குண்டலகேசி: Difference between revisions
No edit summary |
(Moved categories to bottom of article) |
||
Line 48: | Line 48: | ||
* [https://www.appleboxsabari.com/2019/12/kundalakesi-story-in-tamil.html குண்டலகேசியின் கதை] | * [https://www.appleboxsabari.com/2019/12/kundalakesi-story-in-tamil.html குண்டலகேசியின் கதை] | ||
* [https://store.tamillexicon.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ களஞ்சியம்] | * [https://store.tamillexicon.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ களஞ்சியம்] | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:பௌத்த இலக்கியங்கள்]] | [[Category:பௌத்த இலக்கியங்கள்]] | ||
[[Category:Tamil Content]] |
Revision as of 15:36, 29 December 2022
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமயம் சார்ந்த நூல். இதனை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் எட்டாம் நூற்றாண்டு. தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, துறவியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்பிய குண்டலகேசி என்னும் பெண்ணின் கதையே குண்டலகேசி. இதற்கு 'குண்டலகேசி விருத்தம்' என்ற பெயரும் உண்டு.
நூல் வரலாறு
சமய வாத நூல்களான பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, நீலகேசி போன்ற 'கேசி’ வகை நூல்களில் 'குண்டலகேசி’யும் ஒன்று. 'கேசி’ என்பது கூந்தலைக் குறிக்கும். குண்டலகேசியின் காப்பியத்தலைவி, தனது சுருண்ட கூந்தல் காரணமாக அப்பெயர் பெற்றாள்.
உரையாசிரியர்கள் பலர் தங்கள் உரைகளில் குண்டலகேசியின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர். வீரசோழிய உரை குண்டலகேசி குறித்து இரண்டு இடங்களில் குறிப்பிடுவதுடன் அதன் ஒரு பாடலையும் மேற்கோள் காட்டியிருக்கிறது. யாப்பருங்கல விருத்தி நான்கு இடங்களில் இந்நூல் பற்றிக் கூறுகிறது. புறத்திரட்டில் இந்நூலின் பத்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான வகையில் குண்டலகேசியின் பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
நீலகேசி உரை மூலம் குண்டலகேசி வரலாற்றை விரிவாக அறிய முடிகிறது. வாதம், எதிர்வாதம் மூலம் 'குண்டலகேசி’ நூல் பற்றிய அடிப்படைச் செய்திகள் கிடைக்கின்றன. 'மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற நூலில், 'மயிலை சீனி. வேங்கடசாமி’ மேலும் பல பாடல்களின் முதற்குறிப்பைத் தந்துள்ளார். மக்களிடையே புழக்கத்தில் இருந்து, சைவ சமய மறுமலர்ச்சியினால் இந்தக் காப்பியம் மறைந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
நூலாசிரியர் வரலாறு
’குண்டலகேசி’ நூலை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். 'நாதகுப்தனார்’ என்பதே மருவி ’நாதகுத்தனார்’ ஆயிற்று என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது காலம் பொ. யு எட்டாம் நூற்றாண்டாகும்.
குண்டலகேசியின் கதை
ராஜ கிருக நாட்டு அமைச்சரின் மகளான பத்திரை, திருட்டுக் குற்றத்திற்காகக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ’காளன்’ என்னும் பெயர் கொண்ட ஒரு கள்வனைப் பார்க்கிறாள். அவன் அழகு கண்டு அவன் மேல் காதல் கொள்கிறாள். இதனை அறிந்த தந்தை, காளனின் தண்டனையை நிறுத்தி வைத்து மகளுக்கு அவனை மணம் செய்து வைக்கிறான்.
பத்திரை - காளன் இனிய இல்லறத்தில் ஒரு நாள் ஊடல் உண்டாகிறது. 'நீ கள்வன் மகன் அல்லனோ’ என்று பத்திரை சொன்னதால் சீற்றமுற்ற காளன், அவளைக் கொல்லத் துணிகிறான். அவளிடம் அன்போடு இருப்பது போல் நடித்து மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவளைக் கொல்ல முற்படும் போது, அவள், 'தற்கொல்லியை முற்கொல்லல் தகும்’ என்று எண்ணி அவனை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.
பின் மனம் வெறுத்த பத்திரை, சமண சமயம் சேர்ந்து துறவியாகிறாள். ஒரு சமயம், கௌதம புத்தரின் சீடர் சாரிபுத்தருடன் நிகழ்ந்த சமய விவாதத்தில் பத்திரை தோற்கிறாள். சாரிபுத்தரின் கட்டளைப்படி பௌத்தத் துறவியாக ஒப்புக் கொள்கிறாள். கௌதம புத்தரைச் சந்தித்து அவர் முன்னிலையில் துறவியாகிறாள். பின் பௌத்த சமயக் கொள்கைகளைப் பரப்புகிறாள்.
உள்ளடக்கம்
குண்டலகேசியில் கிடைத்துள்ள பாடல்களின் பட்டியல்
- கடவுள் வாழ்த்து
- அவையடக்கம்
- தூய மனம்
- பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது
- யாக்கை நிலையாமை
- இரக்கமில்லாத கூற்றுவன்
- பல நிலைகளைக் கடக்கும் சரீரம்
- நிலையில்லா வாழ்க்கை
- ஊனுடம்பின் இழிவு
- மன்னனைப் போற்றுதல்
- குற்றப்படாத வண்ணம் காத்தல்
- குண்டலகேசி பாடிய பாடல்கள்
குண்டலகேசிப் பாடல்கள்
குண்டலகேசியில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் விருத்தப்பாவில் அமைந்துள்ளன. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை போன்றவை பற்றி வலியுறுத்திக் கூறுகின்றன.
பிறர் இறப்பைக் கண்டு அழுபவர்களைப் பார்த்து, நாதகுத்தனார்,
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ
- என்று வினா எழுப்புகிறார்.
குண்டலகேசிப் பாடல்கள் இலக்கியச் சிறப்பும் நயமும் கொண்டிருப்பதுடன், உவமை நயமும், சொல்லாட்சியும் கொண்டவையாக உள்ளன.
உசாத்துணை
- குண்டலகேசி: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- குண்டலகேசி: சென்னை நூலகம்
- குண்டலகேசி: சில குறிப்புகள்: வளவ துரையன்
- குண்டலகேசி: உரையும் விளக்கமும்
- குண்டலகேசியின் கதை
- களஞ்சியம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.