under review

பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Para Added and Edited: Link Created: Proof Checked.)
Line 108: Line 108:


* ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சு. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995
* ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சு. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:19, 11 May 2024

பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை, (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இச்சரிதை இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சு. தாமஸ்.

வெளியீடு

பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை நூல், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சு. தாமஸ்.

நூல் அமைப்பு

பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை மறைபெறு காண்டம், சூழ்வினைக் காண்டம், முடிபெறு காண்டம் என்னும் மூன்று காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 281 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெண்பாக்களால் ஆன இந்நூலில் காப்பு வெண்பாவாக மூன்று பாடல்களும் அவையடக்கமாக ஒரு பாடலும் இடம் பெற்றன.

மறைபெறு காண்டத்தில் நாட்டுச் சிறப்பாக எண்பத்தொன்பது பாடல்களும், சூழ்வினை காண்டத்தில் ஐம்பத்தெட்டு பாடல்களும், முடிபெறு காண்டத்தில் நூற்றி முப்பது பாடல்களும் உள்ளன.

உள்ளடக்கம்

பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை வெண்பா வடிவில் கூறுகிறது. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, அவர் செய்த அற்புதங்கள், அவர் கூறிய நீதி மொழிகள், இயேசுவின் சிலுவைப்பாடு ஆகியன எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

காப்புச் செய்யுள்

சோதித்த காயம்‌ சுமந்து சுவிசேடம்‌
போதிந்த காயப்‌ புரவலனே - சாதித்த
தெய்வ சகாயம்‌ திருச்சரிதை பாடிடவுன்‌
தெய்வ சகாயமருள்‌ செய்‌

மாடப்‌ புறாவுருவ மானான்‌ மறுவற்ற
சீடர்க்‌ குறுதி சிறப்பிப்பான்‌ - ஆடற்
பிழம்பினா வான பெருமான்றன்‌ பாதம்‌
விளம்பினார்க்‌ குண்டோ வினை

விண்ணிற்‌ றனியாளும்‌ வேந்தன்‌ றனையீன்று
பெண்ணிற்‌ சிறந்த பெருந்தேவி - மண்ணிற்‌
கடித்தா மரையன்ன கற்பிலுயர்‌ கன்னி
அடித்தா மரையெற்‌ கரண்‌

இயேசுவைச் சீராட்டுதல்

நாடாள வந்தவர்க்குத்‌ தங்க நகைபூட்டிக்‌
கோடாச்‌ செவியிற்‌ குழையிட்டு - ஈடாரும்‌
இல்லை யிவற்கென்‌ றிறுமாந்‌ திளமதலைச்‌
சொல்லை நயந்திருப்பார்‌ சூழ்ந்து

அத்தைமார்‌ தோள்மேல்‌ அமர்த்தி விளையாடி
முத்தங்‌ கொடுத்து முறைகாட்டி - இத்ததியென்‌
பெண்ணாள வந்ததொரு பிள்ளை யிவனென்பார்‌
கண்ணாலம்‌ பேசிக்‌ களித்து

ஐயாவே யென்பர்‌ அடியார் அழகுடைய
பையா வருகென்பர்‌ பக்கத்தார்‌ - மெய்யாகத்‌
திட்டிபடு மென்பர்‌ தெருவில்‌ விடேலென்பர்‌
கட்டிக்‌ கரும்பானைக்‌ கண்டு

கருவிற்‌ நிருவம்‌ கலையும்‌ கவினார்‌
உருவிற்‌ பொலிவும்‌ உயரப்‌ - பெருவானில்‌
நந்தாப்‌ பிறைபோலும்‌ நாளும்‌ வளர்ந்திட்டான்‌
சிந்தாமணியன்ன சேய்

இயேசுவின் சிறப்புகள்

தன்னைப்‌ புகழான்‌ தருக்கான்‌ பிறன்றார
மின்னை விரும்பான்‌ மெலிவுற்றோர்‌ - தன்னை
அவமதியா னெல்லாம்‌ அவன்‌ செயலென்‌ றெண்ணும்‌
நவமதியான்‌ வாழ்கின்ற நாள்‌

சொல்லுங்‌ கணநாதர்‌ சூழ்ந்து துதிபாட
வல்ல பரன்றான்‌ வதிகின்ற நல்லவையின்‌
கண்ணின்றான்‌ வன்னரகம்‌ காக்கும்‌ கடித்தலைவன்‌
விண்ணின்றான்‌ கண்டான்‌ வெகுண்டு

பூண்ட மணிமார்பன் பொன்போன்ற மேனியினான்
நீண்ட வரைபோல் நிமிர்தோளான் - ஈண்டுந்
திடந்தான் புகுநெஞ்சிற் றீரன் தனிம
குடந்தான் புனையாத கோ

செய்ய திருவடியான் செந்தா மரைக்கண்ணான்
துய்ய மனத்தான் தொலையாத மெய்யன்பு
பூண்ட கருணையினான் பொய்யாத நாவுடையான்
ஆண்ட குணத்தின் அரசு

இயேசுவின் பெருமைகள்

ஆடவரும் பெண்மை யவாவும் திருவுடனே
தேடவரும் கல்வித் திருவந்து - கூடுதலால்
மிக்கா ரவற்கில்லை மேலோன் அருள்பெற்ற
தக்காருக் குண்டோ தரம்

பொன்னின் மலர்க்குப் புதுமணமும் வந்துற்றா
லன்ன செயல்போல் அரசாங்கம் - மன்னியே
தாழ்வில் அதிகாரம் தாங்கினான் தன்செல்வ
வாழ்வில் குறையா வளன்

வகுத்த பொருள்பலவும் வண்மையாற் றோடிப்
பகுத்துண் டறியாதான் பாங்கர் - தொகுத்த
அறம்போலும் நீங்கிற்றே யன்புடையார் நெஞ்சில்
திறம்போ லுயர்ந்த திரு

ஊசிப் புழையினிலோர் ஓட்டை நுழைந்திடினும்
ஆசித்த செல்வர்க் கரிதாகும் - பூசித்த
விண்ணுலக மென்றே விளம்புதுகா ணென்றென்றும்
மண்ணுலகோர் மெச்சும் மறை

வாடும்‌ தவத்தால்‌ வறுமையால்‌ கற்புநெறி
கூடும்‌ செபத்தால்‌ குருதியினால்‌ - பாடுற்ற
துன்பத்தா லன்றிச்‌ சார்வாழ்‌ பரலோகம்‌
இன்பத்தால்‌ பெற்றார்‌ எவர்‌?

மதிப்பீடு

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பலர் பல விதங்களில் பாடியுள்ளனர். அவற்றுள் எளிய தமிழில் பாடப்பட்ட நூலாகவும், குறிப்பிடத்தகுந்த சரிதை நூலாகவும், பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சு. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.