எஸ்.வி.வி: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
m (Tamilwiki Bot 1 moved page எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (எஸ்.வி.வி.) to எஸ்.வி.வி without leaving a redirect: Title changed by ASN) |
(No difference)
|
Revision as of 10:00, 23 June 2023
எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார்; எஸ்.வி.வி: ஆகஸ்ட் 25,1880 - மே, 31, 1950) தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஆங்கிலத்திலும் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
எஸ்.வி.விஜயராகவாச்சாரியார் எனும் எஸ்.வி.வி., திருவண்ணாமலையில், ஆகஸ்ட் 25, 1880-ல், செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார்-கனகவல்லி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உயர்கல்வியை முடித்த இவர், சட்டக்கல்வி பயின்று வழக்குரைஞரானார்.
தனி வாழ்க்கை
திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணி செய்தார். திருமணானது. இவருக்கு எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி.பார்த்தசாரதி என இரு மகன்கள். இருவருமே இசைக் கலைஞர்கள். எஸ்.வி.வி. யும் கர்நாடக சங்கீதம் கற்றவர். வீணை வாசிப்பில் வல்லவர். ஜோதிடம் அறிந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
ஆங்கில இலக்கியத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர் எஸ்.வி.வி. ஹிந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். வழக்குரைஞராக இருந்ததால் சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது பிரச்சனைகளையும் அறிந்திருந்தார். தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, அனுபவித்ததை நகைச்சுவை கலந்து எழுதத் தொடங்கினார். தனது வழக்குரைஞர் தொழில் அனுபவங்களை மையமாக வைத்து An Elephant's creed in Court என்னும் கட்டுரையை ஹிந்துவில் எழுதினார். “கோவில் யானைக்கு எந்த நாமம் சாத்துவது? வடகலை நாமமா, தென் கலை நாமமா?” என்ற வழக்கு பற்றிய பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, எஸ்.வி.வி.க்குப் புகழைச் சேர்த்தது. தொடர்ந்து ஹிந்துவில் எழுத வாய்ப்பு வந்தது. 1926 முதல் ஹிந்து நாளிதழில் வாரந்தோறும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினார். ராஜாஜி உள்ளிட்ட பிரபலங்கள் ரசித்து வாசிக்கும் பகுதியாக அக்கட்டுரைப் பகுதி புகழ்பெற்றது. அக்கட்டுரைகள் பின்னர் "Soap Bubbles" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.
எஸ்.வி.வியின் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்ட கல்கி, அவரைத் தமிழில் எழுத வைக்க முயற்சித்தார். இதுபற்றி அவர் தன் கட்டுரை ஒன்றில், “எஸ்.வி.வி. தமிழர்களைப் பற்றி, தமிழிலேயே எண்ணி, தமிழர்களுக்காகவே எழுதுகிறார். பாஷை ஒன்றுதான் இங்கிலீஷ். அதையும் தமிழாகச் செய்து விடுவது மிகவும் சுலபம். சந்தர்ப்பம் கிடைக்க வேண்டியதுதான். தமிழிலும் இவ்வளவு சரளமாகவும், இன்பமாகவும் எழுதுவார் என்பது சந்தேகமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். 1929-ல், ஆனந்தவிகடன் அனுபந்தத்தில், எஸ்.வி.வி.யின் ஆங்கிலக் கட்டுரையை ‘கோயில் யானை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பின் கல்கி, ஆசிரியர் எஸ்.எஸ். வாஸனுடன் திருவண்ணாமலைக்கே சென்று எஸ்.வி.வி.யை நேரில் சந்தித்து ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு வேண்டிக் கொண்டார். எஸ்.வி.வி.யின் முதல் கதை ‘தாக்ஷாயணியின் ஆனந்தம்’ ஆனந்த விகடனில் ஜூலை 1 ,1933 தேதியிட்ட இதழில் வெளியானது. அதற்கு தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. ராஜாஜி, டி.கே.சி. உள்ளிட்டோர் அக்கட்டுரைகளைப் படித்துப் பாராட்டினர். “ஆங்கிலத்தில் கூட எஸ்.வி.வி. இவ்வாறு எழுதியதில்லை” என்று புகழ்ந்துரைத்தார் ராஜாஜி. தொடர்ந்து விகடனுக்கு எழுதினார் எஸ்.வி.வி.
1940-ல் எஸ்.வி.வி.க்கு அறுபதாண்டு நிறைவு மணிவிழா நடந்தது. கல்கி , எழுத்தாளர் கி.சந்திரசேகரனின் உதவியுடன் விழாவை நடத்தினார். விகடனின் அட்டையில் எஸ்.வி.வி.யின் படத்தை வெளியிட்டார். ‘கல்கி இதழ்’ தொடங்கியபோது அதில் எழுதுமாறு எஸ்.வி.வி.யைக் கேட்டுக் கொண்டார் கல்கி. ஆனால், எஸ்.வி.வி. அதற்கு உடன்படவில்லை. பாரதமணியில் மட்டும் அவரது ஒரே ஒரு சிறுகதை வெளியாகியுள்ளது.
எஸ்.வி.வி.யின் புதினங்கள்
கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லாமல் கதாபாத்திரங்களின் குணநலன்களையும், பேச்சுக்களையும், புலம்பல்களையும், சிந்தனை ஓட்டங்களையும் மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட நூல் ‘உல்லாஸ வேளை’. அந்த நூல் பற்றிய தனது மதிப்புரையில், க.நா. சுப்ரமணியன், “நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லியிருகிறார் எஸ்.வி.வி. ஹாஸ்யமாக எழுதியதால் தான் அவருக்குப் பெருமை என்று சொல்ல முடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பதுதான் எஸ்.வி.வி.யின் தனிச்சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். (படித்திருக்கிறீர்களா, அமுத நிலையம் வெளியீடு)
தந்தை - மகனுக்கிடையேயான பாசப்போராட்டத்தை, உறவை மையமாக வைத்து எழுதப்பட்டது ”ராஜாமணி”. ”ராமமூர்த்தி” குடும்ப உறவுச்சிகல்களை மையமாகக் கொண்டது. ”சம்பத்து” கதை எஸ்.வி.வியின் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. சராசரி ஆண் மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு என பல தரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணவோட்டங்களை மையமாக வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளார்.
மறைவு
தம் வாழ்வின் இறுதிக்காலம் வரை ஹிந்து மற்றும் ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதிய எஸ்.வி.வி., உடல்நலக்குறைவால் மே 31, 1950-ல் காலமானார்.
ஆவணம்
எஸ்.வி. வி.யின் வாழ்க்கையை ‘எஸ்.வி.வி.எனும் ரஸவாதி’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வாஸந்தி எழுதியுள்ளார்.
மறுபதிப்பு
எஸ்.வி. வி. எழுதிய ஆங்கில மற்றும் தமிழ் நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் மறுபதிப்புச் செய்துள்ளது.
இலக்கிய இடம்
பொதுவாசிப்புக்குரிய நூல்களை ரசனை உணர்வோடு எழுதியவர் எஸ்.வி. வி. அக்காலத்து வாழ்க்கையைப் பற்றியும், பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் பற்றியும் அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வியின் எழுத்துக்கள் திகழ்கின்றன. குறிப்பாக, அந்தக் காலத்து பிராமணக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து அதிகம் எழுதியிருக்கிறார். நகைச்சுவை இவரது படைப்பின் முக்கிய அம்சம் எனலாம். நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன், துமிலன், நாடோடி என பலருக்கும் முன்னோடி எஸ்.வி.வி. தான். வெகு ஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்ட எழுத்தாளர்களில் எஸ்.வி.வி.க்கு மிக முக்கிய இடமுண்டு.
இவரது எழுத்துப் பற்றி, க.நா.சுப்ரமணியம், “எஸ்.வி.வி. ஆரம்பத்தில் ஸ்டீபன் லீ காக், ஜெரோம் கே ஜெரோம் பாணியில் பல கட்டுரைகள், கதைகள், தொடர் கதைகளை எழுதினார். பின்னர் 1938, 1939க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும அவருக்கே இயற்கையாக உள்ள ஒரு ஹாஸ்யமும், சிந்தனைத் தெளிவும் இடம் பெற்றன. லேசான, நம்மைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் சித்திரங்கள் அவை. அவர் எழுதி ஐம்பது வருஷங்களுக்குப் பின் இப்போது இவற்றைப் படிக்கும் போது, மனித சுபாவம், முக்கியமாக இந்திய சமூகத்தின் சுபாவம் அப்படியொன்றும் அதிகம் மாறிவிடவில்லை என்று தோன்றுகிறது” என்கிறார்.
“எஸ்.வி.வி. தான் நகையாடிய மனிதர்களை கார்ட்டூன்களாக்கிவிடவில்லை. நம்மைக் கிளுகிளுக்க வைப்பதற்காக எந்த சம்பவத்தையும் செயற்கையாக கற்பித்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் அவருக்கு அவசியமிருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறே எழுதினார். அவை எதுவும் அவர் முகத்தில் ஒரு கேலிப் புன்னகையைத் தர தவறவில்லை.” என்று மதிப்பிடுகிறார், வெங்கட் சாமிநாதன்.
நூல்கள்
தமிழ்ப் படைப்புகள்
- உல்லாஸ வேளை
- செல்லாத ரூபாய்
- ராமமூர்த்தி
- கோபாலன் ஐ.சி.எஸ்
- சம்பத்து
- ராஜாமணி
- புது மாட்டுப்பெண்
- வசந்தன்
- வாழ்க்கையே வாழ்க்கை
- பொம்மி
- சௌந்தரம்மாள்
- சபாஷ் பார்வதி
- சிவராமன்
- ரமணியின் தாயார்
- ஹாஸ்யக் கதைகள்
- தீபாவளிக் கதைகள்
ஆங்கில நூல்கள்
- Soap Bubbles
- More Soap Bubbles
- Holiday Trip
- Alliance At A Dinner
- Mosquitoes At Mambalam
- Much Daughtered
- The Marraige
- Thiry Years a Lawyer
உசாத்துணை
- தென்றல் தமிழ் ஆன் லைன்.காம் கட்டுரை
- எஸ்.வி.வி.: பசுபதிவுகள்
- எஸ்.வி.வி. என்னும் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்: வெங்கட்சாமிநாதன்
- கதை சொல்லிகளின் கதை, ச. தமிழ்ச்செல்வன்: விகடன் இதழ்
- எஸ்விவியின் “உல்லாச வேளை”: சிலிகான் ஷெல்ஃப் தளம்
- படித்தவை ரசித்தவை – 9: அறுசுவை.காம்
✅Finalised Page