under review

பெங்களூர் நாகரத்தினம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected typo errors;)
 
(One intermediate revision by the same user not shown)
Line 33: Line 33:
* [https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/ திருவையாற்றில் தியாகப் பிரம்மம் சமாதி உருவான கதை: tamilandvedas]
* [https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/ திருவையாற்றில் தியாகப் பிரம்மம் சமாதி உருவான கதை: tamilandvedas]
* [https://www.tamilhindu.com/2011/01/bangalore-nagarathinammal/ குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி: tamilhindu]
* [https://www.tamilhindu.com/2011/01/bangalore-nagarathinammal/ குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி: tamilhindu]
* [https://saravananagathan.wordpress.com/2015/02/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0/ நாகரத்தினம்மாள் தியாகராஜர் புகழ் காத்த தேவதாசி: பூ.கொ.சரவணன்]
* [https://saravananagathan.wordpress.com/2015/02/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0/ நாகரத்தினம்மாள் - தியாகராஜர் புகழ் காத்த தேவதாசி: பூ.கொ.சரவணன்]




Line 42: Line 42:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]]
[[Category:வரலாற்றாய்வாளர்]]

Latest revision as of 15:56, 22 November 2025

நாகரத்தினம்மாள்

பெங்களூர் நாகரத்தினம்மாள் (நவம்பர் 3, 1878 - மே 19, 1952) இசைக்கலைஞர், கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர், புரவலர், வரலாற்று ஆய்வாளர். திருவாரூரில் தியாகராஜருக்கு ஆலயம் அமைத்தார். தேவரடியார் மரபில் வந்தவர். நாகரத்தினம்மாள் தன் வாழ்க்கையின் முற்பகுதியை இசைக்காகவும், பிற்பகுதியைத் தியாகராஜரின் புகழ் பரப்பிற்காகவும் செலவிட்டார். இவர் ஆரம்பித்து வைத்த ஆராதனை விழா நிகழ்வு திருவையாற்றில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறப்பு, கல்வி

நாகரத்னம்மா 1878, நவம்பர் 3 அன்று வழக்கறிஞர் சுப்பாராவ், புட்டலட்சுமி இணையருக்கு மகளாக நஞ்சன்கூட்டில் பிறந்தார். புட்டலட்சுமியின் மூதாதையர்கள் மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் பணியாற்றினர். கருத்துவேறுபாடு காரணமாக புட்டலட்சுமி, சுப்பாராவைப் பிரிந்தார். நாகரத்னம்மா மைசூர் மகாராஜாவின் அரசவையில் கிரிபட்டா திம்மையாவிடம் சமஸ்கிருதமும், இசையும் பயின்றார். தனது ஐந்து வயதில் தேவரடியார் மரபில் நுழைந்தார். ஒன்பது வயதிற்குள் இசையிலும், நாட்டியத்திலும், வடமொழியிலும் புலமை பெற்றார். மைசூரை விட்டு வெளியேறிய நாகரத்னம்மா, தனது மாமா வெங்கிடசாமி அப்பாவின் கீழ் வயலின் கலைஞராகச் சேர்ந்தார். இங்கு தனது படிப்பைத் தொடர்ந்தார். கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார். வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரிடம் சீடரானார். பெங்களூர் கிட்டண்ணாவிடம் பரதம் பயின்றார். சென்னை திருவேங்கடாசாரியிடம் அபிநயம் பயிற்சி பெற்றார்.

பெண்ணியச் செயற்பாட்டாளர்

ஆண் ஆதிக்கம் செலுத்தும் திருவிழாவிற்குள், பெண் கலைஞர்களுக்கு அதில் பங்கேற்க சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அளவுக்கு பெண்ணிய ஆக்கிரமிப்பாளராக இருந்தார். மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்துள்ளார்.

நாகரத்தினம்மாள் 1910 (நன்றி: ஸ்ரீராம்)

கலை வாழ்க்கை

பதினைந்து வயதில் வீணை சேசண்ணா இல்லத்தில் முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இசையோடு கூடிய கதாகலாட்சேபம் செய்தார். ஆண்கள் மட்டுமே கதாகலாட்சேபம் செய்த காலகட்டத்தில் முதல் முதலாக கதாகலாட்சேபம் செய்த பெண்ணாக நாகரத்னம்மாள் இருந்தார். நீதிபதி நரஹரிராவின் ஆதரவில் சென்னையில் ஒரு "கச்சேரி கலைஞராக" பிரபலமானார். ஹரிகதை பாடுவதில் ஆண்கள் மட்டுமே ஈடுபட முடியும் என்கிற விதியைத் தகர்த்தி ஹரிகதை பாடினார். நாகரத்னம்மா அவரது காலத்தின் சிறந்த கர்நாடக பாடகர்களில் ஒருவராக இருந்தார். கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடினார். நடனத்தில் இவரது திறமை மைசூர் ஆட்சியாளர் ஜெயச்சாமராஜா உடையார் கவனத்தை ஈர்த்தது. இவரது திறமையால் ஈர்க்கப்பட்டு, இவரை தனது அரண்மனைக் கலைஞராக நியமித்தார். ஜெயச்சாமராஜா உடையார் இறந்ததைத் தொடர்ந்து, இவர் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார். திருவிதாங்கூர், பொப்பிலி, மற்றும் விஜய நகரம் போன்ற இடங்களின் அரசவைகள் இவருக்கு ஆதரவளித்தன. மைசூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவ், நாகரத்னம்மாவின் புரவலர்களில் ஒருவராக இருந்தார். இந்த காலகட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் ஆராதனையின் விளம்பரதாரராக, இந்தியாவின் சென்னையில் வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர். இவர் ஆரம்பித்து வைத்த ஆராதனை விழா நிகழ்வு திருவையாற்றில் இன்றும் இசையஞ்சலி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலநூறு இசைக் கலைஞர்கள் இச்சமாதியின் முன்பு குருவிற்குச் செய்யும் சிறப்பு விழாவாக இசையஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருபத்தியாறு ஆண்டுகளில் நூற்றுநாற்பத்தியாறு நகரங்களுக்கு பயணம் செய்து ஆயிரத்து இருநூற்று முப்பத்தியைந்து கச்சேரிகள் செய்தார்.

நாகரத்தினம்மாள் (நன்றி: telugu archive)

ஆன்மிக வாழ்க்கை

நாகரத்தினம்மாள் 1920-ல் திருவையாறு தலத்திற்கு வந்தார். தியாகராஜரின் சமாதி இடம் வெறுமையாக இருந்தது. தியாகராஜர் இவரது கனவில் தோன்றி சமாதி உள்ள இடத்தைத் தெரிவித்ததாகக் கூறியவர் அக்டோபர் 27, 1921-ல் சமாதியை நினைவாலயமாகக் கட்டினார். இதற்காக தனது வருமானம் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார். ஜனவரி 7, 1925-ல் தியாகராஜரின் சமாதி ஆலயத்திற்குத் திருக்குடமுழக்குச் செய்தார். சமாதிக்குரிய இடத்தைத் மன்னாசாகேப், இராஜாராமிடமிருந்து பெற்றார். தியாகராஜரின் சமாதியைச் சுற்றிலும் மண்டபம் கட்டினார். அங்கு தியாகராசரின் பாடல்களைக் கல்வெட்டுக்களில் வடித்தார். தினமும் தியாகராஜருக்கு பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தார். தியாகராஜர் ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தார். இந்த காலகட்டத்தில் சன்னியாசி வாழ்க்கைக்கு மாறினார். நாகரத்தினம்மாள் தன்னை 'தியாகராஜரின் தாசி' என்று அழைத்துக்கொண்டார். இதனை மையமாகக் கொண்டு "தியாகராசரும் தேவதாசியும்" என்ற ஆங்கில நூல் வெளிவந்தது. இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 'தேவதாசியும் மகானும்' என்ற பெயரில் வெளிவந்தது.

இலக்கிய வாழ்க்கை

கவிதை மற்றும் புராணக்கதைகள் பற்றிய புத்தகங்களை திருத்தி வெளியிட்டார். தஞ்சை மகாராஜா பிரதாபசிம்ஹாவின் அரண்மனைக் கவிஞரான, பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்துப்பழனியின் 'ராதிகா சாந்தவனம்' என்ற தெலுங்குக் காப்பியத்தை முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தார். திருமணமான ராதை என்ற பெண் தன்னை விட வயதில் குறைவான கிருஷ்ணனை காதலித்ததும், தன் காமத்தை மறுத்ததற்காக அவனைக் கடிவதுமான அந்தக் காமரசம் ததும்பும் கவிதைகளை உள்ளபடியே வெளியிட்டதுடன் அதனை தமிழில் 'ராதிகா ஸ்வயம்வரம்' என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டார். வாவில்லா சன்ஸ் நிறுவனத்தால் அந்நூல் வெளியிடப்பட்டது. பல காரணங்களுக்காக முத்துப்பழனி தேவதாசி என்ற உண்மை மறைக்கப்பட்டு, ஆண் கவிஞர் எழுதியது போல் வெளியிட்ட பதிப்புகளையும் கலைந்து அதை உள்ளபடியே நாகரத்தினம்மாள் வெளியிட்டது அக்காலகட்டத்தில் சர்ச்சையைக் கொணர்ந்தது. நாகரத்தினம்மாள் தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளை அறிந்தவர். 'மத்யா பானம்' என்னும் தெலுங்கு மொழி நூலையும், சமஸ்கிருதத்தில் 'ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி' என்ற நூலினையும், தமிழில் 'பஞ்சகீரண பௌதீகம்' என்ற நூலினையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

  • 1932-ல் 'வித்யா சுந்தரி' விருதினைப் பெற்றார்.
  • 1949-் இந்தியப் பிரதமர் நாகரத்தினம்மாளுக்கு 'தியாக சேவ கத்தா' விருதினை வழங்கினார்.
நாகரத்தினம்மாள் சமாதி

மறைவு

நாகரத்தினம்மாள் தமது இறுதிக் காலத்தைத் திருவையாற்றிலேயே கழித்தார். நாகரத்னம்மா 1952-ல் 74-ம் வயதில் காலமானார். தியாகராஜரின் சமாதிக்கு அடுத்ததாக நாகரத்னம்மாளுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

வெளியிட்ட நூல்கள்

  • ராதிகா சாந்தவனம்
  • மத்யா பானம்
  • ஶ்ரீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி
  • பஞ்சகீரண பௌதீகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 08:40:11 IST