கணியன் பூங்குன்றனார்: Difference between revisions
Line 82: | Line 82: | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
* புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் First Edition 1947 - மறு பதிப்பு பூம்புகார் பதிப்பகம் (2009)https://sites.google.com/site/budhhasangham/Home?authuser=0 | * புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் First Edition 1947 - மறு பதிப்பு பூம்புகார் பதிப்பகம் (2009) | ||
*இந்து தமிழ் திசை, 4-பிப்ரவரி-2020 | * https://sites.google.com/site/budhhasangham/Home?authuser=0 | ||
* இந்து தமிழ் திசை, 4-பிப்ரவரி-2020 | |||
* யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப் 14, 2021 | * யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப் 14, 2021 | ||
Revision as of 16:12, 24 February 2022
கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனத் தொடங்கும் புகழ் பெற்ற புறநானூறு பாடலை இயற்றியவர். சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
ஊர் மற்றும் பெயர்
கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தவர் என கருதப்படுகிறது. பூங்குன்றம் என்ற ஊரின் பெயர் தற்போது மகிபாலன்பட்டி என வழங்கப்படுகிறது.
கணியன் என்னும் முன்னொட்டுச் சொல் நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம் அல்லது கணியம் அறிந்தவர் என்பதை உணர்த்துகிறது.
படைப்புகள்
கிடைக்கப் பெற்றுள்ள சங்கப் பாடல்களில், இரண்டு பாடல்களை கணியன் பூங்குன்றனார் இயற்றியுள்ளார். எட்டுத்தொகை நூல்களான புறநானூற்றின் 192- ஆம் பாடலும் நற்றிணையின் 226- ஆம் பாடலும் இவர் இயற்றியவையாகும்.
பாடல்கள்
நற்றிணை- 226
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல் நாந்தம் உண்மையின் உளமே அதனால் தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச் சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் இன்ன நிலைமைத்து என்ப என்னோரும் அறிப இவ்வுலகத்தானே.
நவீன தமிழில்: மருந்து தரும் மரம் அழியும்படி அதனை பாவிக்கமாட்டார்கள் தன் வலிமை கெட ஞானியர் தவம் இயற்ற மாட்டார்கள் குடிமக்களின் வளம் குன்ற மன்னர் வரி பெறமாட்டார் ஆயினும், அவர் இருப்பதால் நலமாய் இருக்கும் நம்மைவிட்டு தான் செய்வது என்னவென்றறியாது, வருந்தியபடி நீண்ட பாலை வழியில் பிரிந்து சென்றுவிட்டார் நம் தலைவர் ஆடவரின் இயல்பு இதுவென சான்றோரும் உலகோரும் அறிந்துள்ளனர்
புறநானூறு- 192
“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
நவீன தமிழில்: எதுவும் சொந்த ஊரே அனைவரும் உறவினரே தீமையும் நன்மையும் பிறர் தர வருவன அல்ல துயரமும் ஆறுதலும் அப்படியே சாவு புதியதல்ல, ஆகவே வாழ்வு இனிதென மகிழ்வதில்லை அது தீயதென்று மனம் கசப்பதுமில்லை மின்னல் வானம் குளிர் நீரெனப் பொழிந்து கற்களில் மோதி ஒலித்திறங்கி பரந்தொழுகும் பெருநதியின்மீது தெப்பம் போல உயிர் தன் நியதியையே கடைபிடிக்கும் என்று ஆய்ந்தோல் சொல்லி தெளிந்தோம் என்பதால் மாட்சி மிக்க பெரியோரை வியந்து வணங்க மாட்டோம் அதைவிட முக்கியமாக சிறியோரை இகழவும் மாட்டோம்
பாடப்பட்ட காலம்
புறநானூற்று பாடல்களில் அப்போதைய தமிழ் நிலத்துக் காட்சிகள் காணக்கிடைக்கிறது. சிற்றரசர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவதையும், மற்றவர் நிலங்களை தீ வைத்து கொளுத்துவதையும், நீர் நிலைகளை யானையைக் கொண்டு அழிப்பதையும், பசுக் கூட்டங்களை கவர்வதையும் பெரும்பாலான பாடல்கள் காட்டுகின்றன. சில பாடல்களில் மனித ஊன்களை சமைத்து களப் பேய்களுக்கு ஊட்டுவதாகக் காட்டுவது கற்பனை எனக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பும் பிரிவினையும் வஞ்சமும் கொண்டிருந்தார்கள் என்பதை நுட்பமாக காட்டுகின்றன. இதைப் போன்ற பாடல்களுக்கு மத்தியில் தனித்து நிற்குமாறு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனத் தொடங்கும் இப்பாடலை இயற்றியிருக்கிறார் கணியன் பூங்குன்றனார்.
மதிப்பீடு
சிறு சிறு குழுக்களாக பிரிந்து தமிழ்நிலச் சிற்றசர்கள் வன்மத்துடன் மோதிக் கொண்டிருந்த காலத்தில், கணியன் பூங்குன்றனார் உலகம் முழுவதையும் ஒன்றாகக் கண்ட தன் பெரும் தரிசனத்தை இப்பாடலாக இயற்றியுள்ளார். நன்மையோ- தீமையோ, மகிழ்ச்சியோ- துயரமோ, உயர்வோ- தாழ்வோ எதுவுமே இந்த வாழ்வில் முக்கியம் இல்லை, எதற்காகவும் தலைவணங்க வேண்டியதில்லை வாழ்க்கை அவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று என்ற மெய் ஞானத்தை உரைக்கிறார்.
சிறப்புகள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தின் இசையில் அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 2019- இல் வெளியிடப்பட்டது. இப்பாடல், அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது.
நினைவிடம்
தமிழ்நாடு அரசு சார்பாக கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்ததாக கருதப்படும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
- புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் First Edition 1947 - மறு பதிப்பு பூம்புகார் பதிப்பகம் (2009)
- https://sites.google.com/site/budhhasangham/Home?authuser=0
- இந்து தமிழ் திசை, 4-பிப்ரவரி-2020
- யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப் 14, 2021
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.