சாரங்கதரன் யட்சகானம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected typo errors in article) |
||
| Line 73: | Line 73: | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekJty#book1/ சாரங்கதரன் யட்சகானம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்] | *[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekJty#book1/ சாரங்கதரன் யட்சகானம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|13-Jul-2024, 09:19:57 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 09:29, 13 July 2024
சாரங்கதரன் யட்சகானம் (முதல் பதிப்பு: 1996), சாரங்கதரன் என்னும் இளவரசனின் வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாக அறியப்படுகிறது.
வெளியீடு
ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை நூல்களாகப் பதிப்பித்தது. அவ்வகையில் பதிப்பித்த யட்சகான ஓலைச்சுவடிகளில் சாரங்கதரன் யட்சகானமும் ஒன்று. மார்ச் 1996-ல் வெளியான இந்நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். பொதுப் பதிப்பாசிரியர்கள் டாக்டர் ஷூஹிகோசகா, டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்.
தமிழ்ப்பதிப்போடு ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைந்து இந்நூல் வெளியானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி. எஸ். பாலகிருஷ்ணன்.
இந்நூலின் ஆசிரியர் பெயர், இயற்றப்பட்ட காலம் போன்றவற்றை முழுமையாக அறிய இயலவில்லை.
நூல் அமைப்பு
சாரங்கதரன் யட்சகானம் நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. அவையடக்கத்தைத் தொடர்ந்து 174 பாடல்களில் சாரங்கதரனின் கதை கூறப்படுகிறது. நூலில் இபதை, கந்தபத்தியம், தரு, வசனம், சிந்து போன்ற நடைகளும் ஏகதாளம், சம்பை, திரிபுடை, போன்ற தாள அமைப்புகளுடம் இடம் பெற்றன.
நூலின் 174 பாடல்களில் அட தாளத்தில் ஒரு பாடலும், ஏக தாளத்தில் 19 பாடல்களும், சம்பையில் 64 பாடல்களும், திரிபுடையில் 31 பாடல்களுமாக 115 பாடல்கள் தாள அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எஞ்சிய 59 பாடல்களில் அர்த்தசந்திரிகை - 6, கத்த பத்தியம் - 2, குறளடித்தரு - 1, சிந்து - 6, தரு - 4, திபதை - 38, வெண்பா - 1, என 58 பாடல்கள் அமைந்துள்ளன. இறுதியில் உள்ள 174-ம் பாடல் மங்கள வாழ்த்தாக நிறைவடைகிறது.
உள்ளடக்கம்
சாரங்கதரன் யட்சகானம் நூலில் சாரங்கதரனின் கதை இசை நாடக வடிவில் இடம் பெற்றது. ”இராசமகேந்திரபுரம் என்னும் நகரத்தின் அரசன் இராசநரேந்திரன். அரசமாதேவி இரத்தினாங்கி; குழந்தைச் செல்வம் இல்லாது வருந்திய மன்னன் சான்றோர் அறிவுரைப்படி பலகாலம் தவம் செய்தான். இறையருளால் அரசமாதேவி இரத்தினாங்கிக்கு மகனாகப் பிறந்தவனே சாரங்கதரன்.
சாரங்கதரனுக்குப் பருவம் வந்ததும் அவனுக்குத் தகுந்த பெண்ணைத் தேடிய மன்னன், தன் மகனுக்குப் பார்த்த சித்திராங்கி என்பவளின் அழகில் மயங்கி அவளை இரண்டாம் மனைவியாக மணம் செய்துகொண்டான். நாளடைவில் இளைய மனைவியின் மோகவலையில் சிக்கினான். சாரங்கதரன் போட்டியில் பறக்கவிட்ட புறா ஒன்று சித்திராங்கியின் அரண்மனைக்குச் செல்ல, அதை மீட்டு வர சாரங்கதரன் சென்றான். அவனிடம் மகன் என்ற முறைமையை உதறி சித்திராங்கி காதல் மொழி பேசினாள். சாரங்கதரன் அவளுக்கு அறிவுரைகள் கூறி, வெறுத்து ஒதுக்கிவிட்டுச் சென்றான்.
தன்னை நாடி வந்த அரசன் இராசநரேந்திரனிடம், சாரங்கதரன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகச் சித்திராங்கி சொன்னாள். அதனால் கோபமுற்ற மன்னன் சாரங்கதரனின் கை, கால்களை வெட்டச் சொன்னான். அமைச்சா் முதலான சான்றோரின் அறிவுரைகளும் பிறசாட்சியங்களும் இளையவள் மோகத்துக்கு முன் தோல்வியடைந்தன. சாரங்கதரனின் கை, கால்கள் வெட்டப்பட்டன. மனம் வருந்தி அழுத அவன் முன் ஆகாசவாணி தோன்றி இந்த நிகழ்வுக்குக் காரணமான அவன் முற்பிறப்பைப் பற்றிக் கூறினாள். சித்தர் தோன்றி சாரங்கதரனுக்கு மீண்டும் கை, கால்கள் தோன்றச் செய்தார். சாரங்கதரனுக்கு தெய்வ உரு சித்தித்தது.
நாளடைவில் இளையவளின் சூழ்ச்சிகள் வெளிப்பட்டபின் மன்னன் அவளைக் கொன்றான். கானகம் சென்று மகனைத் தேடினான். சித்தரின் உதவியால் சாரங்கதரனைச் சந்தித்தான். சாரங்கதரன், தான் சிரஞ்சிவி ஆன செய்தியைச் சொல்லிப் பெற்றோரை வணங்கி மறைந்தான். இழந்த மகனை மீண்டும் அடைய முடியாத மன்னன், தற்கொலைக்கு முன்றான். பின் அமைச்சனால் மீண்டு அமைச்சனையே மகனாக ஏற்று ஆட்சி புரிந்தான்” – இதுவே சாரங்கதரன் யட்சகானம் நூலின் கதை.
பாடல் நடை
சாரங்கதரன் சித்திராங்கியிடம் வேண்டுதல்
அம்மா யீதென்ன பாபம்
என்மேல் விரக தாபம்
சும்மா யிரேன் இது தோஷம் தோஷம்
நெஞ்சில் நினைத்து இழைத்த
வெஞ்சொல் சொல்லவே பாவம்
கொஞ்ச மல்லவே சொல்லிக் கொள்ளப் போமோ
பிள்ளை யுடனே இந்த
பொள்ளு வசனஞ் சொல்லிக்
கொள்ள வுனக்குமனங் கொண்டு தோதான
மைந்தன்மேல் தயை பண்ணி
மன்னிப் புறா வை யம்மா
சிந்தனை பண்ணவேண்டாம் சிறிய தாயே
சித்தரின் தோற்றமும் கேள்வியும்
மேலணிந்த விபூதி குங்கும வேட்டி
கையிற் கமண்டலந் தெண்டு
கோலும் உதரபந் தனமும் தரித்து
இந்தக் கோல மாக
மார்பிலே ருத்திராட்ச மாலையும் வண்ணமும்
புலித்தோ லுரித்து உயர
சீர்பிறங்கும் பிரகாசி னாலிரு திசையும்
மின்ன வந்து தோன்றினர் சித்தா்
சாரங்கன் வாய்திறந் தழஉற்றுப்
பார்த்தவர் இந்த அடவியி
லார்பிள்ளாய் உனக் கேதிது துயரம்?
ஊரேது சேர்ந்தகிளை உறவேது நின்னுடைய
பேரேது கீர்த்திபுகழ் பெருமைவள மேது
துரைமகனைப் போல்வடிவம் தோன்றுதே நினதுகால்
கரமுமரி படவந்த காரிய மென்ன?
வடிவுந் துரிதவசன வல்லமையும் பாராமல்
பிடிவாத மாய்ப்பிடித்துப் பின்னஞ்செய் தவராரர்?
துன்பமெய்து வோர்க்கவை துணிந்துநீ செய்தாலும்
முன்பின்எண் ணாமலுன்னை முனையழிகத் தவராரார்?
தன்னிலே தானழுது தரைமீது புரண்டிடவும்
உன்னையிப் படிகானி லூனஞ்செய் தவராரார்?
அபயமநி யாயமென் றவரா்க்காக் கினைசெய்ய
நிபஞ்சொன்ன போர்களார் நீதெரியச் சொல்வாய்
மதிப்பீடு
சாரங்கதரன் யட்சகானம் சாரங்கதரன் இன்னும் இளவரசனின் வரலாற்றை இசைப் பாடல் வடிவில் கூறுகிறது. நடை, தாளம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை நாடக வடிவில் இயற்றப்பட்டுள்ளது. பேச்சு வழக்குச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட யட்சகான நூல்களுள் சாரங்கதரன் யட்சகானம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Jul-2024, 09:19:57 IST