under review

தேவவரம் புத்தூல்ப்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 60: Line 60:
* [https://mylaudycsichurch.blogspot.com/2011/01/ மைலாடி சர்ச் இணையப்பக்கம்]
* [https://mylaudycsichurch.blogspot.com/2011/01/ மைலாடி சர்ச் இணையப்பக்கம்]
*
*
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|14-Jun-2023, 09:21:21 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள்]]

Latest revision as of 13:51, 13 June 2024

தேவவரம் புத்தூல்ப் (1802- டிசம்பர் 28, 1874) (தேவவரம் முன்ஷி, தேவவரம் பிடல்ப்) கிறிஸ்தவக் கவிஞர், இறையியலாளர். குமரிமாவட்டம் மைலாடியைச் சேர்ந்தவர். முதல் சீர்திருத்த கிறிஸ்தவரான வேதமாணிக்கம் குடுபத்தில் பிறந்தவர். ரெவெ. சார்ல்ஸ் மீட்டுக்கு அணுக்கமானவர்.

பிறப்பு, கல்வி

தேவவரம் மைலாடியில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகாராஜன் வேதமாணிக்கம் குடும்பத்தில் பிறந்தார். வேதமாணிக்கத்தின் தம்பி சிவனன் ரிங்கல்தௌபே முயற்சியால் மதம் மாறி ஞானாபரணம் ஆனார். அவர் மனைவி ஞானாயி ஆக மதம் மாறினார். அவர்களின் மகனாக 1802-ம் ஆண்டு பிறந்தார். புத்தூல்ப் என்பது கிறிஸ்தவ ஞானத்தகப்பனின் பெயர்.

தேவவரம் 1809-ம் ஆண்டு போதகர் ரிங்கல்தௌபே முதன் முதலாக மயிலாடியில் தொடங்கிய ஆங்கிலப் பாடசாலையில் பயின்றார். 1819-ம் ஆண்டு நாகர்கோவிலில் சார்ல்ஸ் மீட் தொடங்கிய இறையியல் பள்ளியில், அது தொடங்கப்பட்ட ஆண்டில் படித்த மாணவர்களுள் தேவவரமும் ஒருவர். இறையியல் மற்றும் ஆங்கிலக்கல்விக்காக தேவவரம் தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களுக்குச் செல்ல மீட் உதவினார் . ஜான் பால்மர் தமிழ் கற்றுக்கொண்ட திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் தேவவரமும் தமிழ் கற்றார்.

தனிவாழ்க்கை

தேவவரம் சென்னையில் படிப்பை முடித்த பின் சார்ல்ஸ் மீட்டின் உதவியாளராக நாகர்கோவிலில் பணியாறினார். சார்ல்ஸ் மீட் நெய்யூரில் பணியாற்றியபோது அங்கே அவருடைய உதவியாளராகப் பணியாற்றினார்.

மார்த்தாண்டம் மத்திகோடு சபையில் வேதமாணிக்கத்தால் மதம் மாற்றப்பட்ட முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவரான மாடன் மார்த்தாண்டனின் மகன் வேதமாணிக்கம் போதகர் தலைமையில், கொத்தனார்விளை ஆலயத்தில், தேவவரம் முன்ஷியின் மூத்த மகளான லோய்ஸ் புத்தூல்ப்பை சார்ல்ஸ் மீட் 1851-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தினால் ஏற்பட்ட எதிர்ப்பால் தம் பதவியை இராஜினாமா செய்த மீட் திருவனந்தபுரத்திற்குச் சென்று திருவிதாங்கூர் ரெஸிடெண்டின் உதவியாளராக ஆனார். தேவவரம் முன்ஷியும் அவருடன் சென்று திருவனந்தபுரத்தில் வாழ்ந்தார்

திருவனந்தபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தின் தமிழ் வழிபாடு நடத்தும் பொறுப்பைப் பல ஆண்டுகள் ஏற்று நடத்தினார். இறுதிக்காலத்தில் மகனின் மரணம் இவர் உள்ளத்தை சோர்வடையச் செய்தது. லண்டன் மிஷன் சபையின் எதிர்ப்பும் தனிமைகொள்ளச் செய்தது. இகாரணங்களால் சில கையெழுத்துப் பிரதிகள் முடிவடையவில்லை.

இலக்கியப்பணிகள்

தேவவரம் புகழ்பெற்ற கவிஞராகவும், கிறிஸ்தவ இறையியல் அறிஞராகவும் திகழ்ந்தார். ஜான்பால்மர், நத்தானியேல் செட்டியார், தேவவரம் ஆகியோர் குமரி மாவட்டத்தில் உலக்கை அருவிக்குச் சென்று அசம்பு மலையின் உயரமான பகுதியிலிருந்து ஜெபம் செய்ய ஆரம்பிக்கும்போது ஒருவரிடமும் வேதாகமம் இல்லாததை உணர்ந்து தேவவரம் பைபிளில் இருந்து ஒரு சங்கீதத்தைத் தமிழ்ச்செய்யுளாக உடனே பாடினார் என்றும் அப்பாடல் புகழ்பெற்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. முன்ஷி என்பது மொழியறிஞருக்கான பெயர். தேவவரம் முன்ஷி என்றும் தோமுனியார் என்றும் அழைக்கப்பட்டார்

கீர்த்தனைகள்

தேவவரம் முன்ஷியார் எழுதியவற்றுள் ஒன்பது கீர்த்தனைகள் மட்டும் இன்று கிடைக்கின்றன. அவை பின்வருமாறு :

  • அடியேன் மனது வாக்கும்
  • அதிமங்கலக் காரணனே
  • இயேசு நாயகனைத் துதிசெய்
  • காரும் கிறிஸ்தேசுவே
  • சேரும் கிறிஸ்தேசுவே எனைச்சேரும்
  • தேவசுதன் பூவுலகோர்
  • நித்தமும் சிந்தித்து சிந்தித்து
  • வருவார் விழித்திருங்கள்
  • வாரும் தேற்றரவரே
பிற படைப்புகள்

வேதவிதிக்குறள்: கிறிஸ்தவச் சமயக் கருத்துகளைக் குறள் வடிவில் தருவது இந்நூல்.

திருட்டாந்த மாலை: கிறிஸ்தவ நெறிமுறைகளை கூறுகின்றது. ஔவையாரின் மூதுரை நூலைப் பின்பற்றி இயற்றப்பட்டது. நான்கு அடிகளால் ஆனது. முதல் இரண்டு அடிகள் கிறிஸ்தவ நெறியைச் சுட்டுவனவாகும். இறுதி இரண்டு அடிகள் விவிலிய மேற்கோளாகவும் அமைந்துள்ளன.

சிந்து கவிமாலை:பல்வேறு கீர்த்தனைகள் அடங்கிய நூல்

செம்மொழி மாலிகை:ஔவையாரின் ஆத்திச்சூடியைப் போன்று கிறிஸ்தவக் கருத்துகளைச் சுருங்கக் கூறும்நூல்

சங்கீத வாரணம்: தாவீதின் சங்கீதத்தைப் பாடல் வடிவில் தரும் நூல்

நல்லறிவின் சாரம்: வினாவிடைப் பாடலாக விவிலியச் செய்திகளை கூறுவது.

அகராதி

தேவவரம் முன்ஷிவீரமாமுனிவரின் சதுரகராதியைப் பின்பற்றி முழுமையாக்கி சதுரகராதியை எழுதினார். தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல்லையும், வினைச் சொல்லையும் விளக்கும் வகையில் பஞ்சகராதி, வினையகராதி ஆகியவற்றை எழுதினார். வினையகராதி முழுமை பெறாததால் நூல் வடிவம் பெறவில்லை. பைபிள் செய்திகளைஅகரவரிசையில் சொல்லும் வேதஅகராதி , பைபிள் பெயர்களை அகரவரிசையில் சொல்லும் பெயரகராதி ஆகியவற்றையும் எழுதினார்.

வெளியீட்டாளர்

1830-ல் நெய்யூரில் அருள்திரு. மீட் போதகரால் தொடங்கப் பட்ட கைப்பிரதிக் கழகத்தில் செயலர், முதன்மை எழுத்தர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளின் மூலம் 150 வெவ்வேறு தலைப்புகளில் கைப்பிரதிகளை வெளியிட்டார்.

மறைவு

தேவவரம் முன்ஷி திருவனந்தபுரத்தில் டிசம்பர் 28, 1874-ல் ஆம் நாள் காலமானார். அவரது உடல் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்துநாதர் ஆலயத்திலுள்ளக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலக்கிய இடம்

தேவவரம் கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞராகவும் கிறிஸ்தவ மதத்திற்குரிய அகராதிகளின் ஆசிரியராகவும் மதிப்பிடப்படுகிறார்

நூல்கள்

  • வேதவிதிக்குறள்
  • திருட்டாந்த மாலை
  • சிந்து கவிமாலை
  • செம்மொழி மாலிகை
  • சங்கீத வாரணம்
  • நல்லறிவின் சாரம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jun-2023, 09:21:21 IST