under review

தேரூர்ந்த சோழன் யட்ச கானம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected the links to Disambiguation page)
 
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=யட்ச|DisambPageTitle=[[யட்ச (பெயர் பட்டியல்)]]}}
[[File:Therurntha Cholan Yatcha Ganam.jpg|thumb|தேரூர்ந்த சோழன் யட்ச கானம் ]]
[[File:Therurntha Cholan Yatcha Ganam.jpg|thumb|தேரூர்ந்த சோழன் யட்ச கானம் ]]



Latest revision as of 18:25, 27 September 2024

யட்ச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: யட்ச (பெயர் பட்டியல்)
தேரூர்ந்த சோழன் யட்ச கானம்

தேரூர்ந்த சோழன் யட்ச கானம் (1997) மனுநீதி சோழனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாக அறியப்படுகிறது.

வெளியீடு

ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை நூல்களாகப் பதிப்பித்தது. அவ்வகையில் பதிப்பித்த யட்சகான ஓலைச்சுவடிகளில் தேரூர்ந்த சோழன் யட்ச கானமும் ஒன்று. 1997-ல். வெளியான இந்நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். பொதுப் பதிப்பாசிரியர்கள்கள் டாக்டர் ஷூஹிகோசகா, டாக்டர் ஜி. ஜான் சாமுவேல். தமிழ்ப் பதிப்போடு ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைந்து இந்நூல் வெளியானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி. எஸ். பாலகிருஷ்ணன்.

இந்நூலின் காலம் பற்றி அறிய இயலவில்லை. இந்நூலை எழுதியவர் திருவலம் நகரைச் சேர்ந்த வீரசைவகுல ஆதி மகத்தையன் என்பது சுவடி மூலம் அறியப்படுகிறது.

நூல் அமைப்பு

தேரூர்ந்த சோழன் யட்ச கானம் நூலில் 135 பாடல்களும் 39 வசனங்களும் இடம் பெற்றன. நூலின் ஐந்தாவது பாடல் தொடங்கி அனைத்துப் பாடல்களுக்கும் தாளமும், பாவகையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

135 பாடல்களுள் ஒன்பதாம் பாடல் ஒன்று மட்டுமே அடதாளத்திலானது. பிறவற்றுள் ஏகதாளத்தில் 2 பாடல்களும், சம்பையில் 33 பாடல்களும் இடம்பெறுகின்றன. திரிபுடையில் அமைந்தவை 26 பாடல்கள், பிற 50 பாடல்களும் பாடல் நடையை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. திபதை - 25, சிந்துவகை - 15, தருவகை - 4, கந்தபத்தியம் - 2. அர்த்த சந்திரிகை - 1 கலித்துறை - 1, கலிவிருத்தம் - 1, கடவுள் வணக்கப்பாடல் - 1 என்னும் வகைகளில் 50 பாடல்களும் அமைந்துள்ளன.

தேரூர்ந்த சோழன் யட்ச கானம் நூலின் தொடக்கத்தில் விநாயகர், முருகப்பெருமான், சிவன், பார்வதி, கலைமகள் குறித்த துதிகள் இடம்பெற்றன. தொடர்ந்து பாடலும் இசைக்குறிப்புகளும், வசனமும் கலந்து இடம்பெறுகின்றன.

பாடல் நடை

திருவாரூர்ச் சிறப்பு

முக்கண் விநாயக மூர்த்தி தயாநிதி
திக்கதிக மான திருவா ரூரே
மூவருந் தொழுமுதல் மூர்த்தி கயிலைமலைத்
தேவ னவதரித்த திருவா ரூரே
புற்றிட மான பராந்தக னதிகிருபைச்
சித்தந் தரித்திருக்குந் திருவா ரூரே
பாரினிலே யன்பர் பாவகர் மாதியைச்
சீரண மாக்கிய திருவா ரூரே
தேவபதி ராசேந் திரசோழ னுக்குமுன்
சிவகதி யருளிய திருவா ரூரே
செம்மையா யரசேநல்ல சதுர்வேதத்தி னால்பல
தெய்வமுங் குடிகொண்ட திருவா ரூரே
கல்வியுண் டாய்சிவ களைகளுண் டாய்வெகு
செல்வமுண் டாகிய திருவா ரூரே
ஆனைகுதிரை சிவிகை கன்னித் தேரொடு
சேனை யதிகமுள்ள திருவா ரூரே
நரபதி யாகிய ராசேந்திர னென்றுர
திரபதி யாகிய திருவா ரூரே.

சோழ மன்னன் மகன் வீதி விடங்கனைத் தேரேற்றிக் கொல்லுதல்

தேரேறி மன்னவன் சிவனைத் தியானித்துத்
தேரூரும் பாகனைச் சீக்கிரம தென்ன
வீதி விடங்கரை வேந்த ரழைத்துப்
போதுகா ரியமெனப் புகலவே மைந்தன்
நகைமுக மாய நளினம்போல் மலர்ந்து
திசையெட்டும் நோக்கியே தெண்டனிட் டாரூர்க்
குஞ்சர மூர்த்தியைக் கோடித்துப் போற்றி
யஞ்செழுத் தினையுன்னி யாதிசங் கரனைக்
கயிலாச வாசனைக் களிச்சிலோ சனனைப்
பரிவுட னேபரா பரவஸ்து தன்னைத்
திருவருள் பாரென்மேல் தியாகரே யென்றும்
நெடுமா லிணையடி நெஞ்சினி லிறுத்தி
படியளக் கும்பி ராமியைப் போற்றி
யெத்தேவர் களையு மேகமாய் நினைத்து
முத்தேவ ரூபனை முகம்நோக்கிப் பணிந்து
தந்தையே சரணெனத் தான்முடி யிறைஞ்சி
தந்தவ ளுக்குமோர் சரணது கூப்பி
நல்லோர் பெரியவர் நாட்டிலுள் ளோர்கள்
எல்லார்க்கும் வந்தனை யேகமாய்ச் செய்து
வடக்குத் தலையும் தென்வாடைக் கால்நீட்டிப்
படுத்திடும் போதந்தட் பிரசைக ளெல்லாங்
கண்ணிலே நீர்கத கதவென விடுத்துக்
கண்ணைமூ டிக்கொண்டு கனக்கவே யெழுந்து
எவரு மழுதிடு மிசைஎல் லார்க்குஞ்
செவிடுபட் டுள்ளந் திகைத்துமெய் மறக்க
வேதாந்த வேதியர் விஷ்ணு பக்தர்கள்
நாதாந்த நாதியர் ஞானியோ கியர்கள்
நிலைகொலு வாய்நின்று நீலோற் பலத்தில்
பலபலென் றுதிர்த்துப் பரமனே யென்ன
அரனடி யார்களெல் லாருமப் போது
அரஅர அரஅர அரவென்று சொல்ல
நிலவிய வேந்தனும் நிமடீ கரித்து
சலதியாய்ப் பாகனைத் தானேவ வவனும்
நவமணித் தேர்தனை நடத்தவே மைந்தன்
சிவசிவா வென்றுதன் சீவன்விட் டானே

மதிப்பீடு

தேரூர்ந்த சோழன் யட்ச கானம் மனுநீதிச் சோழனின் வரலாற்றை இசைப் பாடல் வடிவில் வசனம் கலந்து கூறும் குறிப்பித்தகுந்த யட்சகான நூலாக அறியப்படுகிறது. நாடக வடிவிற்கேற்ப இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட யட்சகான நூல்களுள் தேரூர்ந்த சோழன் யட்ச கானமும் ஒன்று.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 17:52:05 IST