under review

சிறப்புப் பாயிரம்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(changed template text)
Line 72: Line 72:
* தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
* தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
* பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004
* பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:33, 15 November 2022

சிறப்புப் பாயிரம்: பாயிரம் என்பது நூலுக்கு அளிக்கப்படும் முன்னுரை. சிறப்புப் பாயிரம் என்பது அந்நூல் புகழ்பெற்ற பின்னர் அந்நூலின் தனிச்சிறப்பை வலியுறுத்தும் பொருட்டு பின்னர் வந்த அறிஞர்களால் எழுதப்படுவது. தொல்காப்பியத்திற்கு பானம்பாரனார் எழுதிய சிறப்புப்பாயிரம் கிடைப்பவற்றில் தொன்மையானது

பாயிரம் எழுதத்தக்கவர்கள்

இளம்பூரணர் தனது தொல்காப்பிய உரையில் நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியருடன் உடன் படித்தவர்கள், நூலாசிரியரின் மாணவர்கள் என மூன்று வகையினர் சிறப்புப் பாயிரம் செய்யத் தகுதியுடையவர் என்கிறார். நன்னூல், அந்நூலுக்கு உரை செய்தவர்களும் சிறப்புப் பாயிரம் எழுதலாம் என நான்கு வகையாகக் கூறுகின்றது.

சிறப்புப் பாயிர உறுப்புக்கள்

  • ஆக்கியோன் பெயர்
  • நூல் வந்தவழி
  • நூல் வழங்கும் எல்லை
  • நூலின் பெயர்
  • யாப்பு (தொகுத்து எழுதுதல், விரித்து எழுதுதல், தொகுத்தும் விரித்தும் எழுதுதல், மொழிபெயர்த்து எழுதுதல் போன்ற நூல் ஆக்கும் முறைகளே யாப்பு எனப்படுகின்றது)
  • நூற்பொருள்
  • நூலைக் கேட்பதற்கு உரியவர்கள்
  • நூலைக் கேட்பதால் விளையும் பயன்

ஆகியவற்றைத் தெளிவாக விளக்கவேண்டும் என்று நன்னூல் கூறுகிறது.

  • நூல் செய்த காலம்,
  • நூல் அரங்கேறிய இடம்,
  • நூல் ஏன் செய்யப்பட்டது

போன்ற தகவல்களும் சில நூல்களின் சிறப்புப் பாயிரங்களில் காணப்படுவது உண்டு.

எடுத்துக்காட்டு

சிறப்புப் பாயிரம் ஒன்றில் மேற்கூறிய உறுப்புக்கள் அடங்கியிருக்கும் முறையை நன்னூலின் சிறப்புப் பாயிரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறிந்துகொள்ள முடியும். நன்னூலின் சிறப்புப் பாயிரம் பின்வருமாறு:

"மலர்தலை உலகின் மல்கிருள் அகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீறு
ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் 5
மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத் 10
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் 15
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் 20
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே"

இச் சிறப்புப் பாயிரத்தில், 20. 21, 22-ஆம் வரிகளில் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே என்று, நூலை ஆக்கியோன் பெயர் பவணந்தி என்று அறியத்தருவதுடன், பொன் மதில்களால் சூழப்பட்ட சனகாபுரி என்னும் நகரின் இருக்கும் சன்மதி முனிவன் போன்றவனும், பல அரிய சிறப்புக்களை உடையவனும், பெருந் தவத்தை உடையவனும் என நூலாசிரியரின் சிறப்பையும் கூறுகிறது.

18, 19-ஆம் வரிகளில் காணப்படும் முன்னோர் நூலின் வழியே என்னும் பகுதியின் மூலம் முன்னோர் எழுதிய நூல்களை ஒட்டி இந்நூல் எழுதப்பட்டது என்று நூல் வந்த வழி கூறப்பட்டுள்ளது.

இப் பாயிரத்தின் 8, 9-ஆம் வரிகள், குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் என இந் நூல் வழங்கும் பகுதி, கிழக்கே கிழக்குக் கடல், தெற்கே குமரி, மேற்கே குடக நாடு, வடக்கே திருவேங்கட மலை என்பவற்றிடையே அடங்கும் என அந் நூல்வழங்கும் பகுதியின் எல்லை கூறுகிறது.

19-ஆம் வரியில், நன்னூற் பெயரின் வகுத்தனன் என்பதன் மூலம் நூலின் பெயர் நன்னூல் என்று சிறப்புப் பாயிரம் தெளிவாக்குகிறது.

11-ஆம் வரியில் வரும் தொகைவகை விரியிற் றருகெனத் .... என்னும் தொடர் இந்நூல், தொகுத்தல், வகுத்தல், விரித்தல் என்னும் யாப்பு முறைகளுக்கு அமைவாக ஆக்கப்பட்டதை விளக்குகிறது.

10-ஆம் வரியில் அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணர..... என்று குறிப்பிடுவதன் மூலம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்துவகையான இலக்கணங்களே இந் நூலின் நூற்பொருள் எனச் சிறப்புப்பாயிரம் தெளிவாக்குகின்றது.

10-ஆம் வரியில் நூலைக் கேட்பதற்கு உரியவர்கள் யார் என்பதற்கு விடையாக எல்லோரும் அறிந்துகொள்ளும் படியாக என்னும் பொருளில் யாவரும் உணர என்று பாயிரத்தில் கூறியிருப்பினும், நன்னூல் உரைகளில், முன்னரே நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையோரே நூலின் கூறப்பட்டிருப்பவற்றைப் புரிந்துகொள்ள முடியும் ஆதலால், அத்தகைய ஆராய்ச்சி உடையோரே இந்நூலைக் கேட்பதற்கு உரியவர்கள் என்கின்றன.

முன்னர் கூறிய 10-ஆம் வரியில் உள்ள அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணர என்னும் தொடர்மூலம் முன்னரே குறிப்பிட்ட தமிழ் மொழியின் ஐந்து இலக்கணங்களையும் உணர்வதே இந்த நூல் கேட்பதால் விளையும் பயன் என்பது விளங்குகிறது.

16, 17, 18-ஆம் வரிகளில் காணப்படும் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக ... என்னும் தொடரின் மூலம், இந்நூல் சீயகங்கன் என்னும் மன்னன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாவதால், நூல் செய்த காலம் சீயகங்கனின் காலம் என்பதும், நூல் செய்த காரணம் சீயகங்கன் கேட்டுக்கொண்டதே என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அத்துடன் நூல் அரங்கேறிய இடம் சீயகங்கனின் அவை எனவும் உணரலாம்.

உசாத்துணை

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு)
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004


✅Finalised Page