under review

கூகை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 30: Line 30:
*[https://raja-rajendran.blogspot.com/2014/04/blog-post_23.html கூகை நாவல் மதிப்புரை: ராஜ ராஜேந்திரன்]
*[https://raja-rajendran.blogspot.com/2014/04/blog-post_23.html கூகை நாவல் மதிப்புரை: ராஜ ராஜேந்திரன்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|26-Jul-2026, 07:35:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:43, 27 July 2026

கூகை

கூகை (2004) சோ. தர்மன் எழுதிய நாவல். சோ.தர்மனின் இரண்டாவது நாவல் இது. அவர் எழுதிய நாவல்களில் முதன்மையானது என விமர்சகர்களால் கருதப்படுகிறது.

எழுத்து ,வெளியீடு

சோ.தர்மனின் இரண்டாவது நாவல் இது. 2004-ல் இதை அவர் எழுதினார். முதல் பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது

கதைச்சுருக்கம்

ஒடுக்கப்பட்டவர்களுக்காக கூகை குறியீடாகிறது. கூகைக்கு பகலில் கண்தெரியாது. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும். அந்த குறியீட்டைக் கொண்டு இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது.

ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள்.

சீனிக்கிழவன் கதையின் மையக்கதாபாத்திரம் .அவனுக்கு கூகை தெய்வமாக இருக்கிறான். பள்ளர்குடிக்கு சீனிக்கிழவன் காவலனாக இருக்கிறான். பழைய நிலவுடைமையாளர்கள் விவசாய நிலங்களை கைவிட்டுச்ச் செல்கையில் பள்ளர்களிடம் நிலம் வந்து சேர்கிறது. அவர்கள் அதை காக்கும்பொருட்டு போராடுகிறார்கள். அப்புச்சுப்பனும் அவன் மகனும் நிலத்தின் பொருட்டு அடக்குமுறைகளை எதிர்க்கிறார்கள். பின்னர் ஊருக்குள் மதப்பூசலும் பிளவும் உருவாக கூகைச்சாமி ஊரைக் கைவிடுகிறது.மெல்லமெல்ல நிலம் பள்ளர்களாலும் கைவிடப்பட்டு அவர்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லத் தொடங்குகிறார்கள்.

விருதுகள்

2005-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதைப் பெற்றது

இலக்கிய இடம்

கூகை இரண்டு வகையில் தமிழில் அதிகம் பேசப்படும் நாவலாக ஆகியது. கி.ராஜநாராயணன் எழுத்துக்கள் வழியாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்த உயிர்த்துடிப்பான கரிசல் நிலத்துக் கிராமத்தின் நேர் எதிரான ஒரு சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, நிலத்துக்கான போர் மற்றும் கைவிடப்பட்டு தரிசாகும் நிலங்களின் கதை இது. கூகை என்னும் உருவகம் வழியாக ஒடுங்கி இருட்டில் இருக்கும் சமூகம் தனது காலம் வந்தது என்று சீற்றம் கொண்டு எழுவதன் சித்திரத்தையும் இந்நாவல் உருவாக்குகிறது.

இந்நாவல் தமிழில் உள்ள வழக்கமான அரசியல் சித்தரிப்புகளுக்கு மாறாக உண்மையான சமூக வரலாற்றுச் சித்தரிப்பை அளிக்கிறது. கிராமங்களில் பிராமணர் முதலிய முதல்கட்ட சாதிகள் பள்ளர்கள் போன்றவர்களிடம் சற்று கரிசனையுடன் இருக்க இடைநிலைச்சாதியினரான நிலவுடைமையாளர்கள்தான் கடுமையான அடக்குமுறையுடன் செயல்படுகிறார்கள். இந்த நாவலில் நடராஜ ஐயர் என்பவர் பள்ளர்களுக்கு நிலத்தை வழங்குகிறார் என எழுதியிருந்தது பிராமணர்களுக்கு ஆதரவான சித்தரிப்பு என சோ.தர்மன் விமர்சிக்கப்பட்டார்.

சாதிய ஒடுக்குமுறையை சித்தரிக்கும் தமிழ்நாவல்கள் ஏறத்தாழ அனைத்துமே யதார்த்தவாத எல்லைக்குள் நிற்பவை. உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்துதல் என்னும் இலக்கிய உத்தியை கடைப்பிடிப்பவை. கூகை வலுவான ஒரு மையப்படிமத்தையும், அதையொட்டிய மாயஉலகம் ஒன்றையும் அந்த யதார்த்தச் சித்தரிப்புக்கு மேலாக உருவாக்குகிறது. அதுவே இந்நாவலைத் தனித்து நிறுத்துகிது.

கூகை ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடையாளமான ஓரு படிமமாக இந்நாவலுக்குப்பின் மாறியது. பா.ரஞ்சித் முன்னெடுப்பில் தலித் கலாச்சார மையம் ஒன்று உருவாக்கப்பட்டபோது அதற்கு கூகை என்று பெயரிடப்பட்டது.

மொழியாக்கம்

  • The Owl- Oxford University Press, India
  • மூங்ங - மலையாளம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 07:35:41 IST