நடராஜப் பெருமாள் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
Line 67: Line 67:
* [https://malayalam.indiatoday.in/india-today-special/photo/ex-minister-p-s-nataraja-pillais-death-anniversary-331638-2022-01-10-6 மலயாளம் இந்தியா டுடே பி.எஸ்.நடராஜ பிள்ளை]
* [https://malayalam.indiatoday.in/india-today-special/photo/ex-minister-p-s-nataraja-pillais-death-anniversary-331638-2022-01-10-6 மலயாளம் இந்தியா டுடே பி.எஸ்.நடராஜ பிள்ளை]
* [https://psnmghss.org/about/ பி.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளி திருவனந்தபுரம்]
* [https://psnmghss.org/about/ பி.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளி திருவனந்தபுரம்]
* [http://charithravayana.blogspot.com/2016/05/1891-1966.html பி.எஸ்.நடராஜ பிள்ளை ஒரு வாழ்க்கைக்குறிப்பு]
* [https://charithravayana.blogspot.com/2016/05/1891-1966.html பி.எஸ்.நடராஜ பிள்ளை ஒரு வாழ்க்கைக்குறிப்பு]

Revision as of 15:54, 4 April 2023

நடராஜ பிள்ளை
நடராஜ பிள்ளை
பி.எஸ்.என்
லால்பகதூர் சாஸ்திரியுடன்
பட்டம் தாணுபிள்ளை (முதல்வர்) மற்றும் அமைச்சர்களுடன்
நடராஜ பிள்ளை திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டு ஊர்வலத்தில்
பி.எஸ்.என் வரலாறு

நடராஜப் பெருமாள் பிள்ளை (10 மார்ச் 1891- 10 ஜனவரி 1966 ) (பி.எஸ்.நடராஜ பிள்ளை) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். கேரள அரசியல்வாதி, கல்விச்சீர்திருத்தங்கள் மேற்கொண்டவர். 1962ல் இந்திய பாராளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். 1954 முதல் 1955 வரை திருவிதாங்கூர் கொச்சி மாகாணத்தின் நிதியமைச்சராகப் பணியாற்றினார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் மகன்

பிறப்பு, கல்வி

நடராஜபிள்ளை 10 மார்ச் 1891 ல் தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளைக்கும் சிவகாமிக்கும் கேரளத்தில் ஆலப்புழாவில் பிறந்தார். ஏழுவயதிலேயே தந்தையை இழந்தார். திருவனந்தபுரத்தில் மகாராஜா பள்ளியில் பள்ளிக்கல்வியும் கல்லூரிப்படிப்பும் முடித்தார். சட்டம் பயின்று வழக்கறிஞரானார்

தனிவாழ்க்கை

நடராஜப்பெருமாள் பிள்ளைக்கு லட்சுமிஒ அம்மாள், கோமளாம்பாள் என இரு மனைவிகள். ஏழு குழந்தைகள்.

அரசியல்

நடராஜபிள்ளை தன் ஏழு வயதிலேயே தந்தையை இழந்தார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிரிட்டிஷ் அரசுக்கும், திருவிதாங்கூர் மன்னருக்கும் விசுவாசமான நிலைபாடு கொண்டிருந்தார். ஆனால் நடராஜப் பெருமாள் பிள்ளை இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

1916 திருவிதாங்கூரில் உருவான முதல் சட்டச்சபையான ஸ்ரீமூலம் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.15-பிப்ரவரி 1917 ல் இளைஞரான நடராஜபிள்ளை சட்டச்சபையில் ஆற்றிய முதல் உரையே வேளாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியது. அது அன்று மிகவும் பாராட்டப்பட்டது.

அரசை எதிர்த்து போராடியமையால் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வாழ்ந்த ஹார்விபுரம் இல்லத்தையும் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் திருவிதாங்கூர் அரசு 1916ல் பறிமுதல் செய்தது. நடராஜ பிள்ளை அருகே ஒரு குடிசையில் வாழ்ந்து பலர் உதவியால் கல்விகற்று வழக்கறிஞராக ஆனார்.

1944ல் மீண்டும் ஸ்ரீமூலம் சபைக்கான தேர்தலில் வென்றார். சுதந்திரத்திற்குப்பின் பி.எஸ்.நடராஜன் 1948ல் திருவிதாங்கூர் சட்டச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1950 வரை பணியாற்றினார். திருவிதாங்கூர்- கொச்சி சட்டச்சபைக்கு மீண்டும் தேர்வாகி 1951 முதல் 1957 வரை பணியாற்றினார்.

1962ல் திருவனந்தபுரம் தொகுதியில் இடதுசாரிகளின் ஆதரவுள்ள சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய சோஷலிச கட்சி, இந்திய பிரஜா சோஷலிச கட்சி ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியுடனும் பின்னர் காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து செயல்பட்டார்.

பதவிகள்

இந்திய சுதந்திரத்திற்கு முன் திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட நடராஜன் திருவிதாங்கூர் அரசியல்சட்ட சீர்திருத்தக்குழு (Travancore Constitution Reforms Committee in 1946) உறுப்பினராக பணியாற்றினார். சுதந்திரத்திற்குப்பின் திருவிதாங்கூர் மாணிகம்காரம் கமிட்டி (Travancore Manigam Karam Committee from 1952 to 1953) திருவிதாங்கூர் வேலைவாய்ப்பின்மை ஆய்வுக்கமிட்டி (nemployment Committee in 1956) ஐக்கிய கேரள சட்டசீர்திருத்த கமிட்டி (Reforms Committee (Kerala) from 1958 to 1959) ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். 1954 முதல் 1955 வரை திருவிதாங்கூர் கொச்சி மாகாணத்தின் நிதியமைச்சராகப் பணியாற்றினார். திருவிதாங்கூர் கொச்சி மாகாணத்தின் முதல் வரவுசெலவு அறிக்கையை தயாரித்தார்.

1960 ல் நடராஜன் விற்பனைவரி ஒருங்கிணைப்பு கமிட்டி (High Level Sales Tax Enquiry Committee) தலைவராக ஓராண்டு பணியாற்றினார்.

பி.எஸ்.நடராஜன் ஆறுமுறை சட்டச்சபை உறுப்பினராகவும், இரண்டுமுறை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கல்விப்பணி

திரு-கொச்சி மாகாணத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்பக் கல்வியை முழுமையாகவே இலவசமாக அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்தார். இது பின்னாளில் இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாக முயற்சி எடுத்தார்.

பி.எஸ்.நடராஜ பிள்ளை தன் தந்தை பெ.சுந்தரம் பிள்ளை நினைவாக சுந்தரவிலாசம் என்னும் தொடக்கப்பள்ளியை தன் 17 வயதில் 1908ல் தொடங்கினார். அது பின்னர் 1947ல் உயர்நிலைப்பள்ளியாக ஆகியது. இன்று பி.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியாக திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

நிலச்சீர்திருத்தப்பணிகள்

பி.எஸ்.நடராஜ பிள்ளை கேரளத்தில் நிலச்சீர்திருத்தத்தின் பொருட்டு 7 ஆகஸ்ட் 1954ல் தொடர்ச்சியாக ஆறு சட்டமுன்வரைவுகளை திருவிதாங்கூர் கொச்சி சட்டச்சப்பையில் கொண்டுவந்தார். பின்னர் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு அமைச்சரவையில் அந்த சட்டமுன்வரைவை ஒட்டியே இந்தியாவின் முதல் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அமலாயின.

சமயப்பணி

திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையின் வளர்ச்சிக்கு பெருமுயற்சி எடுத்தவர்களில் நடராஜ பிள்ளையும் ஒருவர்

மறைவு

பி.எஸ்.நடராஜ பிள்ளை 10 ஜனவரி 1966 ல் மறைந்தார். ஆயிரம் ஏக்கருக்குமேல் நிலம் கொண்டிருந்தவரான நடராஜ பிள்ளை அமைச்சராக ஆனபின்னரும்கூட 14 செண்ட் நிலத்தில் சிறிய குடிசைவீட்டிலேயே வாழ்ந்தார். நடராஜபிள்ளை முதுமையில் மிக வறுமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் மறைந்தபோது அன்றைய கணக்கில் அறுபதாயிரம் ரூபாய் கடனாளியாக இருந்தார்.

நினைவுகள்

  • பி.எஸ்.நடராஜ பிள்ளை - பி.சுப்பையா பிள்ளை (மலையாளம்)
  • பி.எஸ்.நடராஜ பிள்ள - சுகுமாரன் கல்லுவிள (மலையாளம்)

வரலாற்று இடம்

பி.எஸ்.நடராஜ பிள்ளை கேரள வரலாற்றில் இரண்டு பணிகளுக்காக நினைவுகூரப்படுகிறார். கேரளம் முழுக்க இலவச ஆரம்பக் கல்வியை கொண்டுவந்தவர். கேரள நிலச்சீர்திருத்த இயக்கத்தை தொடங்கிவைத்தவர்.

விவாதங்கள்

நடராஜ பிள்ளை தமிழ்ப்பின்னணி கொண்டவர். திருவனந்தபுரம் பேரூர்க்கடை முன்பு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வாழ்ந்த ஹார்விபுரம் வீடுஇருந்த இடம். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு அங்கே நூறு ஏக்கர் நிலம் இருந்தது. ஹார்விபுரம் இல்லத்தை திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயரின் ஆணைப்படி திருவிதாங்கூர் அரசு கையகப்படுத்தியது. சுதந்திரத்திற்கு பின் 12 ஏக்கர் கொண்ட அந்நிலத்தை நடராஜ பிள்ளைக்கு பட்டம் தாணுபிள்ளையின் அரசு திருப்பி அளித்தது. அவர் அதை ஏற்க மறுத்தார். நிலச்சீர்திருத்ததில் நம்பிக்கை கொண்டிருந்த நடராஜ பிள்ளை தன் நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்

அரசு கையகப்படுத்திய நிலம் 1968ல் கல்விநிலையம் தொடங்குவதற்காக இலவசமாக அளிக்கப்பட்டது. அங்கே திருவனந்தபுரம் லா அக்காதமி என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது பின்னர் தனியார் கல்விநிலையமாக ஆகியது. அங்கே மோசடி நிகழ்வதாக அந்நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான வி.எஸ்.அச்சுதானந்தன் 2-17ல் குற்றம் சாட்டியதை ஒட்டி ஒரு நிகழ்ந்த விசாரணையின்போது பிணறாயி விஜயன் அலட்சியமாக அந்த நிலம் ‘ஏதோ ஒரு தமிழன் பிள்ளை’க்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டார். இது கூட்டணிக்கட்சியான இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியினர், காங்கிரஸ்கட்சியினர் ஆகியோரை சீற்றமடையச் செய்தது. கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தன்னுடைய பேச்சு பி.எஸ்.நடராஜனுக்கு எதிராக அல்ல என பிணறாய் விஜயன் விளக்கம் அளித்தார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 6 பிப்ரவரி 2017)

உசாத்துணை