first review completed

இராவுத்தர் சாகிப் (வலி): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 29: Line 29:
* இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்- அப்துற் றகீம்
* இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்- அப்துற் றகீம்


{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:39, 10 February 2022

இராவுத்தர் சாகிப் தர்கா, கோட்டைப்பட்டினம்

இராவுத்தர் சாஹிபு (வலி) (மறைவு: பொ.யு. 1613) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினத்தில் அடங்கப் பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி.

பிறப்பு, இளமை

ஹாஸன்(ரலி) அவர்களின் வழியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்) அவர்களின் மகனாகிய அப்துல் அஸீஸின் வழித் தோன்றலாகப் பிறந்தவர். இவர்களின் பாட்டனார் ஸையிது அலிய்யுல் மதனீ அரபு நாட்டிலிருந்து மதுரை வந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார். அங்கு ‘காஜி’ (நீதிபதி)யாகவும் பணியாற்றினார். அவர்களின் மகனார் ஸையிது அஸீஸ் ஷேர்கான் படைத்தளபதியாகப் பணியாற்றினார். ஸையீது அஸீஸ் ஷேர்கானின் மகனாக மதுரையில் பிறந்த இவருடைய இயற்பெயர் ஸையிது முஹம்மது.

போருக்குச்சென்ற ஷேர்கான் தம் மகளையும் மகன் ஸையிது முஹம்மதுவையும் மதுரையில் வாழ்ந்த ஒரு துணி வணிகரிடம் ஒப்படைத்து விட்டுச்சென்றார். போரில் இறந்த அவருடைய அடக்கத்தலம் கடலூரில் உள்ளது. ஸையிது முஹம்மதுவும் தம் தந்தை போன்று படையில் பணியாற்றி ‘கிலேதார் ஹஸீன்’ என்னும் பட்டம் பெற்றார். போருக்குப் பின் மதுரை வந்தபோது தன் தங்கையையும் வளர்ப்பு மகளையும் தேடி கண்டடைய முடியாமல் தொண்டி சென்றார். அங்கிருந்து கோட்டைப்பட்டினம் சென்று குச்சி மசூதிக்குக் கீழ்புறத்தில் குடிசை ஒன்று அமைத்து அங்கேயே தங்கினார், தன் குதிரையை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு உப்புக்கருவாடு வணிகம் செய்யத் துவங்கினர். ஆகவே இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்.

தனிவாழ்க்கை

இவர் கோட்டைப்பட்டனத்தில் வாழ்ந்து வந்த செல்வர் மாப்பி லெப்பை மரைக்காயரின் மகளை மணமுடிக்க விரும்பியபொழுது பக்கிரிக்கு மகளை கொடுக்கமுடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.  பின்னர் சில நாட்களில் அப்பெண் பாம்பு கடித்து இறந்துவிட்டாள். அவருடைய அடுத்த மகள் ஷைகம்மாளுக்கு மேகநீர் நோய் பல்லாண்டுகளாக இருந்ததென்றும் ராவுத்தர் தண்ணீர் ஓதிக்கொடுக்க அவர் நலன் பெற்றாரென்றும் அவரை இவருக்கு மாப்பி லெப்பை மரைக்காயர் மணமுடித்து வைத்தார் என்றும் அத்திருமணத்தின் மூலம் இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் பிறந்தனரென்றும் சொல்லப்படுகிறது. மூத்தவர் பெயர் ஸையிது லெப்பை ஆலிம் , இளையவர் பெயர் அஹ்மது லெப்பை என்ற ‘தடிக்கம்பு ஆலிம் சாகிபு’ .

இவருக்கு காயல்பட்டினம் சுலைமான் வலி அவர்களுக்கும், திருமங்கலக்குடி அபூபக்கர் வலி அவர்களுக்கும் காயல்பட்டினத்தில் வைத்து ஸையிது அஹ்மது ஜலாலுத்தீன் பக்தாதி அவர்களால் ‘முரீது’ வழங்கப்பட்டது.

தொன்மம்

இவர் குர்ஆன் ஓதுவதில் பிழை உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தபோது அதைச் சோதித்தறிய வந்த இரண்டு ஆலிம்கள் இவரைக் கண்டு இவர் ஓதுவது பிழை என மதிப்பிட்டுவிட்டு குளத்திற்குச் சென்று குளித்துவிட்டுக் கரையேறும்பொழுது கரையில் ஒரு புலி வாயைப் பிளந்த வண்ணம் நின்றதைக் கண்டனர். அவ்வழியே வந்த இராவுத்தர் சாகிபு அலி அவர்களின் காலில் அது பணிந்தது. அவர் அதனிடம் காட்டுக்குச் செல்லும்படிச் சொல்ல அது திரும்பிச்சென்றது. ‘நான் குரானின் ஒரு வரியைச் சொல்லி ஆணையிட்டேன். நீங்கள் குரானின் எழுத்தை மட்டும் பார்ப்பவர்கள். நான் அதன் மெய்ஞானத்தை அறிந்தவன். குரான் சொற்கள் நாவில் உயிர்பெற்றால் அது இறைவனின் ஆணையாகவே இருக்கும். எல்லா உயிர்களும் அதற்கு பணியும்’ என்றார்

அந்த இரு ஆலிம்களும் இவரை ‘அலல் ஹம்துலில் முன்ஸியில் காதிரி’ என்னும் ‘பைத்’தை இயற்றினர். அந்த பைத்’து ‘மஜ் மூவுல் மஸ்தானியா பி மதாஹின் நைனவிய்யா’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

ஒருநாள் இவருக்கு ‘நாளை உம்மிடம் இரு பெண்கள் வருவர். அவர்களில் பின்னால் வருபவளை மணமுடித்துக் கொள்ளும்!’ என்று சொல்உதிப்பு (இல்ஹாம்) தோன்றியது.அடுத்தநாள் வந்த இரு பெண்களில் பின்னால் வந்தவரை இவர்கள் மணமுடித்தார். அப்பெண் நாகூரைச் சேர்ந்த மைமூனா. அவருக்குப் பிறந்தவர் நெய்னா முஹம்மது வலியுல்லாஹ்.

தன் மகன் நெய்னா முஹம்மதுவை அழைத்துக்கொண்டு இவர் காயல்பட்டினம் சென்று சுலைமான் வலி அவர்களையும் அவர்களின் மகன் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களையும் கண்டு வந்தார்.

மறைவு

கோட்டைப்பட்டினத்திலேயே வாழ்ந்துவந்த இவர் ஹிஜ்ரி 1083 ஸபர் பிறை 15-ல் அங்கேயே இறப்பெய்தி நல்லடக்கம் செய்யப்பட்டார். (பொ.யு. 1613) ஒவ்வோராண்டும் ஸபர் பிறை 15 ல் அங்கு கந்தூரி விழா நடந்துவருகிறது.   

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.