ந்த செய்திகள் இடம்பெற்றன. சிறுவர்களுக்கு அறிவுரை கூறும்வகையில் எளிமையான பாடல்கள் இதழ்தோறும் வெளியாகின.
மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டும் பல கட்டுரைகளை பெருஞ்சித்திரன் எழுதினார். மாணவர்கள் தங்கள் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்ள தமிழ்ச்சிட்டு உதவியது. அப்படி மாற்றிக் கொண்ட மாணவர்களது பள்ளியின் பெயருடன், அவர்களது பழைய மற்றும் மாற்றிக் கொண்ட புதிய பெயரையும் வெளியிட்டு ஊக்குவித்தது.
பெருஞ்சித்திரன் தனது இயற்பெயரான துரை.மாணிக்கம் என்ற பெயரில் எழுதிய ‘கழுதை அழுத கதை’ என்ற உருவகக் கதைத்தொடர் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. பல்வேறு புனை பெயர்களில் பெருஞ்சித்திரன் தமிழ்ச்சிட்டு இதழில் எழுதினார்.
தமிழ்ச்சிட்டு இதழின் விலை தொடக்கத்தில் 15 காசுகள் தொடங்கி, பிற்காலத்தில் 1.50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆண்டுக்கட்டணம் 2.00 ரூபாய் தொடங்கி, 18.00 ரூபாய் வரை இருந்தது. 1965 தொடங்கி, 1994 வரை 215 இதழ்கள் வெளிவந்தன. தென்மொழி இதழ், தமிழக அரசால் தடை செய்யப்பட்டதால், தமிழ்ச்சிட்டு இதழ், சில காலம் தென்மொழி இதழின் செய்திகளை, கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.
இதழ் நிறுத்தம்
தமிழ்ச்சிட்டு இதழ், பெருஞ்சித்திரனின் மறைவுக்குப் பின் அவரது இளைய மகன் பொழிலனை ஆசிரியராகக் கொண்டு, இரண்டாண்டுகள் வெளிவந்தது. பின் 1997-ல், நின்றுபோனது.
உசாத்துணை
✅Finalised Page