under review

அப்பம் வடை தயிர் சாதம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Removed Category:Spc)
 
Line 23: Line 23:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:37, 8 January 2026

To read the article in English: Appam Vadai Thayir Sadam. ‎

அப்பம் வடை தயிர்சாதம்

அப்பம் வடை தயிர்சாதம் (2000) பாலகுமாரன் எழுதிய நாவல். ஒரு பிராமணக்குடும்பத்தின் தலைமுறைகள் தோறும் நிகழும் வளர்ச்சி வீழ்ச்சியை சித்தரிப்பது.

எழுத்து உருவாக்கம்

பாலகுமாரன் எழுதி 2000-த்தில் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த தொடர்கதை பின்னாளில் நூல்வடிவமாகியது

கதைச்சுருக்கம்

மகாதேவனின் மகன் ஷங்கர் அமெரிக்காவில் வேலை கிடைத்து செல்லப்போகும்போது தன் குடும்பக்கதையை திரும்பிப் பார்க்கிறான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வைதிகத்தொழில் மதிப்பையும் வருமானத்தையும் தராமலாகும்போது சாம்பசிவ சாஸ்திரி தன் மாப்பிள்ளை விஸ்வநாதன் மற்றும் மகன் சதாசிவனுடன் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் அனுமதி வாங்கி காலையும் மாலையும் அப்பம் வடை தயிர்சாதம் விற்கத் துவங்குகிறார். பின்னர் சதாசிவம் மாயவரத்தில் 'சங்கரபவன்' திறக்கிறார். விஸ்வநாதனும் சாம்பசிவ சாஸ்திரியும் சென்னையில் ஹோட்டல் திறக்கிறார்கள். சதாசிவன் மாயவரம் ஹோட்டலை கவனித்துக் கொண்டு பிள்ளை வைத்தீஸ்வரனை மட்டும் சென்னைக்கு பெரியவர்களுடன் அனுப்புகிறார். வைத்தீஸ்வரன் எம்.ஏ படித்துவிட்டு சென்னை கோட்டையில் குமாஸ்தாவாகச் சேர்கிறார். அவருடைய மூத்தமகன் நீலகண்டன், பம்பாயில் ஒரு நெதர்லாந்து கப்பல் முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்து பின் சொந்தக் கப்பல் வாங்கி உயர்கிறார். பின் அவருடைய மகன் மகாதேவன், வளைகுடாவுக்குச் சென்று செல்வந்தராகிறார். மகாதேவனின் மகன்தான் சங்கர். அக்குடும்பம் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பொருளியல் முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறது. அப்பம் வடை தயிர்சாதம் விற்பது குலசாமிக்கு மொட்டை போடுவது போல ஒரு வேண்டுதலாக அக்குடும்பத்தில் நீடிக்கிறது.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புச் சூழலுக்காக எழுதப்பட்டாலும் இந்நாவல் அத்தகைய கதைகளுக்குரிய கதையோட்டம், திருப்பங்கள், உணர்ச்சிகட்டங்கள் ஏதுமில்லாமல் ஒரு சுருக்கமான குடும்பவரலாறாக செல்கிறது. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் தமிழகத்து பிராமணர்களிடம் உருவான சில மனநிலைகளை மிகக்கூர்மையாக காட்டுவதென்பதனால் இலக்கிய இடம் கொண்டது. அவர்கள் மண்ணுடன், ஊருடன் நீங்காத உறவும் பற்றும் கொண்டிருப்பது தேவையில்லை என்னும் முடிவை எடுக்கிறார்கள். மாயவரம், சென்னை, மும்பை, வளைகுடா, அமெரிக்கா என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நகர்ந்துகொண்டே இருக்கையில் எவற்றை தக்கவைக்கவேண்டும், எவற்றை விட்டுவிடவேண்டும் என ஒரு விவாதம் சாம்பசிவ சாஸ்திரி முதல் ஷங்கர் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்தகாலத்து நினைவுத் தொடர்புகள் முன்னேறுவதற்குத் தடையானவை என்று சாம்பசிவ சாஸ்திரிகள் சொல்லும் வரியே இந்நாவலின் மையக்கருத்து. "மண்மேல பாசம் வெச்சவன், மண்ணை விட்டுப் போகக்கூடாது. போறவன், பாசம் வைக்கப்படாது..." என்று அவர் சொல்கிறார்.

ஆனால் பாலகுமாரனின் நாவல்களின் பொதுப்பண்பில் இருந்து விலகி அறிவுரை கூறி தொகுத்துரைத்து முடிவடையாமல் இந்நாவல் ஒரு புதிய நகர்வை கொண்டுள்ளது. அக்குடும்பம் அது துறக்க நினைக்கும் இறந்தகாலத்தை ஒரு சடங்குபோல ஆக்கிக் கொள்கிறது. அச்சடங்கை எங்கும் செய்யமுடியும், அதன்வழியாக அக்கடந்தகாலத்தை சுருக்கி இன்னொன்றாக்கி கையில் வைத்துக்கொள்ளமுடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் செய்துவரும் வழிமுறை அது. பிராமண உளவியலுக்குள் செல்லும் இந்த குறிப்பிட்ட அம்சம் இதை இலக்கியப்படைப்பாக ஆக்குகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:15:38 IST