வர்மத் தொகுப்பு: Difference between revisions
(Corrected typo errors;) |
(; Added info on Finalised date) |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 90: | Line 90: | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3lJt9&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#book1/ வர்மத்தொகுப்பு: தமிழ் இணைய மின்னூலகம்] | *[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3lJt9&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#book1/ வர்மத்தொகுப்பு: தமிழ் இணைய மின்னூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|04-Sep-2024, 18:32:01 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 01:03, 5 September 2024
வர்மத் தொகுப்பு (2007), பல்வேறு ஓலைச்சுவடிகளிலிருந்து தொகுக்கப்பட்ட நூல். சென்னை இந்திய மருத்துவ ஓமியோபதித் துறை இந்நூலை வெளியிட்டது. இதன் பதிப்புரிமை தமிழ்நாடு அரசைச் சார்ந்தது. இந்நூலில் 15 வர்மச்சுவடி நூல்கள் இடம்பெற்றன. இதன் பதிப்பாசிரியர் முனைவர் ஆனைவாரி ஆனந்தன்.
வெளியீடு
இந்திய மருத்துவத்தின் ஓமியோபதித் துறை, சென்னைப் பிரிவின் சார்பில் பல்வேறு நூல்கள் வெளிவந்தன. அவற்றுள், 2007-ல், தமிழில் வெளிவந்த நூல்களுள் ஒன்று வர்மத் தொகுப்பு. வர்மக் கலை பற்றிய 15 வர்மச் சுவடி நூல்களின் தொகுப்பே இந்நூல். இதன் பதிப்பாசிரியர் முனைவர் ஆனைவாரி ஆனந்தன். உதவிப் பதிப்பாசிரியர்கள், த. அழகப்பராசு, திருமதி செ. இரா. பிரசன்னா. இதன் பதிப்புரிமை தமிழ்நாடு அரசைச் சார்ந்தது.
நூல் அமைப்பு
வர்மத் தொகுப்பு நூலில் கீழ்க்காணும் சுவடி நூல்கள் இடம்பெற்றன.
- வர்ம சாத்திரம்
- வர்மக் கண்ணாடி - 1
- வர்மக் கண்ணாடி - 2
- வர்மக்கண்டி
- வர்மப் பீரங்கி
- வர்மப் பீரங்கித் திறவுகோல்
- வர்ம அடங்கல் முறை
- வர்ம வைத்தியம்
- பீரங்கிச் சூத்திரம்
- நரம்புச் சூத்திரம் - 1
- நரம்புச் சூத்திரம் - 2
- பொன்னூசித் திறவுகோல்
- பஞ்ச சூத்திரத் திறவுகோல்
- சாரித் திறவுகோல்
- வர்ம விளக்கம்
உள்ளடக்கம்
வர்மத் தொகுப்பு நூலில் வர்மக் கலையின் தோற்றம், வளர்ச்சி, வர்மம் என்றால் என்ன, வர்மத் தாக்குதல்களால் எவ்வகை அபாயங்கள் நேரும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி, வர்மத்தாக்குதல் ஏற்பட்டால் மீளும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றிய விளக்கங்கள் இடம் பெற்றன. வர்மம் என்பதன் பிற பெயர்களாக இந்நூல் அடக்கம், அருவம், அக்கிராணம், ஆவி, ஈடு, உயிர், ஏமம், ஒளி, ஒடிவு, கந்தம், கருவி, கலை, காலம், காற்று, சரம், சர்வாத்மா வாழும் வீடு, வன் சுவாசம், சூட்சம், சைவம், பரசிவம், பரம், பிராணன், புரவி, பேசி, பொருத்து, மாய்கை, மூச்சு, யோகம், வன்மம், வாசி, வாயு, விசி போன்ற மாற்றுப் பெயர்களைக் குறிப்பிட்டது.
வர்மத் தாக்குதலிருந்து மீள்வதற்கான பச்சிலை மருத்துவம், எண்ணெய் மருத்துவம், பிற மருத்துவ வழிமுறைகள் பற்றி இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பாடல் நடை
நேர் வர்மம்
சத்தியமா இன்னுமொரு அடவுக் கேளு
தயவாக நெஞ்சிலக்கம் எலும்பில் தானே
நித்தியமா பத்து விரலுக்குத் தாழே
நேர்வர்மம் அதில்கொண்டால் குணத்தைக் கேளு
வெத்தியுடன் உடல்குன்றும் உடல்வி யர்க்கும்
வேர்வை நீர் தன்னை ஒலிக்கும் பாரு
பத்தியாய் நாழிகைதான் பதினஞ் சுக்குள்
பன்மையுடன் யிளக்குமென்று பகர்ந்து சொல்வேன்
வர்மப் பெயர்கள்
அறிவான ஆணிவர்மம் ஆந்தை வர்மம்
அடங்குந்தொகை ஒன்பதையு மறியச் சொன்னோம்
சிறியான கரமதிலே ஏழும் செப்ப
தெட்சணையின் காலமொடு சுண்டோதிரி வர்மம்
நெறியான சுண்டோதிரி வர்மத் தோடு
நின்ற வெள்ளைவர்மம் மணிபந்த வர்மம்
விரியான ஆந்தைவர்மம் கவளிக் காலம்
கவளியோடு மூன்றுபேர் ஒன்ற தாமே
ஒன்றான மொளிவர்மம் முடிமுளி வர்மம்
ஒருபேருங் கொண்டாலும் வர்மம் ரண்டாம்
நன்றான முட்டுவர்ம மிவ்வா றேழும்
நாடியதோர் கரமதிலொ மெனவுஞ் சொன்னார்
குன்றாத காலதனில் மூவைந்தும் சொல்லக்
குறிப்புடனே விபரமதை அறியக் கேளு
நன்றான வெள்ளைவர்மம் உப்புகுத்திக் காலம்
மருவுமொழி குன்றிகையின் காலந் தானே
பட்சி வர்மம் கண்ணாடி காலம்
பாரே நீ பட்சிவர்மம் கொண்ட தானால்
பண்பான அளவிரண்டு மொதுக்கிப் போடும்
வாரான வாயதுவும் பூண்டு கோணும்
அலகொதுக்கும் வலித்துவா யகலும் பாரு
தாரான கண்ணாடி காலங் கொண்டால்
மயங்கிவிடும் தேகமது தளர்ச்சை மெத்தை
ஈரான இருசெவியோ டிருநாசி யோடே
ரத்தம்வரும் கண்ணடைக்கும் இயல்பான் பாரே
பிழுத்து வர்மம்
ஆகவே பிழுத்துவர்மம் கொண்டு தானால்
அதுசரீரம் கிடுகிடென்று ஆடு மப்பா
நாகமது போல்காரித் துப்பும் பத்து
நாளைக்குள் தீராவிட்டால் நம்ப வேண்டாம்
தோகைதனைத் தூசிக்கவே கொண்டு தானால்
சோரைவிழும் மலசல மடைத்துக் கொள்ளும்
சாகமற கழுத்து வீங்கும் தண்ணீர்
தாகமுண்டால் பதினொன்றுதப்பா தன்றே
மதிப்பீடு
வர்மத்தொகுப்பு நூல், பல்வேறு ஓலைச்சுவடி நூல்களின் தொகுப்பு. வர்மக்கலை பற்றி, அதன் தன்மைகள் பற்றி, வர்மத் தாக்குதல்களிலிருந்து விடுபடும் வழிமுறைகள், மருத்துவமுறைகள் பற்றி விளக்கும் அரிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:32:01 IST