செலாஞ்சார் அம்பாட் (நாவல்): Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 41: | Line 41: | ||
* [https://selliyal.com/archives/63170 தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை – ரெ.கார்த்திகேசு] | * [https://selliyal.com/archives/63170 தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை – ரெ.கார்த்திகேசு] | ||
* Malaysia Today without fear and Favour 1985 -Tan Chee Khoon (pg 51 | * Malaysia Today without fear and Favour 1985 -Tan Chee Khoon (pg 51 | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:மலேசிய நாவல்கள்]] | [[Category:மலேசிய நாவல்கள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 09:27, 19 May 2023
செலாஞ்சார் அம்பாட் (Selancar empat) கோ. புண்ணியவானின் இரண்டாவது நாவல். செலாஞ்சார் அம்பாட் என்ற நிலப்பகுதிக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 40 பேருக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லும் தமிழ் நாவல் இது.
எழுத்து / வெளியீடு
செலாஞ்சார் அம்பாட் 2013-ல் மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவானால் எழுதப்பட்டது. இந்நாவல் 'தீப ஒளி' நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது.
நாவலின் வரலாற்றுப் பின்னணி
சுதந்தரத்துக்குப் பின்னர் மலேசியாவில் குடியுரிமை பெறத் தகுதியிழந்த இந்தியர்கள் பலர் வாழ்வாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கினர். இந்நிலையில் ரப்பர் விலை வீழ்ச்சியும் அரசியல் நிலைத்தன்மையின்மையினாலும் வெளிநாட்டுத் தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டங்களை உடனடியாக விற்றுவிட்டு சொந்த நாட்டுக்கே திரும்ப முற்பட்டனர். பெரிய தோட்டங்கள் சிறிய தோட்டங்களாகத் துண்டாடப்பட்டன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு இத்தோட்டங்களை சீனர்கள் வாங்கினர். துண்டாடல் காரணமாகப் பலர் ரப்பர்த் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு குடியுரிமையின்மையும் ஒரு காரணமாக தலையெடுத்தது. இந்நாவல் அந்தக் காலக்கட்டத்தின் மலேசியக் குடியுரிமை பெறுவதில் தோல்விகண்டவர்கள் எதிர்நோக்கிய இன்னல்களை புனைவாக்கித் தந்திருக்கிறது. குடியுரிமையற்றவர்கள் (நீல அடையாள அட்டை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்திற்குத் திண்டாடிய கையறு நிலையில் இருக்கும்போது பலர் தினக் கூலிகளாகவும், குறைந்த சம்பளத்தில் குத்தகைப்பணி செய்யவும் தயாராகினர்.
ஃபெல்டா என்பது, நாட்டின் விவசாய மேம்பாடு, கம்யூனிஸ்டுகளின் பதுக்கிட அழிப்பு, பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாடு ஆகிய பல்நோக்குத் திட்டத்துடன் அரசாங்கம் உருவாக்கிய நில குடியேற்றத் திட்ட நிறுவனமாகும். குடியேற்றக்காரர்கள் காடுகளை அழித்து செம்பனை மரங்களை நடவு செய்து வாழ நிலமும் வீடும் அதற்கான கடன் வசதிகளையும் அரசு வழங்கியது. குடியேற்றவாசிகள் காடுகளில் குடியேற தயங்கிய போது காடுகளை சுத்தப்படுத்தும் முன்னேற்பாடுகளை துணை குத்தகைகளின் வழி ஃபெல்டா செய்து கொடுத்தது. ஒப்பந்தப்படி காடுகள் அழிக்கப்பட்டு செம்பனை கன்றுகள் வளர்ந்த பின்னர் அவை குத்தகைக்காரரால் ஃபெலடாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
அவ்வாறு தோட்டத்தில் வேலையின்மையில் தவித்த 40 தமிழர்கள் 1983 ஆம் அண்டு குத்தகையாளரால் புதிய நிலமேம்பாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செம்பனை தோட்டம் அமைக்க பெரும்காடுகளையும் புதர்களையும் அழிக்கவும், செம்பனை கன்றுகளை நட்டு வளர்க்கவும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தென்கிழக்கு பஹாங் ஃபெல்டா நிலக்குடியேற்ற திட்டத்தில் அமைந்துள்ள செலாஞ்சார் அம்பாட் மற்றும் தீகா எஸ்டேட் என்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நாற்பது பேரும் (பெண்கள் சிறுவர்கள் உட்பட) துணை குத்தகையாளரால், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்கள் ஊதியம் தரப்படாமலும் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இடத்தில் தங்கவைக்கப்பட்டும் கொடுமை செய்யப்பட்டதோடு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளான தகவல் நான்கு ஆண்டுக்குப் பின் சரஸ்வதி என்ற பெண்ணின் வழி தெரியவந்தது. காசநோய் சிகிச்சைக்காக, அருகில் இருந்த மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி குத்தகையாளரின் குண்டர்களிடமிருந்து தப்பினார். அவர் வழி தெரியவந்த அக்கொடும் சம்பவம் நாளிதழ்களில் வெளிவந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
கதைச்சுருக்கம்
தோட்டத்திலிருந்து ஆடுமாடுகளைப்போல ஒரு லாரிக்குள் அடைத்து அழைத்துச்செல்லப்படும் மக்கள் எல்லாரையும் ஒரு தகரக் கொட்டியில் தங்கவைக்கப்பட்டார்கள். அது தண்ணீர் மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத மாட்டுத் தொழுவம் மாதிரி கட்டப்பட்ட கொட்டடி. இந்த 40 பேரும் ஒரே கூரையின் கீழ்தான் தங்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். ரப்பர்த்தோட்ட வேலையை விட முற்றிலும் புதிய வேலைச்சூழலைக்கொண்டது. அவர்களுக்கு குலை வெட்டுவது, பழம் பொறுக்குவது, அதிக சுமைகொண்ட குலைகளைத் சுமந்துகொண்டு லாரியில் ஏற்றுவது போன்ற கடுமையான வேலைகளை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து கொட்டடி வந்து சேரும்போது பொழுது சாய்ந்துவிடுகிறது. குத்தகையாளரே நடத்தும் கடையில்தான் சமையல் பொருட்களை வாங்கிக்கொள்ளவேண்டும். சம்பளத்தில் அக்கடன் பிடித்துக்கொள்ளப்படும். கூலிகளுக்குப் பேசிய சம்பளத்தைக் கூடக் கொடுப்பதில்லை. அடிப்படை உரிமைகளைக்கோரும் வேளைகளில் அவர்கள் அடி உதை வாங்குகிறார்கள். அங்கே, சுகாதாரமற்ற வாழ்வு,மரணம், மனித வதை, பாலியல் வல்லுறவு, நோய்மை என ஒரு அவல வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். கொத்தடிமைகளைச் சாராயப் போதையிலேயே வைத்து அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அந்த அவலமான வாழ்க்கைச் சூழலில் தன் மகன் தாமுவை போதிய மருத்துவ வசதி இல்லாமல் இழந்துவிட்ட முக்கியக் கதாப்பாத்திரமான முனியம்மா அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்து ஒருநாள் தப்பித்தும் விடுகிறாள். அவள் அங்கு நடந்த கொத்தடிமைக் கொடுமையை வெளியுலகுக்குச் சொல்லி அவர்களுக்கு விடியலைக் காட்டுவதாக கதை முடிகிறது.
மேற்கண்ட வரலாற்று துயரை கோ. புண்ணியவான் தன் நாவலின் மையமாக்கியிருந்தாலும் புனைவுத் தன்மையுடன் சில மாற்றங்களைச் செய்துள்ளார். உதாரணமாக அந்த தொழிலாளர்கள் காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட சூழலை மாற்றி வளர்ந்த செம்பனை மரங்களில் குலை இறக்கும் வேலையையும் மரங்களை பராமரிக்கும் வேலைகளையும் அவர்கள் செய்ததாக சித்தரிக்கிறார்.
கதைமாந்தர்கள்
- முனியம்மா - தோட்டத்திலிருந்து தப்பிச் சென்று கொத்தடிமைச் சூழலை வெளியுலகுக்கு அறியப்படுத்துகின்றாள்.
- தாமு - முனியம்மாவின் ஐந்து வயது மகன்
- இருளப்பன் தண்டல் - தோட்டத்து மக்களை செலாஞ்சார் அம்பாட் நிலக்குடியேற்றத்துக்கு அழைத்துச் செல்பவர்.
- நாகா - கொட்டடியில் தங்கியிருக்கும் மக்களைக் கண்காணிக்கும் சீனர்களின் அடியாள்
- மணி - கொட்டடியில் தங்கியிருக்கும் மக்களுக்குக் காமத்தொல்லை தருகின்றவன். சீனரின் கையாள்.
- சாத்து கிழவன் - தோட்டத்தில் வேலை செய்ய முடியாத வயதானவர்
- சாலம்மா, வேலாயி, ராமையா- செலாஞ்சார் நிலக்குடியேற்றத்தில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள்.
- ராஜன் - செலாஞ்சார் அம்பாட் மக்களின் சூழலை நாளிதழில் வெளியீடும் நிருபர்.
இலக்கிய இடம்
கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’, சமகால உண்மைச் சம்பவம் ஒன்றை தளமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட சமுதாய புனைவாகவே அமைந்திருக்கின்றது. செலாஞ்சார் அம்பாட்டை வாசலாக கொண்டு இந்நாட்டு அரசியல் பொருளாதார மாற்றங்களின் வரலாற்றை உரையாட நிரம்பவே இடம் உள்ளது. இந்நாட்டு வரலாற்றை குறிப்பாகத் தென்னிந்திய தோட்ட தொழிலாளர் வரலாற்றை மீட்டுணர இந்நாவல் பெரிதும் துணை புரிகிறது என்று அ. பாண்டியன் சொல்கிறார்.
செலாஞ்சார் அம்பாட் நாவல் நிகழும் நிலப்பின்னணி, வரலாற்றுப்பின்னணி சார்ந்த பல தகவல் குறைபாடுகளும் போதாமைகளையும் ஈடுசெய்ய உறவுகளுக்கிடையிலான உணர்ச்சிகளை மிகைப்படுத்தியும் மனித வதையைக் காட்சிப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது என எழுத்தாளர் ம. நவீன் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- அஸ்ட்ரோ வானவில் நாவல் போட்டி 2013 – இரண்டாவது பரிசு
- தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் சிறந்த நூல் – 2014
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறந்த நூல் -2014
உசாத்துணை
- செலாஞ்சார் அம்பாட் நாவலின் முன்னுரை.
- புனைவின் துர்க்கனவு - ம.நவீன்
- கோழைகளின் விதி அடிமை வாழ்வே - அ. பாண்டியன்
- திறவுகோல் 2: செலாஞ்சார் அம்பாட் - அழகுநிலா
- தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை – ரெ.கார்த்திகேசு
- Malaysia Today without fear and Favour 1985 -Tan Chee Khoon (pg 51
✅Finalised Page